search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    மார்த்தாண்டம் அருகே 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து உறவினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    அரசு டாக்டர்கள் குழு ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் தனித்தனியாக பரிசோதனை செய்தனர். அப்போது 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய 2 மாணவிகள் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக அழுது கொண்டே டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

    அந்த மாணவிகளை டாக்டர்கள் தனியாக பரிசோதித்தனர். இதற்கு முன்பு எப்போதெல்லாம் வலி ஏற்பட்டது என்றும் கேட்டனர்.

    மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் இரு மாணவிகளும் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

    அதிர்ந்து போன டாக்டர்கள் இந்த தகவலை பள்ளி ஆசிரியைகளுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

    குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் குறிப்பிட்ட சிறுமிகளையும் தனியாக அழைத்து அவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது சிறுமிகள் இருவரும் தங்கள் உறவினர் சரத் (வயது 20) என்பவர் அடிக்கடி இதுபோன்ற சில்மி‌ஷ வேலைகளில் ஈடுபடுவார் என்றனர். பல ஆண்டுகளாக அவர், இதுபோன்ற செயல்களை செய்ததாகவும், தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சரத் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

    2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சரத் தலைமறைவாகி விட்டார். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் மற்றும் போலீசார் சரத்தை தேடி வருகிறார்கள். #tamilnews
    வாட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் மாணவியை கடத்தி பாலியல் கொடுமை செய்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    காசிமேட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த மாணவிக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் மோகன் (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர்.

    இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மாணவி மாயம் ஆனார். இது குறித்து மாணவியின் தாயார் காசிமேடு போலீசில் புகார் செய்தார்.

    காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். இந்த நிலையில் 9-ந்தேதி மாணவி மாதவரம் பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டார். விசாரணையில் மாணவி கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

    மாணவியிடம் பழகிய வாலிபர் மோகன், 8-ந்தேதி அதிகாலை மாணவியை ஆந்திர மாநிலம் ரேணி குண்டாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதற்கு அவருடைய நண்பர் விஜய் என்பவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

    ரேணிகுண்டாவில் விஜய்க்கு சொந்தமான வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று மோகன், பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவியை மாதவரம் பஸ் நிலையத்தில் கொண்டு விட்டுவிட்டு தப்பிவிட்டார்.

    இந்த தகவலை போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் ஆந்திரா சென்று மாணவியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் மோகன், இதற்கு உறுதுணையாக இருந்த வாலிபர் விஜய் ஆகியோரை பிடித்து வந்தனர்.

    அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனம் அம்மாள், போக்சோ சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அதை தொடர்ந்து மோகன், விஜய் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    கோவையில் இன்று அதிகாலை மாணவி ஒருவர் காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன்.

    இவரது மகள் நந்தினி (வயது 25) டவுன்ஹாலில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நந்தினி நேற்று இரவு கல்லூரிக்கு திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கோவை காந்திபுரம் பார்க் கேட் சிக்னல் அருகே நடந்து சென்ற இவர் திடீரென புதிய பாலத்தில் ஏறி கீழே குதித்தார்.

    இதில் காயமடைந்த அவர் அலறித்துடித்தார். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் நந்தினியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நந்தினி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கடந்த 6 மாதங்களாக ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் முதற்கட்டமாக இருவரின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து பார்த்த போது பொருத்தம் இல்லை என கூறி உள்ளார்.

    இதனால் வேதனையடைந்த நந்தினி நேற்று கோவிலுக்கு சென்று விட்டு கல்லூரிக்கு திரும்பிய போது, பாலத்தில் இருந்து குதித்தது தெரிய வந்தது. இதுகுறித்து அறிந்ததும் நந்தினியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். #tamilnews
    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் இவ்வாறு வழங்கப்படுவதை பார்த்து மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மாணவ, மாணவிகள் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக திகழ செய்ய வேண்டும், என்றார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியுள்ள 15 வயது சிறுமி, அதே கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சவுந்தர்ராஜன் (38) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    மேலும் மாணவியை பள்ளியிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர், இந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. அதையும் மீறி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மற்றும் ஆங்கில பாடத்துக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவதாக ஆசிரியர் சவுந்தர்ராஜன் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆசிரியர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை மற்றும் மருத்துவ ஆய்வறிக்கை மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சவுந்தர்ராஜனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அவர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
    ரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.

    காதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.

    மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.

    அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    திருப்பூரில் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர், மாணவியை தொடர்ந்து வந்துள்ளார்.

    திடீரென மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த மாணவர் தொடர்ந்து மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவனை அழைத்து எச்சரித்து உள்ளனர்.

    இன்று விசாரணைக்கு வரும்படி மாணவரிடம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மாணவர் அவமானத்தில் சாணிப்பவுடரை குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ஈத்தாமொழி அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

    மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் அவரை தினமும் பின் தொடர்ந்தார். மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

    வாலிபரின் காதலை மாணவி ஏற்க மறுத்தார். மேலும் இது பற்றி பெற்றோரிடமும் கூறினார்.

    இதை அறிந்த வாலிபர் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்தார். தன்னை காதலிக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.

    இதைக்கேட்டு பயந்துபோன மாணவி, வாலிபரின் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதார். பள்ளிக்குச் செல்லவும் மறுத்தார்.

    வாலிபரின் தொல்லை அத்துமீறியதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதில் ஈத்தாமொழியை அடுத்த நெடுவிளையைச் சேர்ந்த வாலிபர் தபின் (வயது21) என்பவர் தனது மகளை பின் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார். கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று கூறியதோடு, தகாத வார்த்தைகளும் பேசுகிறார். போலீசார் அவரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் விசாரணை நடத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் தபின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார். #tamilnews
    அரூர் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #GKvasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்து இருப்பது, மிருகத்தனமான செயல். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடைபெறுவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

    காவல்துறையின் கடுமையான நடவடிக்கை மூலமும், சட்டத்தின் அடிப்படையிலும் இந்த கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணையை உடனடியாக வழங்க வேண்டும். இது போன்ற குற்றங்கள் இனி மேலும் நடைபெறாமல் இருக்க காவல்துறை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும்.



    நாட்டில் ஒவ்வொருவரும் இழிவான எண்ணங்களுக்கு இடங்கொடாமல், தனிமனித ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்ததையும் நாம் அனைவரிடமும் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #GKvasan
    எனது மகள் கற்பழிப்பு சம்பவம் நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார் என்று மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested

    தருமபுரி:

    மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-

    எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நான் ஆடு மேய்க்க சென்று விட்டேன். எனது மனைவி தோட்டத்து வேலைக்காக சென்று விட்டார். வீட்டில் என் மகள் மட்டும் தனியாக இருந்தார். அவர் மலம் கழிக்க வீட்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சதீஸ், ரமேஷ் ஆகிய 2 வாலிபர்களும் என் மகளை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்ட போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்து விட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை போனில் பேசியவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும். மறுநாள் காலை போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது அப்போதும் புகாரை வாங்க மறுத்து விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேசிய பிறகு எங்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். எனது மகளிடம் புகார் மனுவை எழுதி வாங்கி கொண்டனர். போலீசார் சொன்னதை அவர் எழுதி கொடுத்தார்.

    பின்னர் டி.எஸ்.பியை சந்தித்தோம். அவர் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின்னர் போலீசார் வேனிலேயே எங்களை அழைத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அப்போது டாக்டரிடமும் கற்பழிப்பு சம்பவத்தை கூற வேண்டாம் என்று போலீசார் தடுத்து விட்டனர். இதனால் வாந்தி - மயக்கம் ஏற்படுவதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் எனது மகளை காப்பகத்தில் சேர்த்து விட்டனர். தொடர்ந்து அவருக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தோம். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். என் மகள் சாவு விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது மகளை சீரழித்தவர்களை போலீசார் தப்ப விட்டு விட்டனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது நடவடிக்கை எடுப்பதாக கூறி எங்களை ஏமாற்றி விட்டனர். மேலும் போலீசார் வாகனத்தில் எனது மகளை அழைத்து வந்து விட்டு என்னிடம் ரூ.4 ஆயிரம் வாங்கினார்கள். மேலும் 2 ஆயிரம் கேட்டனர். இப்போது நான் மகளை இழந்து தவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    எனது மகளை நாசம் செய்த 2 பேரையும் தூக்கில் போட வேண்டும். எனது மகளை சீரழித்தவர்களில் ஒருவரான ரமேஷின் தாயார் சிட்லிங் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு போலீசாருடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் அவருடைய பேச்சை கேட்டு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #DharmapuriGirlStudent #GirlMolested 

    அரூர் அருகே மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    மாணவியின் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர்.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லை.

    காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மோசமடைந்த நிலையில் மிகவும் தாமதமாகவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆனால், அங்கு தீவிர மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்துள்ளார். மிகக்கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளான மாணவியைக் காப்பாற்றும் வி‌ஷயத்தில் அக்கறையும், சமூகப் பொறுப்பும் இல்லாமல் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறை உள்ளிட்ட அனைவரின் செயலும் கண்டிக்கத்தக்கது.


    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மிகவும் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரு குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷின் தாயார் அப்பகுதியில் அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக கோட்டைப்பட்டி காவல்துறையினருக்கு கையூட்டு தருவதாகவும், அதனால் தான் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்புகார் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும் இதற்கு காரணம் ஆகும். அந்த வகையில் மாணவியின் சாவுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
    ×