search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அதை தடுத்தால் தோல்வி பயம் என்பதா? என்று பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #ponradhakrishnan #duraimurugan

    நாகர்கோவில்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அவற்றை வினியோகமும் செய்வார்கள். அதை தடுத்தால் தேர்தலில் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் கமி‌ஷனின் கடமை. பணப்பட்டுவாடா பல இடங்களிலும் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் கொடுக்கும் செயல்கள் நடைபெறுகிறது. இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    குமரி மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு உள்ளதை பெரிய பணி இல்லை என்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நாங்குநேரி தொகுதியில் எத்தனை சாலைகள் போட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 150 சாலைகள் போட்டுள்ளோம். இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளது. மக்கள் பிரதி நிதிக்கு இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது.

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பாராளுமன்ற தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறியது என்ன ஆனது என்று கேட்கிறார்கள். குமரி மாவட்ட மக்கள் தொகை 20 லட்சம். இவர்களுக்கும் நாடு முழுவதும் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை சுய வேலை வாய்ப்பு மூலம் தொழில் அதிபர்களாக ஆக்க நினைக்கிறோம். துறைமுகம் மூலம் பல ஆயிரம் பேருக்கு அந்த திட்டத்தின் பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #duraimurugan

    துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    கொல்கத்தா:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

    இதனுடன் அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரிதுறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, சி.பிஎஸ்.இ பள்ளியில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்கம், டெல்லி,  உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது.

    அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு என் மீது பழி போடுவதா? என்று ஏ.சி. சண்முகம் ஆவேசமாக கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.


    அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.

    இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

    பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். #Duraimurugan #DMK #Raid
    வேலூர் :

    வேலூர் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்தனர். வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். அதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.  வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு  சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து  துரைமுருகன் கூறியதாவது:



    திடீரென நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றனர். விவரங்களை கேட்டோம். பிறகு தவறாக வந்து விட்டோம் என கூறினர். சிறிது நேரம் கழித்து யாருடனோ செல்போனில் பேசி விட்டு மீண்டும் வந்தனர், நாங்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறினர். யார், என்ன என்பது குறித்து தெரியாமல் உள்ளே விட மறுத்தோம். பின்னர் உள்ளே வந்து சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்று செயல்களில் அரசு ஈடுபடுவது முறையானதல்ல.

    நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரண கல்லூரி தான் வைத்துள்ளோம். ஆனால் வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது.  இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #Raid
    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். #Duraimurugan #DMK #Raid
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது.

    சென்னையில் அவருக்கு கோட்டூர்புரத்தில் வீடு இருக்கிறது.

    சென்னையில் அரசியல் பணிகள் இல்லாத நாட்களில் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    கதிர்ஆனந்துக்கு ஆதரவாக துரைமுருகன் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காந்திநகரில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையே வேலூர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும், பறக்கும் படையினரும் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    இரவு 11.30 மணியளவில் மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை.

    அவர் வருவதற்குள், அதிகாரிகள் உள்ளே சென்று அறையில் அமர்ந்தனர். வருமானவரி சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து துரைமுருகன் காந்திநகரில் உள்ள வீட்டுக்கு விரைந்து வந்தார். அவரிடம் வீட்டுக்குள் இருந்த அதிகாரிகள், “நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைக்கேட்ட துரைமுருகன் உடனடியாக தன்னுடைய வக்கீல்களை வரவழைத்தார். அவர்கள் அதிகாரிகளிடம் இருந்த அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர். அதில், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் எப்படி வீட்டுக்குள் சோதனையிட முடியும் என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து வக்கீல்களுக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



    சிறிது நேரத்தில், வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்தார். என்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று வக்கீல்களிடம் கூறினார்.

    ஆனாலும், வீடுகளில் சோதனை செய்யலாம் என்று அதில் குறிப்பிடப் படவில்லையே என்று தெரிவித்த வக்கீல்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீடித்தது.

    இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கும் தகவல் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது. ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    துரைமுருகன் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் சோதனை நடத்தாமல் செல்லமாட்டோம் என்று வருமானவரித்துறையும், பறக்கும் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு 4 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.

    காலை 5.45 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் 3 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் வீட்டிற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    துரைமுருகன் வீட்டில் உள்ள அறைகள், மாடியில் உள்ள அறைகள், தண்ணீர் தொட்டி, துரைமுருகனுக்கு சொந்தமான கார்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் இருந்த சில ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு துரைமுருகன் பதில் அளித்தார். இதுபற்றிய முழுமையான விவரங்களை வருமானவரித்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    காலை 8.30 மணிக்கு சோதனையில் ஒரு பகுதி முடிந்தது. சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேரில் 3 பேர் வெளியே வந்தனர். அவர்கள் துரைமுருகன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை காரில் எடுத்து சென்றனர். 4 அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.



    காலை 9 மணியளவில் அவர்களும் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். சுமார் 6 மணி நேரம் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு கருதி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. வாக்காளர்களுக்கான பணப்பட்டு வாடா புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அங்கும் சோதனை நடத்தினார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு 7 பேர் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சோதனை நீடித்து வருகிறது.

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து சோதனையை உடனடியாக மேற்கொண்டனர். நள்ளிரவு 1 மணி வரை நடத்திய சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொதியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    காலை 10 மணியளவில் பிரசாரம் தொடங்கும் அவர் மாலை 5 மணியளவில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற் கொள்கிறார். இரவு வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்.

    தொடர்ந்து 1-ந் தேதி அரக்கோணம் மக்களவை தொகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Duraimurugan #DMK #Raid
    காட்பாடிக்கு சிறப்பு மருத்துவ மனை கொண்டுவருவதே என் லட்சியம் என்று லாலாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். #duraimurugan #dmk #mkstalin

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோகுலன், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் துரைமுருகன் தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:- 

    நான் காட்பாடி சட்டமன்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் இறப்பதற்குள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பு மருத்துவமனை கொண்டுவர வேண்டும்.

    தமிழகத்தில் சேலத்தில் இதுபோன்ற மருத்துவமனை உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது காட்பாடி தொகுதிக்கு நான் தனியாருக்கு நிகரான நவீன மருத்துவமனையை கொண்டு வருவேன். மருத்துவமனையை கட்டி முடிப்பேன் இதுவே என் லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார், ஈஸ்வரப்பன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கிங்ஸ்டன் கல்வி குழும நிறுவனர் கதிர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கழக புரவலர் துரைசிங்காரம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, உள்பட மாவட்ட ஒன்றிய நகர உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி கருணாநிதி நன்றி கூறினார்.  #duraimurugan #dmk #mkstalin

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    தென்தாமரைகுளம்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அகஸ்தீஸ்வரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் வருகிறார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் தமிழகத்தின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் பல வி‌ஷயங்கள் பற்றியும் பேசுகிறார். ஏற்கனவே மதுரையில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றது தமிழக மக்களுக்கு தங்களது எதிர்காலம் மீதும், பிரதமர் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    நாளை பிரதமர் வருவது நம்பிக்கையையும், புதிய தெம்பையும் மக்களுக்கு கொடுக்கும். கன்னியாகுமரிக்கும் அதன்பிறகு பிரதமர் வருகைதர உள்ளார். இங்கு அரசு நிகழ்ச்சியிலும், பாரதீய ஜனதா கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை முழுமை பெற்றபிறகுதான் அறிவிப்பு வரும். தேர்தல் கூட்டணி பேச்சை நோக்கி பயணம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அமையும் பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி அமையுமா என்பது பற்றி அகில இந்திய தலைமை பேச்சுக்கு பிறகு தெரியவரும்.


    தம்பித்துரை பாரதீய ஜனதா பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருக்கும் எங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. அவர் சொல்லும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் ஆகும். பாரதீய ஜனதா கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களில் வெற்றிபெறும்.

    கூட்டணி பற்றி கடைசி நேரம் வரை கணிக்க முடியாது என்று துரைமுருகன் கூறி உள்ளார். அவர் பழுத்த அரசியல்வாதி என்பதால் அவரது கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். அதேசமயம் கூட்டணி இல்லாமல் தி.மு.க. தேர்தலை சந்திக்க முடியாது. ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் கூட்டணி அமைக்கிறது என்பது உலக மகா பொய்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவி ஏற்று உள்ளதால் ப.சிதம்பரத்தின் ‘கை’ ஓங்கி உள்ளதா? என்று கேட்கிறீர்கள். தமிழகத்தில் ‘கை’ ஓங்க முடியாது. 1969-க்கு பிறகு 44 சதவீதமாக இருந்த அந்த கட்சியின் ஓட்டு இன்று 4 சதவீதமாக குறைந்துவிட்டது. அவர்களது ‘கை’ ஓங்கவே முடியாது.

    தமிழக பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி வழங்கி இருப்பதும் பாராட்டத் தக்கது.

    ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்து உள்ளதால் அதற்கான பலன் பொதுமக்களுக்கு கிடைக்கும். வரி வசூல் மூலம் கிடைக்கும் பணம் வீடு, ரோடு, ரெயில் வசதி, இலவச கியாஸ் என்று பொது மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலனில் மத்திய அரசு அதிக அக்கரை கொண்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பேசும் மேடை அமைக்கும் பணியை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    கிராம சபை கூட்டம் மூலம் மக்கள் பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம், குறைகளை தீர்ப்போம் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DuraiMurugan #DMK
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த எலவமலை ஊராட்சி மூலப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது.-

    உங்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து குறைகளை கேட்டறிய தளபதி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆனால் வரவில்லை. எங்களுக்கு ஓட்டு போட்டாலும் போடா விட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற கட்சி தி.மு.க.தான்.

    நீங்கள் கொடுத்த மனுக்களை ஜெராக்ஸ் எடுத்து தலைமை கழகத்துக்கு ஒன்று அனுப்பி வைப்போம். மற்றொன்றை அதிகாரிகளிடம் சென்று கொடுப்போம்.

    10 பேருக்கு கொடுத்து 6 பேருக்கு கிடைத்தால் கூட போதும் என்று நீங்கள் (மக்கள்) பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம். குறைகளை தீர்ப்போம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சதாசிவம் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DuraiMurugan #DMK

    அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்று ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த லக்காபுரத்தில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதில்லை. எதிர்கட்சியும் இதே தவறை செய்ய கூடாது என்பதற்காகத்தான் மக்களை திமுக நேரில் சந்தித்து வருகிறது.

    தற்போது மக்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது தான் மகத்தான சக்தி. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது. பக்திமான்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடியது. கலைநயம் படைத்த சிலைகள் திருடப்படுவது அவமான செயல். நீதிமன்றம் தெரிவித்த பிறகும் பொன்மாணிக்கவேலின் நேர்மையை அரசு சோதிப்பது வேடிக்கையானது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரித்திருந்தால் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடும் ஏற்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan
    தமிழக சட்டசபையில் இன்று கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசிய துரைமுருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். #Karunanidhi #DuraiMurugan
    சென்னை:

    சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் துரைமுருகன் பேசியதாவது:-

    என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன்.

    95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் கலைஞர்.

    எனது சார்பிலும், மு.க. ஸ்டாலின் சார்பிலும் கனத்த இதயத்தோடு கண்ணீரை அடக்கிக் கொண்டு பேச முற்படுகிறேன். கலைஞர் தனி மனிதர் அல்ல. பன்முகத்தன்மை கொண்டவர். அரசியல் வித்தகர், இலக்கிய வேந்தர், கவிதைக் கடல், புரட்சிகரமான வசனங்களை திரையில் தீட்டியவர், அவரை ஒரு முகத்தோடு அடக்கி விட முடியாது.

    கலைஞர் 95 ஆண்டு காலம் அதாவது 34 ஆயிரத்து 258 நாட்கள் வாழ்ந்தவர். இதில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியது 20 ஆயிரத்து 411 நாட்கள். அதாவது 56 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். தான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணியாற்றியவர். 13 தேர்தல்களில் நின்று வென்றவர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதல்- அமைச்சர் என 56 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். முதல்- அமைச்சராக 6863 நாட்கள் அதாவது 9 ஆண்டுகள் பணியாற்றினார். 17 ஆயிரத்து 908 நாட்கள் தி.மு.க. கட்சித் தலைவராக செயல்பட்டார்.


    கலைஞர் வரலாற்று சிறப்பு மிக்க அநேக செயல்களை செய்துள்ளார். மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியவர் கலைஞர். சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்-அமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர். பெண்களுக்கு சொத்தில் பங்கு பெற்றுத் தந்தவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பல குடியரசு தலைவர்களை உருவாக்கியவர். என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர்.

    எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். நான் அன்று இறந்திருந்தால் எனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் எனது துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்ததும் கதறி கதறி அழுதார். அவரை மு.க. ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார். #Karunanidhi #DuraiMurugan
    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் நிலையில், நேற்று ஆலோசனை பற்றி துரைமுருகன் தகவல் தெரிவித்தார். #ThiruvarurByElection #MKStalin #DuraiMurugan
    சென்னை:

    கருணாநிதி மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித்தலைவராக இருந்து வரும்நிலையில், அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், ‘நாளை (இன்று) தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம் தொடர்பாக விவாதித்தோம். நீங்கள் கூறும் விஷயம் குறித்து நாங்கள் பேசவில்லை’ என்றார். #ThiruvarurByElection #MKStalin #DuraiMurugan

    முல்லைப்பெரியாறு மற்றும் மேகதாது பிரச்சனைகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில் அளித்துள்ளார். #DMK #DuraiMurugan #PonRadhakrishnan
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு வரலாறே தெரியாத மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் “நாங்க புதுசா கட்டிக்கின ஜோடி தானுங்கோ” என்பது போல் ஊழலின் உறைவிடமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குவதற்காக “தி.மு.க. துரோகம் செய்து விட்டது” என்று அபாண்டமாக பழி சுமத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    132 வருட முல்லை பெரியாறு வரலாறு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞரின் சாதனையை சிறுமைப்படுத்துவது போல் மத்திய அமைச்சர் பேசுவதை கழக தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    அமைச்சர் நினைப்பது போல் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமில்லாத ஆடும் பாலத்தை அமைத்துவிட்டு, நள்ளிரவில் பொறியாளர்களை விட்டு சரி செய்யும் பிரச்சனை அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியிலிருந்து 136ஆக குறைத்தது 1979-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி என்பது கிளிப் பிள்ளைக்குக்கூட தெரியும்.

    ஆனால் முல்லை பெரியாறின் “கிழக்கும் மேற்கும்” தெரியாமல் பேசும் மத்திய அமைச்சருக்கு புரிந்திருக்காமல் இருக்கலாம். 1989-ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்டவர் கலைஞர் என்ற அடிப்படை உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஊழல் மகாசமுத்திரமாக காட்சியளிக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய அமைச்சருக்கு கொஞ்சம் கூட அழகல்ல.

    1997-ல் அணையை பலப்படுத்தும் இறுதிப் பணிகள் மேற்கொண்டது, 2000-ம் வருடவாக்கில் 136 அடியிலிருந்து 142 அடி உயர்த்தலாம் என்று மத்திய நிபுணர் குழுக்களிடம் பரிந்துரை பெற்றது, 2006-ல் ஆட்சிக்கு வந்த பிறகு உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தனைச் சந்தித்து சுமூகமான தீர்வுக்கு பாடுபட்டது, அதன் பிறகு டிசம்பர் 2006-ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேராசிரியர் சைபுதீன் சோஸ் மற்றும் தமிழக, கேரள பொதுப் பணித்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச வழி வகுத்தது.

    1956-ல் அண்ணா வைத்த கோரிக்கை போல் முல்லை பெரியாறு அணை இருக்கும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்று அழுத்தமாக 2012-ல் கோரிக்கை வைத்தது, எல்லாமே கலைஞர் தான்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் கலைஞர் முதல்- அமைச்சராக இருந்து இந்த பிரச்சனைகளையெல்லாம் கையாண்ட விதத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். மத்திய அமைச்சர் கடந்த கால வரலாற்றை எடுத்துப் படித்துப் பார்த்து முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சனையில் மத்திய பா.ஜ.க. அரசு செய்த துரோகங்களையும், அதை வேடிக்கை பார்த்த அதிமுக அரசின் மவுனத்தையும் பட்டியல் போட்டிட பக்கங்கள் போதாது.

    இருந்தாலும் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது” “பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்று விதண்டாவாதம் செய்தது” “காவிரி வரைவு திட்டம் அமைக்க கால தாமதம் செய்தது” “கதைக்கு உதவாத ஒரு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தாக்கல் செய்தது” “தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இறுதி தீர்ப்பின் அடிப்படையிலான தண்ணீரை 4.75 டி.எம்.சி குறைக்க காரணமாக இருந்தது”

    “காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது” “அப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் இன்றைக்கும் நிரந்தர தலைவர் போடாமல் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இருப்பது”, “மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கோரி கர்நாடக மாநில அரசு எழுதிய கடிதத்தை முதலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்பு வைக்காமல் மறைத்தது”, “காவேரி மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் மத்திய நீர்வள ஆணையமே மேகதாது அணைகட்டும் திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியது”, “ஒட்டுமொத்தமாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை பிசுபிசுக்க வைத்தது” எல்லாமே பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சிதான் என்பது தமிழக மக்களுக்கும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் நன்கு தெரியும்.


    இந்த தமிழக விரோத செயல்களை எல்லாம் இங்குள்ள அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்தது என்பதும், அந்த அரசுக்கு ஆதரவாகத்தான் தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார்.

    இது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் ஊழல் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் எங்கள் கழகத் தலைவர் சொன்னது போல் அமையப் போகும் “கொள்ளைக் கூட்டணியை” அம்பலத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

    இப்போது கூட அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்காக டெல்லி சென்ற எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அன்னை சோனியா காந்தியிடமும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியிடமும், மேகதாது பிரச்சனை பற்றி எடுத்து கூறியிருக்கிறார்.

    எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடமும் மேகதாது பிரச்சனை பற்றி பேசி வலியுறுத்தியிருக்கிறார். இது எதையுமே அறிந்தும் அறியாதவர் போல் மத்திய அமைச்சர் பேசியிருப்பது அவருக்கு எங்கிருந்தோ ‘அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசு’ என்று வந்த கட்டளை என்றே தெரிகிறது. காவிரியில் நடை பயணம் மேற்கொண்டு காவிரி வரைவு திட்டத்தை அமைக்க பாடுபட்டவர் எங்கள் கழகத் தலைவர். முல்லைப் பெரியாறு, மேகதாது அணை எதுவாக இருந்தாலும் முன்னனியில் நின்று தமிழகத்திற்காக, தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பவர் எங்கள் தலைவர்.

    ஆகவே இதையெல்லாம் மறைத்துப் பேசினால் தமிழக மக்கள் தங்களை நம்பி விடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால் அது அவர் காணும் பகல் கனவாகவே முடியும் என்றும், காவிரியிலும், மேகதாது அணையிலும் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள துரோகத்தை ஒரு போதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு துரைமுருகன் கூறி உள்ளார். #DMK #DuraiMurugan #PonRadhakrishnan
    ×