search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99412"

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தபோது அனைத்தும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



    தே.மு.தி.க.வுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். 

    மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தே.மு.தி.க.வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

    தே.மு.தி.க.வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.

    விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும். 

    ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க.வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று சந்தித்து பேசிய ரஜினிகாந்த், விஜய பிரபாகரனின் அரசியல் பேச்சை பாராட்டினார். #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று திரும்பியதும் முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் இருந்ததாகக் கூறப்பட்டாலும், “ஒரு துளிகூட அரசியல் இல்லை” என இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவரின் அரசியல் பேச்சுகள் குறித்து சந்திப்பின்போது ரஜினி பேசியுள்ளார்.


    ரஜினி விஜயகாந்த் குடும்பத்துடன் பேசும் புகைப்படத்துடன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் அரசியல் மேடைகளில் பேசியதை பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் சிறப்பான ஒன்று.

    மேடைகளில் நான் பேசியதை சொல்லி ஆச்சர்யப்பட்டார். அது குறித்து சந்தோ‌ஷமாகப் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக அங்கிள் இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். #seeman #rajinikanth #parliamentelection

    சென்னை:

    சீமான், ஆர்.கே.சுரேஷ் இருவரும் இணைந்து அமீரா என்ற படத்தில் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சீமான் பேசியதாவது:-

    “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத் தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான் திரைத் துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள்.

    நான் எனது ரசிகர்களை சந்தித்து அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

    அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதல்-அமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

    தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்றுசொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்கு பெயர்தான் தலைவன்.


    உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு.

    அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன் படுத்துகிறேன்.

    நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம். தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா? இல்லை. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள்.. தனியாக நின்று விட்டுப் போகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #seeman #rajinikanth #parliamentelection

    இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #nanjilsampath #vaiko #parliamentelection

    நாகர்கோவில்:

    தமிழக அரசியலில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி பரபரப்பை கிளப்புபவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஆதரித்தார். அவர், கட்சி தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி அரசியல் அரங்கில் இருந்து வெளியேறினார்.

    இனி இலக்கிய மேடையில் மட்டுமே பேசுவேன் என்று கூறி வந்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்தார். இது அவர் மீண்டும் அரசியல் மேடையில் பேசுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் பிரசார மேடைகளில் வலம் வர தயாராகி வருகிறார்.

    வைகோ மற்றும் தி.மு.க. கூட்டணியை புகழ்ந்து பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத், மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க- பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து விட்டன. இந்த தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறுமா?

    பதில்:- இப்போது நடக்கும் தேர்தல் இக்கூட்டணியின் அஸ்தமனமாக அமையும். இனி இவர்கள் வெற்றி பெற போவதில்லை.

    கே:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அ.தி.மு.க. நிற்கும் தொகுதிகளே 21-க்கும் கீழ் வந்து விடும்போல் இருக்கிறதே?

    ப:- அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே இதை கருதுகிறேன். அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கவுரவத்தை விட்டுக் கொடுத்து விட்டது.

    ஜெயலலிதா, திறமையாக ஆட்சி செய்தார். கட்சியை வழி நடத்தினார். இப்போது சுரண்டி, சுரண்டி கொள்ளை அடிக்கும் நிலையே காணப்படுகிறது.

    கே:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்துள்ளதே?

    ப:- பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புது வாக்காளர்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

    இந்த கூட்டணிக்கு தேர்தலில் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ராமதாசின் மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெறவே அவர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது ஆசை நிறைவேறாது.

    கே:- அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார்களா?

    ப:- தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் சேரவே வாய்ப்புள்ளது. இங்கு சேர்ந்தால்தான் நலம் பயக்கும்.

    கே:- நடிகர் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும்?

    ப:- கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தலில் தொகுதிக்கு 500 வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. கமல்ஹாசன் அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவர், இப்படி தனக்குதானே சுவரில் போய் முட்டிக் கொள்வதன் மூலம் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

    திராவிடம் பற்றி கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதை அலட்சியப்படுத்த வேண்டியது திராவிடத்தின் கடமை.

    கே:- ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் கூறி இருக்கிறாரே?

    ப:- ரஜினியின் படங்கள் வெளிவரும் போது அவர், அரசியல் கருத்துக்கள் பேசுவார். சீன் போடுவார். படம் வெளியாகும். அது வெற்றி பெறும். அதன் பிறகு அவரும் அமைதியாகி விடுவார். அரசியல் பேச்சும் காணாமல் போய் விடும்.

    ரஜினி தன்னை குழப்பி, ரசிகர்களையும் மட்டுமின்றி தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.

    கே:- மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமையுமா? மோடி பிரதமராக வாய்ப்புள்ளதா?

    ப:- பாரதீய ஜனதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வட இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 3 முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா, அம்மாநில மக்களால் அகற்றப்பட்டு விட்டது.

    இதுபோல சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை.

    கே:- பாரதீய ஜனதா வெற்றி பெறாவிட்டால் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

    ப:- இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சய வெற்றி பெறும். பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்பார்.

    கே:- இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்கள் காங்கிரசார் என்ற பழிச்சொல் இருக்கும்போது தமிழகத்தில் அவர்களை ஆதரிக்க முன் வருவது ஏன்?

    ப:- இலங்கை தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தை மறக்க முடிய வில்லை என்பது உண்மைதான். அந்த பழியை துடைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ராகுல்காந்தி இதற்கு பிரயாசித்தம் தேடுவார் என்று நம்புகிறேன்.

    கே:- தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறும் நீங்கள், அவர்களை ஆதரித்து இந்த தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா?

    ப:- தி.மு.க. பொது மேடைகளில் எனக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.

    பாரதீய ஜனதா கட்சியை எதிர்ப்பதே எனது பிரதான இலக்கு. அ.தி.மு.க. எனது முதல் எதிரி, முக்கிய எதிரி பா.ம.க. இப்போது இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்திருப்பதால் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.

    கே:- டி.டி.வி. தினகரன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக கூறி இருக்கிறாரே?

    ப:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை 2 ஆக பிளப்பார். அதை தவிர வேறு எதையும் அவரால் சாதிக்க முடியாது. இந்த தேர்தலில் சந்திக்கும் வீழ்ச்சிக்கு பின்னர் அவரால் எழுந்து நிற்கவே முடியாது.

    கே:- 21 தொகுதி இடைத்தேர்தல் நிலை என்னவாகும்?

    ப:- 21 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார்.


    ப:- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. இது வைகோவால் வந்தது. எனவேதான் அவரை பாராட்டினேன். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல், பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிய முதல் தலைவராக வைகோ என் கண்ணுக்கு தெரிகிறார்.

    எனவேதான் தமிழர்கள் அவருக்கு விழா எடுக்க கடமைப்பட்டு இருக்கிறார்கள் என்று கருத்து பதிவிட்டேன். இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko #parliamentelection

    ரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.

    இதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.



    ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.

    வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.

    எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்

    எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #Vijayakanth #Rajinikanth
    சென்னை:

    உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது.


    இந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது:-

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம்  குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது.

    நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது என்னை சந்தித்து நலம் விசாரித்த முதல் நபர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vijayakanth #Rajinikanth
    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். #DMDK #Vijayakanth #Rajinikanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். இதன்பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    விஜயகாந்தை அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து விஜயகாந்துக்கு 3 முதல் 4 இடங்கள் வரை கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜயகாந்த் தரப்பில் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது.

    இதன் காரணமாக விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



    இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த் அவரை சந்தித்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ரஜினி, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். எனினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தற்போது விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார். அவரை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் இன்று விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் இப்போது கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக களம் இறங்கி உள்ளார். அதனால் அவர் விஜயகாந்தை கூட்டணிக்கு சேர அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #DMDK #Vijayakanth #Rajinikanth
    அகவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் என்று புகழ்ந்தார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch
    புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கி உள்ள திரைப்படம் `அகவன்’. இதன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் ஆரம்ப காலம் முதல் ரசிகராய் இருப்பவர். ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.

    இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ரஜினி மன்ற விழாபோல் நடந்த இந்த விழாவில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசப்பட்டது.


    நிகழ்ச்சியில் இறுதியாகப் பேசிய ராகவா லாரன்ஸ், ’ உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று சொல்வார். அதேமாதிரி ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியிருக்கிறார். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். `அவர் துரோகம் பண்ணிட்டார்’ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா ``தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துப்பார்’னு சொல்லிடுவார். எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான்’ என பேசினார்.

    தொடர்ந்து, தாயின் மகத்துவத்தைப் பற்றிப் பேசிய லாரன்ஸ் அவரது உரையின் முடிவில் தண்ணீர் கேட்டார். அதைத் தயாரிப்பாளர் தர வாங்கிக் குடித்தவுடன், ``தண்ணீர் கேட்க காரணம் இருந்தது. என் ஓட்டு உங்களுக்குத்தான்” எனக் கூறினார் லாரன்ஸ். தண்ணீர் தந்தது ரஜினியின் கட்சி போல் பாவித்து ரஜினிக்குத்தான் என் ஓட்டு என்று சூசகமாகக் கூறினார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #kveeramani #parliamentelection

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மூழ்கும் கப்பல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் கலைத்துறையில் மட்டுமே உள்ளார்.

    திராவிடர் கழக சமூக நீதி மாநாடு, வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


    இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #kveeramani #parliamentelection

    வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த் திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மாநிலம் முழுக்க அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டாக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார், அல்லது யாருக்காவது தனது ஆதரவை தெரிவிப்பார் என எதிர்பார்த்தனர். முக்கியமாக ரஜினி பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். ரஜினி போட்டி இல்லை என்று கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினி திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் என்ன என்பது விவாதமாக மாறி இருக்கிறது. ரஜினி முடிவின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம் கேட்டோம்.

    ‘இப்போது என்ன முடிவு எடுத்தாலும் அது பிற கட்சிகளுக்கு ஆதரவாக சென்று விடும், எதிர்காலத்தில் கட்சி தொடங்கும்போது அது நம் கட்சிக்கு பாதகமாக போய்விடும் என்று ரஜினி நினைக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினியின் பேச்சில் அது எதிரொலித்தது. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கடந்த ஓர் ஆண்டாக தன்னை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அவரை பாதித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் அவர் கூறியது முதல் பா.ஜனதா 4 மாநிலங்களில் அடைந்த தோல்வி வரை ரஜினியின் கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டன.

    தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரஜினியை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் ரஜினியை முக்கிய நபராக பார்த்தாலும் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பில் இன்னும் ரஜினிக்கு முழு திருப்தி வரவில்லை. இன்னும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பூத் கமிட்டிகள் வலுவாக அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் கட்சி தொடங்கினால் இந்த தேர்தலிலேயே நம் பலத்தை காட்டலாம் என்று மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

    ரஜினியோ இப்போது கட்சி தொடங்கி போட்டியிட்டாலோ ஆதரவு தெரிவித்தாலோ சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது ஏற்படும் பாதகங்களை பற்றி பேசி இருக்கிறார். இந்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நிச்சயம் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்காது. தமிழக தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெளிவாக தெரியும்.

    இப்போது வெல்லும் எம்.பி சீட்டுகளால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. 37 தொகுதிகளில் ஜெயலலிதா வென்றும் பயனில்லையே... தவிர கமல் தனித்து நிற்கிறார். அவருக்கு நடுநிலை வாக்குகள் எந்த அளவுக்கு விழுகின்றன என்பதை பார்ப்போம்.



    கமல்ஹாசன் மற்ற அரசியல் கட்சிகள் போல் கூட்டணி, பணத்தை நம்பாமல் போட்டியிடுவது நம் எதிர்காலத்தை கணிப்பதற்கான நல்ல வாய்ப்பு. நாமும் போட்டியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கினால் இன்னும் 3 ஆண்டுகள் தாக்கு பிடிக்க வேண்டும்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினால் போதும். அதுவரை அமைதியாக கட்சிக்கான கட்டமைப்பை பலமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதுதான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல ஒரே வழி என ரஜினி கருதுகிறார்.

    ரஜினியை பொறுத்தவரை இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக ஆளுங்கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போட்டியோ ஆதரவோ தெரிவித்தால் நிச்சயம் பகைத்துக்கொள்ள வேண்டி வரும். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமக்கு சாதகமாக அமையும் என ரஜினி தெளிவாக திட்டமிடுகிறார்’ என்றனர்.

    ரஜினியின் வாக்குகள் எங்கே போகும்? என்று கேட்டதற்கு ‘ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் தான். எனவே அந்தந்த கட்சிகளுக்கு தங்கள் விருப்பப்படி வாக்கு அளிப்பார்கள். கட்சி தொடங்கும் வரை இப்படியே தொடர்வார்கள்.

    ரசிகர்களிடம் எந்த குழப்பமும் இல்லை’ என்று பதில் அளித்தனர். நிர்வாகிகள் இப்படி கூறினாலும் ரசிகர்களிடம் ஒருவித குழப்பம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி தனது ஆதரவை நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தெரிவிப்பார். அந்த கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கின்றனர்.

    ரஜினியின் இந்த முடிவை வைத்தே ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுப்பதில் அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. நிர்வாகிகளுக்கு ஆங்காங்கே பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் தொண்டர்களே ஆராய்ந்தால் வழி நடத்த தலைவன் எதற்கு? என்று ரஜினிகாந்த் மீது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.

    ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக சோதனை செய்தனர். ஆனால் 350 கிலோ வெடி மருந்து ஏற்றி வந்த வாகனத்தை சோதிக்காமல் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படை வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வெடிகுண்டு வெடிக்கிறது. இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய நினைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.

    தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?. தலைவன் தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.



    சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது. அதனால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிறது. இல்லையென்றால் எப்போதோ கலைத்திருப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

    தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழிசை சவுந்தரராஜன்

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    அஜித், ரஜினி அறிக்கை வெளியிட்டால் உடனே பா.ஜனதாவுக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது.

    மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

    திருமாவளவன்


    ரஜினியின் அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.

    கே.பாலகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.

    நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.

    வைகைச் செல்வன் (அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்)

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்து போய் விட்டது. 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்று கூறுவதை இந்த அறிவிப்பு மூலம் நீர்த்து போக செய்து விட்டார்.

    கே.பி. முனுசாமி (அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்)

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என தெரிகிறது.

    பட்டிதொட்டி எங்கும் தடையில்லா தண்ணீர் கிடைக்க அ.தி.மு.க. அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.#Rajinikanth #LSPolls
    ×