search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத்தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
    “பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது” என்பதே அனைத்து சமயத்திலும் காணப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஆகவேதான், பாவங்களுக்கு பரிகாரம் செய்து மன்னிப்பு பெற நாம் ஆலயங்களைத் தேடிச் செல்கிறோம்.

    இயேசு கிறிஸ்து தமது இறைத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் விதமாக பாவங்களை மன்னித்தார். இஸ்ரயேலில் தோன்றிய எந்தவொரு இறைவாக்கினரும் (தீர்க்கதரிசி) இத்தகைய செயலைச் செய்ததாக விவிலியத்தில் நாம் பார்க்க முடிவதில்லை.

    மக்களை கடவுளுக்கு உரிய வழியில் நடத்திச் செல்வதே இறைவாக்கினர்களின் நோக்கமாக இருந்தது. விபசாரம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகளையும், உண்மை கடவுளுக்கு எதிரான சிலை வழிபாட்டையும் அவர்கள் எதிர்த்தனர். எளியோரை நசுக்கியவர்களும், வறியோரை ஒடுக்கியவர்களும் மனம் திரும்ப வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர். அடக்குமுறையில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், பணக்காரர்களும் கடவுளின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இறைவாக்கினர்களின் குரலுக்கு செவி கொடுத்த இஸ்ரயேல் மக்கள், மனந்திரும்பி சாக்கு உடை உடுத்தி நோன்பு இருந்தனர். தங்களை வருத்திக் கொண்டு கடவுளிடம் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவர்கள் மன்னிப்பு பெற்றனர்.

    இறைவாக்கினர் கூறியதை புறக்கணித்த வேளையில், மன்னரும் மக்களும் வேற்று நாட்டவரின் அடக்குமுறைக்கு ஆளாகி துன்புற்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, மன்னிப்பு என்பது இறைவாக்கினரிடம் இருந்தல்ல, கடவுளிடம் இருந்தே வருகிறது.

    இயேசுவுக்கு முன்பு இஸ்ரயேல் மக்கள் நடுவில் தோன்றிய இறைவாக்கினர்கள் அனைவரும் பல அற்புதங்ளைச் செய்ததாக வாசிக்கிறோம். ஆனால் ஒருவர் கூட மற்றவரின் பாவத்தை மன்னித்ததாக நாம் காணவில்லை. மக்களை மனம்மாறத் தூண்டுவதே எல்லா இறைவாக்கினரின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது.

    இயேசுவைச் சுட்டிக்காட்ட வந்த திருமுழுக்கு யோவான் கூட, “மனந்திரும்பி திரு முழுக்கு பெறுங்கள்” என்றே அழைப்பு விடுத்தார். ஏனெனில், ‘திருமுழுக்கு’ என்பது இறையருளின் வெளி அடையாளமாக உள்ளது.

    இயேசுவின் காலத்தைச் சேர்ந்த யூதர்கள், அவரை இறைவாக்கினர்களில் ஒருவராக பார்த்தனர். ஆனால், தாம் இறைவாக்கினரிலும் மேலான ‘இறை மகன்’ என்பதை இயேசு தமது செயல்கள் வழியாக நிரூபித்தார். இவ்வுலகில் மானிட மகனாக தோன்றிய இயேசு, தம்முடைய இறைத்தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு மக்களின் பாவங்களை மன்னித்தார். ஆகவே, இயேசுவை ஏற்று அவரை நாடிச் செல்வோர் பாவங்களில் இருந்து விடுபடுவது உறுதி.

    ஒருமுறை இயேசு கோவிலில் அமர்ந் திருந்தபோது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டுவந்து நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

    இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்” என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

    இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். இயேசு அவரிடம், “அம்மா, நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை ஐயா” என்றார். இயேசு அவரிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

    ‘பாவி’ என்று மக்கள் சுட்டிக்காட்டிய ஒரு பெண்ணை இயேசு காப்பாற்றுவதை இங்கு காண்கிறோம். இயேசுவின் அதிகாரத்தை ஏற்காத சமயத் தலைவர்கள், அவரை சோதிக்கவே அப்பெண்ணை அவரிடம் இழுத்து வந்தனர். இயேசு மாசற்ற இறைமகனாய் இருந்ததால் அப்பெண்ணைத் தீர்ப்பிடும் உரிமை அவருக்கு இருந்தது. இருப்பினும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர் திருந்தி வாழ அழைப்பு விடுத்ததால் இயேசுவின் இறைமாட்சியைக் கண்டுணர்கிறோம்.

    இயேசு பாவங்களை மன்னித்ததாக கூறியதை, யூத சமயத்தலைவர்கள் தெய்வ நிந்தனையாக கருதினர். இயேசுவோ, மானிட மகனாக வந்தாலும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.

    அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

    பின்னர் அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

    இயேசுவின் அதிகாரம் விண்ணகத்தைச் சார்ந்தது. ஏனெனில், இறைத்தந்தையின் ஒரே மகனாக அவர் என்றென்றும் இருக்கின்றார்.

    “தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறுகிறார்.

    எனவே, நமது பாவங்களை மன்னிக்கவும், அதற்கு தண்டனை வழங்கவும் அதிகாரம் கொண்டவர் மானிட மகனாக தோன்றிய இறை மகன் இயேசுவே. பிறர் குற்றங்களை நாம் மன்னித்தால், நமது குற்றங்களை கடவுள் மன்னிப்பார் என்பதே இயேசுவின் போதனை.

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தமது திருத்தூதர்களுக்கு அளித்தார்: “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பீர்களோ, அவை மன்னிக்கப் படாது” (யோவான் 20:23).

    பிறரது பாவங்களைத் தாம் மன்னித்தது மட்டுமின்றி, தமது அதிகாரத்தை பிறருக்கும் அளித்ததன் வழியாக இயேசு தமது இறைத் தன்மையை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். பாவிகளின் மனமாற்றத்தை விரும்பும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வது உறுதி.

    -டே. ஆக்னல் ஜோஸ், சென்னை. 
    இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார்.
    விவிலிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் பவுல் உரோமையருக்கு எழுதிய நூல். இந்த நூலில் 153 முறை, ‘தேவன்’, ‘கடவுள்’ எனும் வார்த்தை வருகிறது. மனித வரலாற்றில் கடவுளின் செயல்பாடு என்ன என்பதை இந்த நூலில் அவர் எழுதுகிறார். கடவுளுடைய அன்பு, நீதி, கோபம், மீட்பின் திட்டம் என கடவுளின் செயல்பாடுகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

    இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார். மனித வாழ்வின் போராட்டம் என்ன என்பதை தனது வாழ்க்கையின் மூலமாக அவர் விளக்குகிறார். கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, நீதிமான்களாக்கும் ஒரு செயலை இயேசுவின் ரத்தம் செய்கிறது.

    மனித வரலாற்றில் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும், மனித நிலை என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

    “கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?, படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?” (யோபு 4:14) எனும் விவிலிய வசனம்; படைத்தவர், படைப்பு எனும் வித்தியாசத்தை இதன்மூலம் பேசுகிறது.

    “அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா?, யாராலும் முடியவே முடியாது” (யோபு 14:4) என்கிறது விவிலியம். மனிதன் என்பவன் படைக்கப்பட்டவன். அவன் நீதியாகவோ, சுத்தமாகவோ இருக்க முடியாது. அவனை இறைவன் மட்டுமே நீதிமானாக மாற்ற முடியும்.

    மனிதனின் பாவங்கள், கடவுளின் மகிமையைப் பெற முடியாத நிலையில் வைத்திருக்கிறது. சிலுவை அதை மாற்றுகிறது.

    “ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச்செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்” (ரோமர் 3:24) என விவிலியம் நம்பிக்கையளிக்கிறது.

    “தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்” (ரோமர் 8:30) என்கிறது விவிலியம்.

    கடவுள் முன் குறிக்கிறார், அழைக்கிறார், ஏற்புடையோராக்குகிறார், மாட்சியில் பங்குபெறச் செய்கிறார் எனும் படிப்படியான மாற்றத்தை பவுல் விளக்குகிறார்.

    இதன் பின், குற்றம் சாட்டுதல் என்பது இல்லை. “கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே” (ரோமர் 8:33) எனும் வசனம் நாம் குற்றமற்றவர்களாய் மாறும் உன்னத நிலையைப் பேசுகிறது.

    இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. “ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது” (ரோமர் 5:18,19) என்கிறது விவிலியம்.

    “முடியாது” எனும் நிலையில் நாம் ஆலயத்துக்கு வருகிறோம், மாற்றம் பெற்றவர்களாக திரும்புகிறோம். இறைவன் அவரது ரத்தத்தின் மூலமாக நம்மை நீதிமான்களாக, அதாவது அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறார்.

    இதனால் நாம் பெறுபவை என்னென்ன?

    1. கடவுளின் சமாதானம்

    “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1). இது பரிசுத்த கழுவுதல். எதை நான் தொலைந்து விட்டு வருகிறேனோ அந்த சமாதானத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்.

    2. கடவுளின் அன்பு

    “அதன் மூலம் கடவுளின் அன்பு நிரப்பப்பட்டவர்களாக நாம் கடந்து செல்கிறோம். “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்..” என்கிறது ரோமர் 5:5. கடவுளுடைய சமாதானத்தோடு அவரது முழுமையான அன்பையும் பெற்றுக்கொள்கிறோம்.

    3. கடவுளின் கோபத்திலின்று தப்பித்தல்

    “இனிமேல் ஒருவரும் நம்மை குற்றம் சாட்ட முடியாது” என்கிறது விவிலியம். நாம் கடவுளின் கோபத்திலிருந்தும் நம்மைத் தப்புவிக்கிறது.

    4. கடவுளோடு ஒப்புரவாதல்

    “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்” (ரோமர் 5:10) எனும் வசனம் நாம் கடவுளோடு ஒப்புரவாதலை உறுதி செய்கிறது.

    5. கடவுளின் மகிழ்ச்சி

    “இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே” (ரோமர் 5:11) என மகிழ்ச்சியையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

    இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நமக்கு ஒரு பணி தரப்படுகிறது. அது கடவுளின் நாமத்தை மேன்மை பாராட்டும் பணி. அதாவது இறைவனைப் பறைசாற்றுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

    “கடவுளின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன” என்கிறது சங்கீதம் 34. அவரது கண்கள் நம்மை குற்றம் சாட்டுவதற்காகப் பார்க்கவில்லை. நமக்கு ஆசீர்வாதங்களை அளிக்கவும், நமது குரலைக் கேட்கவும் நம்மை நோக்குகின்றன. நாம் இறைவனை நாடுபவர்களாக, அவரது நாமத்தை பறை சாற்றுபவர்களாக வாழ்வோம்.

    அருட்பணி, வெலிங்டன் ஜேசுதாஸ்.
    ‘நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. யோவேல் 2:26
    அன்பான சகோதரனே, சகோதரியே, இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!

    ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.’ ஏசாயா 48:17

    நம் தேவன் நம்மை நடத்துகிறவர். பலவிதமான குடும்ப சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, தனிமையான சூழ்நிலை... இவைகளின் மத்தியிலே நான் எப்படி வாழப் போகிறேன். என்னை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கவலையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா?

    கவலைப்படாதீர்கள். இம்மட்டும் உங்களை நடத்தின தேவன் இனிமேலும் நடத்த மாட்டாரா? நிச்சயம் அழகாக நடத்துவார். நம் தேவன் எப்படி நடத்துவார் தெரியுமா? நேர் வழியில் நடத்துவார். ‘... என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரித்தேன்.’ ஆதியாகமம் 24:48

    ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடுவதற்காக தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பிய போது ஆண்டவர் அவரை நேர்வழியாய் நடத்தி, ரெபெக்காளை தெரிந்தெடுக்க கிருபை செய்தார். ஆபிரகாமின் மனவிருப்பங்களையும் நிறைவேற்றினார். ஊழியக்காரனுடைய ஜெபத்தையும் கேட்டு ஆச்சரியமாய் காரியங்களை வாய்க்கப் பண்ணினார்.

    பிரியமானவர்களே, குறிப்பாக உங்கள் பிள்ளைகளுடைய திருமணக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா? நிச்சயம் உங்களை ஆண்டவர் நேர்வழியாய் நடத்தி ஏற்ற நேரத்தில் ஏற்றத் துணையைக் கொண்டு வந்து உங்களை ஆசீர்வதிப்பார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    நித்தமும் நடத்துவார்

    ‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.’ ஏசாயா 58:11

    பிரியமானவர்களே, பொருளாதாரப் பிரச்சினையினால் கலங்கி, என் தேவைகளை யார் சந்திப்பார்? எப்படி இந்த தரித்திரம் மாறும்? கடன் பாரம் மறையுமா? என கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

    ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை சந்தித்து, வறட்சி வந்தாலும் உங்களை நடத்தி செழிப்பான நாட்களுக்குள் உங்களைக் கொண்டு வருவார். நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல இருப்பீர்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாய் தேவன் உங்களை மாற்றுவார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    நித்திய வழியில் நடத்துவார்

    ‘வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.’ சங்கீதம் 139:24

    இந்த உலக வாழ்வு ஒருநாள் முடிந்துபோகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதன்பின் நம் செய்கைக்குத் தக்க நாம் பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல வேண்டும். பரிசுத்தமாய், தேவனுக்குப் பிரியமாய் வாழ்ந்தால் தான் நம்மை பரலோகத்திற்கு நேராக நித்திய வழியில் நடத்துவார். ஆகவே, அவரையே நோக்கிப் பாருங்கள். அவரே நம்மை முற்று முடிய நடத்த வல்லவராயிருக்கிறார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

    ‘நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. யோவேல் 2:26

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை-54. 
    பழைய ஏற்பாடு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சட்டங்களால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. ஆனால் இறைமகன் இயேசுவின் பலியோ தடுப்பை உடைத்து நம்மை அவரோடு இணைக்கும் பணியைச் செய்தது.
    ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை வளர்த்த பவுலின் இயற்பெயர் சவுல். அவர் பென்யமின் கோத்திரத்திலிருந்து வந்தவர். அதனால் இஸ்ரவேல் குலத்தின் முதல் மன்னனின் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

    பவுல் கீழ்ப்படிதல் உள்ளவராக இருந்தார். இயேசுவால் சிறைபிடிக்கப்பட்டவர் எனும் பெயர் இவருக்கு உண்டு. பிற இனத்தவருக்கு இவர் அப்போஸ்தலராக, கிறிஸ்துவின் தொண்டனாக மாற்றப்பட்டவர். அதுதான் இறைவன் அவரை மனம் மாற்றியதன் அடிப்படைக் காரணம்.

    ரோம பேரரசு முழுவதையும் அவர் சுற்றித்திரிந்து மூன்று முறை பயணம் செய்கிறார். எபேசுவில் முதலில் பணியாற்று கிறார், ஆனால் அங்கே தங்கவில்லை. மூன்றாவது பயணத்தில் எபேசுவில் இரண்டு ஆண்டுகள் தங்கினார். எபேசு முழுவதையும் சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கே நற்செய்தி பரவியிருந்ததை அவர் புரிந்து கொண்டார்.

    டயானா எனும் பெண் கடவுளுக்காய் அர்ப்பணிக்கப்பட்ட நகரில் இயேசுவின் திருச்சபையைக் கட்டினார். அதன் பின் பத்து ஆண்டுகளுக்குப் பின் எபேசுவுக்கு அவர் கடிதம் எழுதுகையில் அவர் ரோம அரசினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். மக்களை திருப்பணிக்கு அர்ப் பணிக்க இந்த எபேசியர் நூலை எழுதுகிறார்.

    இந்த நூலில் ‘கிருபை’ எனும் வார்த்தை பனிரண்டு முறை குறிப்பிடப்படுகிறது. தகுதியற்ற மக்களுக்கு கடவுள் தருகின்ற தயவு தான் கிருபை. கிறிஸ்துவோடு இணைய தகுதியற்ற மக்களை இயேசுவின் தயவின் மூலம் அவரோடு இணைக்கின்ற பணி தான் நற்செய்தி அறிவித்தல்.

    இயேசு கிறிஸ்துவுக்குள் எனும் பதமும் இந்த நூலில் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் கிருபையினால் இயேசு கிறிஸ்துவுக்குள் இணைக்கப்படுவதைத் தான் இந்த கடிதம் பேசுகிறது.

    மொத்தம் ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலின், முதல் மூன்று அதிகாரங்கள், கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள் என்ன என்பது சொல்லப்படுகிறது.

    பிதாவிடமிருந்து, குமாரனிடத்திலிருந்து, தூய ஆவியிடமிருந்து எதையெல்லாம் பெற்றுக் கொள்கிறோம் என்பதை இந்த அதிகாரங்கள் விளக்குகின்றன. இவை தான் கிறிஸ்துவில் நம்முடைய ஆவிக்குரிய சொத்துகள்.

    நான்கு முதல் ஆறுவரையுள்ள அதிகாரங்கள், கிறிஸ்துவுக்காய் நாம் செய்ய வேண்டிய பணிகளை விளக்குகிறது. ஐக்கியத்திலே நடக்க வேண்டும், தூய்மையிலே நடக்க வேண்டும், இசைவாய் நடக்க வேண்டும், வெற்றியிலே நடக்க வேண்டும் என்கிறது அது.

    ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறான் எனில் அவனுடைய வாழ்க்கையின் முடிவு வெற்றியாய் இருக்க வேண்டும் என்பதே பவுல் சொல்ல வரும் செய்தி.

    யூதரில் பாவிகளுக்கு எவற்றையெல்லாம் கடவுள் செய்திருக்கிறார், பிற இனத்தவரான பாவிகளுக்கு கடவுள் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை பவுல் தனித் தனியே எழுதுகிறார். யூதர் இறைவனோடு இணைக்கப் படுவது, பிற இனத்தார் யூதரோடு இணைக்கப்பட்டு வேறுபாடின்றி வாழ்வது எனும் இரண்டு நிலைகளை அவர் விளக்குகிறார்.

    மரித்தவன், கீழ்ப்படியாதவன், சீரழிந்தவன், ஆக்கினைக்கு உட்பட்டவன் இது தான் ஒரு பாவியின் நிலை. கடவுள் இத்தகைய பாவிகளிடையே செயல்புரிபவராக இருக்கிறார். அதன் மூலம் நேசிக்கிறார், உயிர்ப்பிக்கிறார், உயர்த்துகிறார், பாதுகாக்கிறார் எனும் நிலைக்கு பாவிகளை மாற்றுகிறார். இது பொதுவான பாவிக்கு தரப்படும் பாக்கியம்.

    இயேசு யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. “யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள்” (ரோமர் 9:24,25) என்கிறது விவிலியம். “தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்” என்கிறது அப்போஸ்தலர் 10:45. கடவுள் அன்பைப் பொழிவதிலும், அருளைப் பொழிவதிலும், ஆவியைப் பொழிவதிலும் வேறுபாடு காட்டுவதில்லை.

    முன்பு பிற ஜாதியினர் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால். கிறிஸ்துவைச் சேராதவர்களாக இருந்தார்கள். டயானா எனும் கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். இறை சமூகத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். இவர்கள் உடன்படிக்கைக்கு அன்னியர்களாய் இருந்தனர். இவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள், கடவுளற்றவர்களாக இருந்தார்கள்.

    கடவுள் இஸ்ரயேல் மக்களின் மூலமாக பிற இனத்தாரை தனக்குரியவர்களாக மாற்ற முயல்கிறார். பிற இனத்தவர்களை அவர் புறந்தள்ளவில்லை. இருவரையும் இணைக்கும் கருவியாக இறைமகன் இயேசுவின் சிலுவை மரணம் இருந்தது. ‘மீட்பு யூதர்கள் வழியாக வருகிறது’ என விவிலியம் சொல்வதன் பொருள் இது தான்.

    நம்மை சமீபமாக்கிய ரத்தம் என்ன செய்கிறது?. ஒப்புரவாக்கும் பணியைச் செய்கிறது. யாரெல்லாம் அவர் மீது விசுவாசம் வைக்கிறார்களோ அவர்களை ஒப்புரவாக்குகிறது. பழைய ஏற்பாட்டில் அழிக்க விரும்பிய கடவுள், இப்போது அழைக்க விரும்புகிறார். அதற்காக தனது ரத்தத்தை செலவிட்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்குகிறார்.

    பழைய ஏற்பாடு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சட்டங்களால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது. ஆனால் இறைமகன் இயேசுவின் பலியோ தடுப்பை உடைத்து நம்மை அவரோடு இணைக்கும் பணியைச் செய்தது.

    இறைவனோடு இணைவோம், மீட்பை அடைவோம்.

    அருட்பணி வெலிங்டன் ஜேசுதாஸ். 
    எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.
    ஏசு கிறிஸ்துவின் பாடு, மரண காலங்களில் இன்று நாம் அவசரத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று பார்க்கலாம். நாம் வாழும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் அவசர அவசரமாய் ஜனங்கள் ஓடித்திரிவதையும், அதனால் அவர்கள் அவஸ்தைபடுவதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

    பரிசுத்த வேதாகமத்தில் 2 சாமுவேல் 4:4-ல் ஒரு சம்பவத்தை காணலாம். சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிற போது அவன் 5 வயதுள்ளவனாயிருந்தான். அப்போது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள். அவர் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்.

    அவனுக்கு மேவிபோசேத் என்று பேர். வாழ்வில் ஒரு சில மனிதர்களுடைய அவசரம் அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் செயல்படாதவராக, முடவராக மாற்றிவிடும். தாதி என்றால் வளர்ப்பு தாய் என்று அர்த்தம். ஒரு வளர்ப்பு தாயின் அவசரம், அந்த சிறு குழந்தையின் எதிர்காலத்தை பாதித்துவிட்டது. இந்த சிறு குழந்தையை பெற்றவர்கள், சுற்றத்தார் எவ்வளவு வருந்தி இருப்பார்கள். என் தாதி அவசரப்படாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வராமல் இருந்திருக்குமே என்று அந்த சிறுவனே நினைத்து இருக்கலாம்.

    இன்றும் ஏராளமானோர் இப்படித்தான் யோசித்து வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். எதிலுமே அவசரம் வேண்டாம். நீ சந்தோஷமாக இருக்கும் போதும், மிகுந்த வேதனையோடு இருக்கும் போதும், அவசரப்படாதே. சந்தோஷமாக இருக்கும் போது கொடுக்கும் வாக்குறுதியும், வேதனையோடு இருக்கும் போது எடுக்கும் முடிவும் தவறாய் போவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் அவசரம் வேண்டவே வேண்டாம்.

    உங்களுடைய அவசரம் பிறரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடலாம். அவர்களுடைய எதிர்காலம் உங்களால் கண்ணீர் சிந்துகிறதாய், வருந்தக்கூடியதாய் காலமெல்லாம் துக்கப்படுகிறதாய் மாற்றிவிடலாம். இந்த சிறு குழந்தை அவனது மரண நாள் மட்டும் முடவனாய் வாழ்ந்து இறந்தான். ஒரு முடவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததே. நமது தொழிலிலும், வேலையிலும், வியாபாரத்திலும், வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் அவசரம் மட்டும் வேண்டாம் என்று அறிந்துகொள்வோம்.

    எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்படுவோம். பொறுமைக்கு அடையாளம் ஏசு கிறிஸ்துவே. அவர் சிலுவையில் பட்ட பாடுகளில் பொறுமையோடு இருந்தார். எதிர்ப்புகளிலும், சூழ்நிலை எதிராக இருந்த போதும் பொறுமையோடு வாழ்ந்த ஏசு கிறிஸ்துவை மனதில் நினைத்து வாழ்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

    - போதகர் பவுல்ராஜ்.
    மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.
    தவக்காலம் என்பது வசந்தகாலம் போன்றது. பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய வாழ்வின் துளிர்கள் வரவேண்டும் என்பதற்காகவே தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் உருவாகவேண்டும் எனும் சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

    அந்த மாற்றத்தை நமக்குப் பெற்றுத் தருவது இறைமகன் இயேசுவின் சிலுவை. மீட்பு என்பது நிலைவாழ்வு. இறைவன் தரும் நிறைவாழ்வு. அந்த நிலைவாழ்வை அடையவேண்டு மெனில் நாம் கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும். மனம் வருந்துதல், மனம் திரும்புதல், பாவ மன்னிப்பு பெறுதல், மீட்பைப் பெற்றுக் கொள்தல்.

    மனம் வருந்துதல் அதாவது மனஸ்தாபம் முதலில் வரவேண்டும். அது தான் நம்மை மனம் திரும்புதலை நோக்கி வழிநடத்தும். மனம் திரும்புதல் பாவ மன்னிப்பை நோக்கி நம்மை வழி நடத்தும். பாவ மன்னிப்பு நம்மை மீட்பை நோக்கி வழிநடத்தும்.

    மனஸ்தாபமே அடிப்படை. மனஸ்தாபம் படும்போது தான் தந்தையின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணிக்க முடியும். ஆனால் வெறும் மனஸ்தாபம் மட்டுமே நம்மை மீட்புக்குள் கொண்டு செல்லாது.

    இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபின் மனம் வருந்தினான். மனம் வருந்திய அவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான். அவனுடைய மனஸ்தாபம் அவனை மனம் திரும்புதலுக்கு கொண்டு செல்லவில்லை. வெறுமனே மனஸ்தாபம் கொள்வது மீட்புக்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதன் உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

    மனம் திரும்புதல் என்பது, மனதிலிருக்கும் பாவங்களை ஒத்துக் கொள்வதும், மனதிலும் செயலிலும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்' (லூக்கா 13:3) என்கிறார் இறைமகன் இயேசு.

    நினிவே நகர மக்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களை அழிக்க இறைவன் முடிவெடுத்தார். அதை அறிந்த மக்கள் மனஸ்தாபப்பட்டு, மனம் திரும்பினார்கள். அவர்கள் மனம் திரும்பியதைப் பார்த்த இறைவன் மனஸ்தாபப்பட்டார். அது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது.

    கெட்ட குமாரன் உவமையில் இளைய மகன் தந்தையிடமிருந்து சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு வெளியூர் போய் அனைத்தையும் அழிக்கிறான். கடைசியில் வாழ வழியின்றி தவிக்கிறான். தனது தவறை உணர்ந்து மனம் வருந்துகிறான். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிடு கிறான். உடனே மீட்பைப் பெற்றுக்கொள்கிறான்.

    இளைய மகன் பாவியாய் வரும்போது தந்தை மனதுருகுகிறார். தனது ஸ்தானத்தை விட்டு இறங்கி ஓடோடிச் சென்று அவனை அரவணைக்கிறார். மனம் வருந்தி, மனம் திரும்பி, பாவமன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு நாம் வரும்போது இறைவன் மனம் இரங்கி வருகிறார், தனது நிலையை விட்டும் இறங்கி வருகிறார்.

    1. மனம் திரும்புதலின் அழைப்பு இறையரசுக்கானது!

    மனம் திரும்புதலுக்கான அழைப்பு பரலோக ராஜ்ஜியத்தை முன்வைத்து அழைக்கப்படுகிற அழைப்பாக இருக்கிறது. 'மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது' என இயேசு தனது போதனைகளில் அடிக்கடி குறிப்பிட்டார்.

    இயேசுவின் காலத்தில் மக்கள் ஒரு பூலோக அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் இறைமகன் இயேசுவோ, இறை அரசுக்கான வாழ்க்கைக்கு மக்களை தயாரிக்க வந்தார். எனவே தான் இயேசு தனது போதனைகளின் முதல் அறை கூவலாக, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்றார்.

    இயேசு மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் மனம் திரும்புங்கள் எனும் செய்தியையே பறை சாற்றுகின்றனர். பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதத்தோடு நமது கிறிஸ்தவ வாழ்க்கை நின்று விடக்கூடாது. நம் மூலமாக இறையரசின் செய்தியை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    2. மனம் திரும்புதலின் அழைப்பு மகிழ்ச்சிக்கானது

    யார் ஒருவர் இந்த மனம் திரும்புதலின் அழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகிழ்ச்சியை பெற்றுக் கொள் கிறார்கள். கூடவே அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

    கெட்ட குமாரனின் கதையிலும் அந்த மனம் திரும்பிய மகனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தது. அத்துடன் தந்தையையும், கூட இருந்தவர்களையும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    'கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங் களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்' என்கிறது (ஏசாயா 55:7) விவிலியம்.
    3. மனம் திரும்புதலின் அழைப்பு தேசத்தின் நன்மைக்கானது.

    'நீங்கள் மனம் திரும்பினால் தேசத்தின் நன்மையைக் காண்பீர்கள்' என்கிறது ஏசாயா நூல். எங்கெல்லாம் மனமாற்றம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தேசம் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுக் கொள்கிறது.

    மோசே தனியே வாழ்ந்து கொண்டிருந்தபோது கடவுள் அவரை அழைத்தார். எரியும் முட்செடியில் அவரிடம் பேசு கிறார். எரியும் முட்செடி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பானது. அவர்கள் கண்ணீர் கவலை துக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் மடிந்து போகவில்லை. அந்த மரண வேதனையில் இருக்கும் மக்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என இறைவன் விரும்பினார்.

    மோசே எனும் மனிதனுடைய மனமாற்றம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு காரணமாயிற்று. யோனா எனும் ஒரு இறைவாக்கினரின் மனமாற்றத்தால் நினிவே தேசம் நன்மையைப் பெற்றுக் கொண்டது.

    தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.

    இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.
    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,
    வேளச்சேரி, சென்னை.
    இன்றைக்கு உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவை மரம் இருக்கிறது. அந்த கல்வாரியின் சமூகம் கசந்த வாழ்வை நிச்சயம் மதுரமாய் மாற்றும். ஆகவே கலங்காதிருங்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.
    உங்களுக்கு முன்பாக பலவிதமான சவால்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம். குடும்பத்தைக் குறித்த பாரம், பொருளாதாரப் பிரச்சினை மற்றும் சரீர பலவீனங்கள்... இப்படி அநேக காரியங்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம். இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன்.

    நெருக்கத்திலும் உங்களை நடத்துவார்

    ‘நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்’ (சங்கீதம் 118:5).

    இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் பலவிதமான நெருக்கடிக்குள்ளே நீங்கள் போய்க் கொண்டிருப்பதை தேவன் அறிவார். அதே நேரத்தில் நீங்கள் நெருக்கத்தில் இருப்பது தேவசித்தமில்லை என்பதை முதலாவது அறிந்து கொள்ளுங்கள்.

    அன்றைக்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கி பயணம் செய்யும் போது பார்வோன் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு வந்தான். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குப் பின்னாக பார்வோன் வருகிறதைக் கண்டு பயந்தார்கள், என பின்வரும் வசனம் தெளிவாக நமக்குக் கூறுகிறது.

    ‘பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்: அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்’ (யாத்திராகமம் 14:10)

    பார்வோன் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக் கொண்டு வந்தாலும் கர்த்தரை நோக்கி மோசே கூப்பிட்டபோது ‘இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்’ (யாத்திராகமம் 14:13).

    ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ (யாத்திராகமம் 14:14) என்ற வாக்குத்தத்தங்களைக் கூறி தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை நெருக்கத்திலும் வழிநடத்தினார்.

    சாத்தான் உங்களை நெருக்குகையில் சற்றே மனம் தளராமல் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் தமது வாக்குத்தத்தங்களின்படியே உங்களை கிருபையாக வழிநடத்துவார்.

    அதிசயமாய் நடத்துவார்

    நம் ஆண்டவர் அதிசயங்களைக் காணப்பண்ணுகிற தேவன். நாம் எதிர்பார்க்கிறதைவிட அவர் நடத்துகிற பாதை மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைக்கு உங்கள் முன்பாக இருக்கிற உபத்திரவங்களை அல்ல இனி நீங்கள் காணப்போகிற அதிசயத்தை நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். சத்துரு உங்களை மேற்கொள்வது போல இப்போது உங்களுக்குத் தோன்றலாம். மேலும் உங்கள் பிரச்சினைக்கு எவ்விதத்திலும் தீர்வு கிடைக்காது என நீங்கள் எண்ணக்கூடும்.

    ஆனால் இப்போது நான் ஒரு சம்பவத்தை வேதத்தில் இருந்து குறிப்பிடுகிறேன். அச்சம்பவம் நடந்தது எத்தனை உண்மையோ அப்படியே உங்களுக்கும் ஆண்டவர் அதிசயங்களைச் செய்வார்.

    யாத்திராகமம் 14:19-21 ஆகிய வசனங்களை உங்கள் வேதத்தை திறந்து வைத்து வாசித்துப் பாருங்கள். பார்வோனின் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக்கொண்டு வரும்போது அந்த பார்வோனின் சேனை இஸ்ரவேலின் சேனையை நெருங்க முடியாதபடிக்கு மேக ஸ்தம்பமும் அக்னி ஸ்தம்பமும் ஆச்சரியமாய் தேவபிள்ளைகளை பாதுகாத்தது.

    ‘பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை’ (யாத்திராகமம் 13:22)

    இவ்விதமாய் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் பண்ணி சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே தம்முடைய ஜனங்களை அதிசயமாய் நடக்கப் பண்ணினார்.

    அன்றைக்கு மட்டுமல்ல, அதிசயமானவர் இன்றைக்கும் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்திராத அதிசயங்களைச் செய்வார். ஆகவே கலங்காமல் கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள். மனம் தளராமல் அவரையே நம்பியிருங்கள்.

    சில வேளைகளில் நாம் நடந்து போகிற பாதை நமக்கு வறட்சியாகவும் வனாந்தரமாகவும் இருக்கலாம். இதனால் மனம் உடைந்து சோர்வினாலும், அவிசுவாசத்தினாலும் பயந்து கலங்கி நிற்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளையே, கர்த்தர் தம்முடைய ஜனமாகிய நம்மை ஒருநாளும் கைவிடமாட்டார். இன்று நீங்கள் செல்லுகிற பாதை ஒரு வனாந்தர பாதையாக இருக்கலாம்.

    ‘பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பயணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது: அதனால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது’ (யாத்திராகமம் 15:22,23)

    மேற்கண்ட வசனங்களில் மூன்று நாட்கள் தண்ணீரில்லா வனாந்தரத்தில் தேவபிள்ளைகள் நடந்து சென்றதாகவும், மாராவின் தண்ணீர் அவர்களுக்கு கசப்பாக இருந்ததாகவும் வேதம் கூறுகிறது.

    இதைக் கண்ட தேவ ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்ன குடிப்போம் என்றார்கள். ஆனால் கர்த்தருடைய தாசனாகிய மோசேயோ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் ஒரு மரத்தை மோசேக்கு காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்ட உடனே அது மதுரமான தண்ணீராய் மாறிற்று.

    உங்கள் வனாந்தர பாதையில் ஒருநாளும் கர்த்தரை முறுமுறுக்காதீர்கள். அன்றைக்கு மோசே கர்த்தரை நோக்கினான். கர்த்தர் மரத்தைக் காட்டினார்.

    இன்றைக்கு உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவை மரம் இருக்கிறது. அந்த கல்வாரியின் சமூகம் கசந்த வாழ்வை நிச்சயம் மதுரமாய் மாற்றும். ஆகவே கலங்காதிருங்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

    ‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்: நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’ (ஏசாயா 58:11).

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது. யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது.

    இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும். புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார்.

    அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.
    இயேசு ஒரு இடத்தில் போதனை செய்து கொண்டிருக்கிறார். மாலையாகிறது, கால்நடையாய் வந்த கூட்டம் பசியை மறந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

    இயேசு அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனும் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தினார். வந்திருந்தவர்களில் ஆண்கள் மட்டும் ஐயாயிரம் பேர்.

    கைவசம் இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும். அவற்றைக் கொண்டு அத்தனை பேருக்கும் இயேசு உணவளித்தார். இந்த அதிசய செயலை நான்கு நற்செய்தியாளர்களும் குறித்து வைத்திருக்கின்றனர்.

    அதன் பின்னர் மக்கள் இயேசுவின் போதனைகளை நாடாமல், உணவை நாடி அவரை அணுகினார்கள்.

    இயேசு அவர்களிடம் “உணவுக்காக என்னைத் தேடுகிறீர்கள், உண்மையில் நான் அழியாத உணவு” என தன்னையே உணவாக இயேசு அவர்கள் முன்னால் வெளிப்படுத்துகின்றார். அவரே உண்மையான உணவு.

    உண்மை என்பது வாய்மொழியால் வருவது மட்டுமல்ல, அது நிலையாக இருப்பது. அதனால் தான் இயேசு தன்னை ‘நானே உண்மை’ என்கிறார்.

    உண்மை என்பது எங்கு தொடங்கி, எதுவரை பயணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘கடவுள் உண்மையில் உயர்ந்தவர்’ என்கிறது சங்கீதம்.

    அதாவது ‘உண்மை’ யைப் பொறுத்தவரை அவரை விடப் பெரியவர் யாரும் இல்லை. உண்மையின் உச்சம் என்பதே இயேசு தான். இதுவே அதன் பொருள். இது கடவுளின் பண்புகளில் ஒன்று.

    “ஆண்டவரே உண்மையான கடவுள், அவரே வாழும் கடவுள், என்றும் ஆளும் அரசர்” என்கிறது எரேமியா 10:10.

    “அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” என்கிறது சங்கீதம் 146:6.

    “அவருடைய உண்மையானது தலைமுறை தோறும் உள்ளது” என்கிறது சங்கீதம் 100.

    இந்த உண்மையின் கடவுள், உண்மையில் உயர்ந்தவர், உண்மையைக் காக்கிறவர், தலைமுறை தோறும் உள்ள உண்மையின் கடவுள். அவர் தான் மனிதனாக மண்ணில் வெளிப்பட்டார்.

    உண்மை எனும் கடவுளின் சாயல், கிறிஸ்துவின் சாயலாக மண்ணில் வெளிப்பட்டது. “கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை” என இயேசு குறிப்பிடுவதில் கடவுளின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

    அவர் இப்படி மொழிகிற உண்மை, மக்களில் வெளிப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். “உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது” (எபேசியர் 4:21) என்கிறது விவிலியம்.

    கடைசியில் இயேசுவே அந்த உண்மை என்பதும் யோவான் நற்செய்தியில் தெளிவாகிறது. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவான் 14:6) என்றார் இயேசு.

    இயேசுவிடம் உண்மை இருந்தது, இயேசுவே அந்த உண்மை, இதுவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

    “வாழ்வு தரும் உணவு நானே” (யோவான் 6:35) என இயேசு தன்னைப்பற்றிக் கூறுகிறார். இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் அலைந்த காலத்தில் வானத்திலிருந்து ‘மன்னா’ என்ற உணவு கொடுக்கப்பட்டது. அதை மோசே கொடுத்ததாக மக்கள் கூறினர்.

    இயேசுவோ, ‘அதை மோசே கொடுக்கவில்லை, எனது பிதாவே அதைக் கொடுத்தார்’ என்றார்.

    இன்று அதே பிதா ‘உண்மை’ யாம் இயேசுவை உணவாக பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ‘மன்னா’ முடிவுடைய உணவு, மகனோ முடிவற்ற வாழ்வைத் தரும் உணவு.

    உண்மை நமக்கு முடிவற்ற வாழ்க்கையைப் பெற்றுத் தருகிறது, என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.

    உண்மை என்பது புதிய வாழ்க்கையின் அடையாளமாக விவிலியத்தில் சொல்லப்படுகிறது. அது புது வாழ்வு சார்ந்தது, புது வாழ்வுக்கான வழியைச் சார்ந்தது.

    “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்” (1 யோவான் 1:9) என்கிறது விவிலியம். இந்த உண்மை நிரந்தர மாற்றத்தை நமக்கு பெற்றுத்தருகிறது.

    மீண்டும் பாவத்தில் விழாமல் நம்மைக் காக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. ‘உண்மை’ நம்மை பாவத்தில் விழாமல் காக்கிறது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

    பாவத்தைக் கழுவ, பழுதற்ற விலங்குகளின் ரத்தம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது இறைமகன் இயேசுவின் ரத்தம் பலியாக சிந்தப்படுகிறது.

    விலங்குகளின் ரத்தம் பாவத்திலிருந்து தற்காலிக தப்பித்தலைத் தந்தது, இயேசுவின் ரத்தம் மட்டுமே நிரந்தர மீட்பைத் தருகிறது.

    இயேசு உண்மையாக இருக்கிறார், தந்தையிடம் கற்ற உண்மையைப் பேசுகிறார். அவரை நாம் உண்மையுடன் அணுகவேண்டும். அப்போது உண்மையாகவே நமது பாவத்திலிருந்து மீட்பும், நிலைவாழ்வும் கிடைக்கும். 
    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை.
    கடவுளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். தன்னலத்தை துறந்து, பிறர் நலனுக்காக வாழ்பவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.

    இறைமகன் ஏசு தனது சீடர்களிடம்.., '' என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (லூக்.9:23) என்று கூறினார். அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக, தன்னலமற்று அர்ப்பணிப்பை முன்னெடுக்கும் எவருக்கும் அவமானமும், வேதனையும் கூடிய சிலுவை காத்திருக்கிறது. இந்த சிலுவையை நாள்தோறும் தூக்கிச் சுமந்து, அவருக்காகவே வாழுகிற மனிதன் தான் கிறிஸ்தவன்.

    கிறிஸ்தவத்தின் வெளி அடையாளங்கள், கடவுளையும், மனிதனையும் இணைக்க உதவாது. கடவுளின் வார்த்தைகளை அல்லது கட்டளைகளை வாழ்வாக மாற்றிக் கொள்ளும் போது தான், கடவுளால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.' நான் என் தந்தையின் கட்டளைகளை கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவான்.15:10) என்கிறார் ஏசு.

    பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை. ஏசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த வாழ்வும், அவரது மரணமும், நமக்கு உணர்ந்தும் தெளிவான பாடங்கள் இவை. '' தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

    மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.'' (பிலிப்.2:7-9) எனவே நாமும் நம்மை தாழ்த்தி, தன்னலத்தை துறந்து, ஏசுவைப்போல வாழ்வோம். நம் வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கும். அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வார். நமக்குள் இறைவனின் அமைதி என்றும் இருக்கட்டும்.

    சகோதரி. ஆல்பெட்டினா
    தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தனிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தனிக்கவும் முடியும்.
    பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்து இருங்கள்... (யோவான் 15:9)

    பொதுவாக மனிதர்கள் பணம், பொருள், நல்ல வாய்ப்பு வசதி, சுகபோகங்கள் இவைகளைத்தான் விரும்பி தேடுவதைப்போல காணப்படுகிறார்கள். ஆனால், எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பைத் தேடுகின்ற ஒரு உணர்வு தான் அதிகமாகப் புதைந்து கிடக்கிறது. அன்பை குறித்த ஒரு ஏக்கம் மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கின்றது. தான் உண்மையாகவும், போதுமான அளவிலும் நேசிக்கப்படவில்லை என்ற உணர்வு அநேகரை மிகுதியாகப் பாதிக்கின்றது.

    சிலர் தங்கள் கணவர்மார்களாளோ, மனைவி மார்களாளோ, பெற்றோர்களாளோ, நண்பர்களாளோ மிகுதியாக நேசிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதாக உணர்வதில்லை. இது மற்றவர்களின் அன்பைக் குறித்து அறியாத நிலை என்று கூற முடியாது. இது ஒருவர் அன்பு விஷயத்தில் எளிதாக திருப்தியடையாத நிலையின் பிரதிபலிப்பாகும். ஏனென்றால், அன்பைக் குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளத்தில் காணப்படுவதால், மற்றவர்களின் மிகுதியான அன்பாலும் அங்கு திருப்தி ஏற்பட முடியவில்லை.

    தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் பாயும் வரை, எவ்வளவு பெரிய மனிததன்மையுள்ள அன்பினாலும் இருதயம் நிறைவடைய முடியாது. தேவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய இருதயங்களை திருப்தி செய்கின்ற அளவிற்கு வலிமையுடையதாகவும், உண்மை நிறைந்ததாகவும், நிறைவுடையதாகவும், இருக்கிறது. ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.

    தேவன் அன்பாகவே இருக்கிறார். இந்த தேவ அன்புதான் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கின்றவர்களின் இருதயத்தில் ஊற்றப்படுகின்றது. நம்முடைய ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தேவ அன்பு மட்டுமே ஈடுகொடுக்க முடியும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு அன்பைத்தேட வேண்டிய இடம் தேவ சமூகம்தானேயன்றி, மனிதர்களிடமிருந்து அல்ல. ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை தன்னுடைய வாழ்நாள் முடிவு வரையில் நேசித்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம் (யோவா - 13:1) ஏனென்றால் அவருடைய கவனம் அவர்களுடைய அன்பைப்பெறுவதில் இல்லாமல், அவர்களை உண்மையாக நேசிப்பதிலேயே இருந்தது.

    அவர் பிதாவாகிய தேவனுடைய அன்பை எப்போதும் இருதயத்தில் ருசித்துகொண்டிருந்தபடியால், அவர் அன்பை தேடுகிறவராக இல்லாமல், அன்பை தேடுகிறவர்களுக்கு அதனை வழங்குகிறவராக இருந்தார். தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தனிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தனிக்கவும் முடியும்.

    “ இறைவனை நோக்கிய உன் அன்பில் முழுமையில்லையேல்
    மனிதனை நோக்கிய உன் அன்பு அறைகுறையாகவே இருக்கும்“

    - சாம்சன் பால் 
    தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும்.
    விவிலியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

    இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.

    ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.

    உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர் இறைவன். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். ‘இறைவனை நேசி, சக மனிதனை நேசி’ என்பதே அவரது கட்டளைகளின் மையம்.

    இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரை களுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. ரெயில் சிநேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்சுகளும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலு விழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.

    இயேசு நம்மை அழைக்கிறார், உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

    1. தன்னோடான உறவு

    தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல. “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

    நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும்.

    2. உறவினரோடான உறவு

    நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.

    விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

    3. கணவன் மனைவி உறவு

    ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

    இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது, பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்” (எபேசியர் 5:24) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

    4. பிறரோடான உறவு

    சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ‘ஸ்டேட்டஸ்’ போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது.

    இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் அதைப் புரிந்து கொள்ள

    5. திருச்சபையோடான உறவு

    திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந் திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.

    தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.

    சேவியர், சென்னை. 
    ×