search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம்.
    உலகில் எந்த ஒரு உயிரும் இன்னொரு உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் காணப்படுகிறது. பூச்சிகள் பறவைகளைப் பார்த்து பயப்படும், பறவைகள் பூனைகளைக் கண்டு பயப்படும், மனிதர்கள் நோய் கிருமிகளைக் கண்டு பயப்படுவார்கள்.

    இப்படித் தான் மெய்யான வாழ்வுக்கும் ஒரு பகைவன் உண்டு. அவன் தான் சாத்தான்.

    யோவான் நற்செய்தியாளர் அதை மிக அழகாக முரண்களின் மூலம் விளக்குவார். ‘கடவுள் ஒளியாக இருக்கிறார், பாவம் இருளாக இருக்கிறது’ என்பது அதில் ஒரு சின்ன உதாரணம்.

    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பேச்சுடன் முடிந்து போவதல்ல. நாம் விசுவாசிப்பதன் படி வாழ்ந்து காட்டுவதில் தான் அது நிறைவடைகிறது. வாயின் வார்த்தைகளை வாழ்க்கை நிரூபிக்க வேண்டும்.

    கிறிஸ்தவ வாழ்க்கை ‘நடை’ என்று விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசுவை மீட்பராகக் கண்டுணரும் போது இந்த வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    ‘நடை என்பது நிற்பதற்கான குறியீடு அல்ல, முன்னேறுவதற்கான அழைப்பு. இறைவனின் சித்தம், நோக்கம், விருப்பம் எல்லாம் அவரது வார்த்தையின் வழியாக நாம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வது தான். அவர் தூயவராய் இருப்பதும், அவரது வார்த்தை தூயதாய் இருப்பதும் தான் அதன் காரணம்.

    தூய்மையற்றதை விவிலியம் மறைப்பதில்லை. ‘ஆபிரகாம், விசுவாசிகளின் தந்தை’ என குறிப்பிடும் விவிலியம் தான் ‘ஆபிரகாம் பொய்யன்’ என்றும் குறிப்பிடுகிறது. விடுதலை நாயகன் மோசே, ‘முரட்டாட்டமான மனிதன்’ என்கிறது. யோனா எனும் தீர்க்கதரிசியை, ‘கீழ்ப்படியாதவன்’ என்கிறது. சிம்சோனை, ‘பாவம் செய்தவன்’ என்றும், தாவீதை, ‘கொலையாளி’ என்றும் விவிலியம் மறைக்காமல் பேசுகிறது. மோட்சத்துக்குச் செல்லும் பாதை குறுகியது, அது விரிவான பாதை என விவிலியம் பொய் சொல்வதில்லை.

    கடவுள் எப்படித் தூயவரோ, விவிலியம் எப்படி தூயதோ, அதுபோல கடவுளுக்குள் வருபவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பிறக்கும் போது நம்முடன் தோன்றி வருகின்ற பாவம், பாவ இயல்பு என்கிறோம்.

    ஆவியினால் மறுபடியும் பிறக்கும் போது பெற்றுக்கொள்வது புதிய இயல்பு. இந்த இரண்டு இயல்புகளுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் உண்டு. நான் ஆவியினால் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அதைத் தக்க வைத்துக்கொள்ள பாவ இயல்போடு போராட வேண்டியிருக்கிறது.

    பாவ இயல்பு நம்மை தோற்கடிக்க முயல்கிறது, அதை தோல்வியடைய வைக்க நமக்கு தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது. சுய ஒழுக்கமோ, சட்ட திட்டமோ இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

    இந்த பழைய இயல்பை மறைக்க விரும்பும் விசுவாசிகள் பொய் சொல்பவர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் பிறரிடம் பொய் சொல்கின்றனர். பிறர் தன்னை ஆன்மிகவாதி என நம்பவேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள். தன்னை ஒரு ஆன்மிகவாதியாய்க் காட்டிக்கொள்ள ஆசைப்படும் மனம் பொய் சொல்கிறது. தான் இருளிலே நடந்தாலும், தான் ஒளியிலே நடப்பவனாக பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த பொய் பேசுதல் நடக்கிறது.

    பின்னர் தன்னோடு தன்னைப்பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் மனிதன். இது பிறரை ஏமாற்றும் நிலையல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலை. பாவத்தில் வாழ்ந்து கொண்டே, கடவுளுக்கும் தனக்கும் இடையே உறவு சீராக இருப்பதாக சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

    இந்த நிலையிலிருந்து தூய நிலைக்கு மனிதன் மாறவேண்டும். ‘கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை’ என்கிறது விவிலியம். இருளில் இருந்து நம்மை அவரது ஒளிக்கு இறைவன் அழைக்கிறார். அது தான் மீட்பின் முதல் நிலை. இப்போது நாம் ஒளியின் பிள்ளைகள் ஆகிறோம்.

    தீமை செய்பவர்கள் ஒளியைப் பகைக்கிறார்கள். ஆனால் ஒளி பிரகாசிக்கும் போது நமது உண்மையான சுபாவம் வெளிப்படுகிறது. நம்மிடம் பாவம் இல்லை என சொன்னால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் மாறிவிடுகிறோம். இறைவனுக்கு நமது பாவங்களைப் பற்றி தெரியும். ஆனாலும் இறைவனிடம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிட வேண்டும்.

    நீ எங்கேயிருக்கிறாய்? என ஆதாமிடம் கேட்டார் இறைவன். உன் பெயர் என்ன? என யாக்கோபிடம் கேட்டார். உன் கணவரை அழைத்து வா, என சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

    எல்லாமே இறைவனுக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனாலும் நாம் அதை சொல்லவேண்டும் என இறைவன் விரும்புகிறார். உண்மையை மறைக்காமல் பேசவேண்டும் என ஆசைப்படுகிறார்.

    பாவத்தை அறிக்கையிடுவது கடவுளுக்கு நம் பாவத்தைத் தெரியப்படுத்த அல்ல. நமது பாவத்தையும், பாவ இயல்பையும் நாம் உணர, வெளிப்படையாய் இருக்கிறோம் என்பதை இறைவனிடம் நிரூபிக்க.

    இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம். 
    பாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும்.
    படைப்பு இறைவனுடையது, புதுப்பித்தலும் அவரது சித்தத்துக்கு ஏற்ற ஒன்று. இறைவன் படைத்த இயற்கையை அழிப்பவர்களை எதிர்த்து நிற்க இறைவார்த்தை அறைகூவல் விடுக்கிறது.

    திருமறையில் நாம் கற்கின்ற அடிப்படை விஷயம் என்னவென்றால், கடவுள் ஒரு மக்களினத்தை தனக்குரிய சொந்த மக்களாக தேர்ந்தெடுக்கிறார். பின்னர் அவர்கள் மூலம் உலக மக்கள் முழுவதையும் தனக்குரியவர்களாக மாற்றுகிறார். பல அரசர்களுடைய வாழ்க்கை விவிலியத்தில் இப்படித் தான் விவரிக்கப்படுகிறது.

    ஆரம்பத்தில் இறைவனை அறியாமல் தவறான வாழ்க்கையும், தவறான வழிபாட்டு முறையும் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்த இறைவாக்கினர்கள், கடவுளுக்கு நேராக அவர்களைத் திருப்புகிறார்கள்.

    புதிய ஏற்பாட்டில் யூதர்கள், யூதரல்லாதோர் எனும் மாபெரும் இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். பேதுரு யூதருக்கானவர் என்றும், பவுல் யூதர்கள் அல்லாதவர்களுக்கானவர் என்றும் நற்செய்தி அறிவித்தலில் நாம் பிரித்துப் பார்ப்பதுண்டு.

    முழு மக்களினமும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் இறைவனின் ஆர்வமும், ஆதங்கமுமே இவற்றில் வெளிப்படுகிறது.

    ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவோ, நிராகரிக்கப்பட்டவர்களாகவோ எந்த மக்களினமும் இல்லை.

    “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்” என்கிறது திருவெளிப்பாடு 7:9

    மேசியாவின் ரத்தமும், வாழ்வும் தோல்விக்குரிய சிலுவைகளை வெற்றிகளாக மாற்றிவிட்டன. பாடுகளினாலும், துயரங்களினாலும் சோர்ந்து போனவர்கள், ரத்த காயம் அடைகிறார்கள். இப்படி வலியிலும், சோர்விலும் இருப்பவர்களை இன்னொரு தூய ரத்தம் கழுவுகிறது.

    விளைவு, இவர்கள் வெண்மையாகிறார்கள். பிறருக்காக இறைமகன் சிந்திய ரத்தம் அடுத்தவர்களை சிவப்பாக அல்ல, வெண்மையாக மாற்றுகிறது.

    தூயவர் தூய்மையான ரத்தத்தால் நம்மைக் கழுவுகிறார். ஆனால் அது எளிதாக நடைபெறுவதில்லை. அது பாடுகளின் வழியாக நாம் பயணிக்கும் போது தான் கிடைக்கிறது. அத்தகைய பாடுகளைச் சந்திக்கும் மன உறுதியை, ஆற்றலை தனது சீடர்களுக்கு இயேசு தருகிறார்.

    “தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” (மார்க் 3:14) என்கிறது விவிலியம். தீமையை விரட்டவும், தீமையைத் தாங்கவும் இயேசு சீடர்களை வலுவூட்டுகிறார்.

    “கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” (2 கொரி 1:7,8) எனும் வசனங்கள் தீமோத்தேயுவை பவுல் ஆயத்தப்படுத்தும் நிகழ்ச்சியை விளக்குகிறது.

    ஆண்டவர் தனது சீடர்களை வலுப்படுத்தியது போல, பவுல் தீமோத்தேயுவை பலப்படுத்துகிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தான் முன்மாதிரியாக பவுல் பயன்படுத்துகிறார்.

    எப்படி பிலாத்துவின் முன்னால் இறைமகன் இயேசு நின்றாரோ, அதே உறுதியோடு நிற்கவேண்டும் என பவுல் உற்சாகமூட்டுகிறார்.

    இயேசுவுக்காக பாடுகளையும், நிந்தைகளையும் அவரது சீடர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அதை நிராகரித்து விட்டு நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பயணிக்க முடியாது.

    பாடுகளின் வழியாக வெளிப்படுவது தான் நற்செய்தி. துன்புறுத்தப்படுவதும், பாடு அனுபவித்தலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இயேசு தனது நற்செய்தியில் தெளிவாக உரைத்திருக்கிறார்.

    “தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள்” என்கிறது மத்தேயு நற்செய்தி.

    பின்வாங்குவது எப்படி என்பதை யோசிக்க அல்ல, முன்னேறிச் செல்ல இயேசுவின் வார்த்தைகள் நமக்கு துணிச்சல் அளிக்க வேண்டும்.

    பாடுகளையும், துன்பத்தையும் ஏற்று நாம் உலகத்தலைவர்களின் முன்னால் நிற்கும் போது என்ன பேசவேண்டும் என்பதை தூய ஆவியானவர் உணர்த்துவார் எனும் இறை வார்த்தை நமக்கு ஆறுதலாய் இருக்கிறது.

    “ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை” என ஸ்தேவான் குறித்த இறைவார்த்தை நமக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறது.

    ‘இயேசுவுக்காக தனது உயிரையே கையளித்த முதல் ரத்த சாட்சி’ என கிறிஸ்தவ வரலாற்றில் ஸ்தேவான் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.

    நமது உடலைப் பாதுகாப்பது அல்ல முக்கியமானது, நமது ஆத்மாவை நாம் காத்துக்கொள்ள வேண்டும். பாடுகள் நமது உடலை ஊனமாக்கலாம், ஆனால் நமது ஆத்மாவை நாம் தூயதாகக் காத்துக் கொள்ள வேண்டும்.

    இயேசுவுக்காக மரித்த சீடர்களெல்லாம் மீட்பின் நிச்சயத்தோடு மரித்தார்கள். இறைவனோடு இணைந்திருப்போம் எனும் உறுதியுடன் தங்கள் உயிரையே கையளித்தார்கள்.

    அந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும். அதற்கு இறைமகனை விசுவாசித்து, அவரால் தூய்மையாக்கப்பட்டு, அவருக்காகப் பாடுகளில் பயணிக்க வேண்டும்.

    பாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும். 
    பொய்சொல்லி வாங்கியதை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, இறைப் பாதைக்கு மீண்டும் வந்தால் அவனது நாட்கள் முழுவதும் நன்மையால் சூழப்படும் என்றும் வேதம் வாழ்த்துகிறது.
    வாழ்நாள் முழுவதுமே இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர் என்று எவருமே சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனிதனுக்கு அப்படி ஒரு வாழ்வை இறைவன் நிர்ணயிக்கவில்லை. ‘எவ்வளவு உச்ச அந்தஸ்தைப் பெற்றவர் என்றாலும், அதற்கு ஏற்றபடியான உபத்திரவத்தின் நாட்களையும் சந்திக்க வேண்டியதுள்ளது’ (யோபு-30: 16,27) என்கிறது விவிலியம்.

    உலக வாழ்க்கையை இன்ப-துன்பங்கள், சுக-துக்கங்கள் நிறைந்த மாயையான நாட்களாகவே இறைவன் அமைத்துத் தந்துள்ளார். மகிழ்ச்சியான காலங்களில் மனிதன் தன்னைப் புகழவும், தாழ்ச்சி அடையும் காலகட்டங்களில் தன்னைத் தேடவும் அவர் செய்துள்ளார். இதில் துன்மார்க்கன், நீதிமான் என்ற விதிவிலக்கு கிடையாது.

    எந்த காலகட்டத்திலும் ஒருவன், தன்னால் படைக்கப்பட்டுள்ள மனசாட்சியின் பாதையில் நடக்க வேண்டும் அல்லது தான் வகுத்துள்ள கிறிஸ்தவ பாதையில் நடக்க வேண்டும். இதுதான் மனித குலத்தைப் பற்றிய இறைவனின் சித்தமாக உள்ளது. ஏனென்றால், இந்த பாதைகள்தான் ஒருவனை பாவமற்ற நிலையில் வாழச் செய்கின்றன.

    இவற்றில் ஏதாவது ஒன்றின்படி நடந்து குற்றமற்றவன் என்ற நிலையை எட்ட முயற்சிக்கிறோமா? என்பது ஒவ்வொருவரும் அவரவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

    மனசாட்சியின் பாதையைப் பொறுத்தவரை, அது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதனால் மழுங்கடிக்கப்படும் ஒன்றாகவே காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் அரிதாக ஏற்படும் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரும் பாவங்களில் மனிதன் விழுந்துவிடுகிறான்.

    ஆனால், மனசாட்சியின்படி நடப்பதால் தனக்கும் பிறருக்கும் ஒருவன் நன்மை அளிக்கிறான். உதாரணமாக, ஒரு பொய்யைச் சொல்லும் இக்கட்டான சூழல் நேரிடும்போது, ‘வேண்டாம்’ என்று மனசாட்சி உபதேசிக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் மனது, பொய் சொல்லாமல் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு அறிவை ஏவுகிறது.

    எனவே அந்த அறிவின்படி, தன் மீதுள்ள தவறை ஒப்புக்கொண்டோ அல்லது உண்மையை எடுத்துரைத்தோ அந்த மனசாட்சியுள்ள நபர் செயல்படு கிறார். ஆக, மனசாட்சியின் உபதேசத்தால் ஒரு பொய் கூறப்படாமல் நிறுத்தப் படுவதோடு, பொய்யால் மற்றவர்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு மற்றும் அதனால் வரும் தாக்கம், சாபம் போன்றவற்றுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

    உலகின் அனைத்து தரப்பு மனிதனுக்கும் பாகுபாடில்லாமல் இறைவனால் உட்புகுத்தப்பட்டுள்ள கருவிதான் மனசாட்சி. ஆனாலும், பாவங்களை செய்யாதபடி இறைவனால் தரப்படும் உபதேசங்களை மனிதனுக்கு மனசாட்சி சுட்டிக்காட்டத்தான் செய்யுமே தவிர, பாவங்கள் செய்யப்படுவதை தடுக்கும் சக்தி அதற்குக் கிடையாது.

    எனவேதான், பாவங்களை விரும்புகிறவர்களும், குற்றங்கள்-பொய்கள்-முறைகேடுகள் மூலம் சுயலாபம் ஈட்டும் நோக்கத்தில் உள்ளவர்களும் தங்களின் மனசாட்சியை எளிதாக புறந்தள்ளிவிட்டு அதுபோன்ற செயல்பாட்டில் இறங்கிவிடுகின்றனர்.

    மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியை இறைவன் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதற்காக மனித குலத்தின் அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற வகையில் கதைகள், நெடுங்கதைகள், சொற்பொழிவுகள், நீதி போதனைகள், வசனங்கள், பாடல்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகள், சித்திரங்கள் போன்றவற்றை சிலர் மூலம் உருவாக்கி அவற்றை அனைவரது காதிலும், மனதிலும், பார்வையிலும், உணர்விலும் விழச்செய் கிறார்.

    ஜாதி, மத பாகுபாடில்லாமல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருமே இவற்றைக் கேட்கும்போது, மனசாட்சியால் குத்தப்படுகிறார்கள். என்றாலும், பலர் அதை உணர்ந்தும் தங்களின் விருப்பம், உணர்ச்சி மற்றும் சுபாவங்களுக்கு ஏற்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டே செல்கின்றனர்.

    மனசாட்சிக்கு எதிராக நடந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயத்தினாலும் வரும் பாதிப்புகளை அவரும், குடும்ப உறுப்பினர்களும் பிற்காலத்தில் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பாதிப்புகள் நேர்ந்த பிறகும் அதை பல வழிகளில் சரிக்கட்டத்தான் முயற்சிக்கிறார்களே தவிர, அதன் மூலம் புத்தி அடைந்து மனசாட்சியின் வழிக்கு பலர் வருவதில்லை.

    அதுபோலவே, இறைநீதியின்படி (கிறிஸ்துவின் போதனைகள்படி) நடக்கும் உண்மையான கிறிஸ்தவனுக்கும் ஏற்ற இறக்கங்கள் நேர்கின்றன. உண்மை கிறிஸ்தவனை நீதிமான் என்று வேதம் குறிப்பிடுகிறது. இயேசு சொன்னபடி ரட்சிப்பின் நிலையை அடைந்த நீதிமான், ஏற்கனவே உள்ள மனசாட்சியோடு இறைவனால் அனுப்பப்படும் பரிசுத்த ஆவியின் போதனைக்கு உட்படுத்தபடுகிறான்.

    பரிசுத்த ஆவியின் ஆட்கொள்ளுதலுக்கும், மனசாட்சிக்கும் வித்தியாசங்கள் உண்டு. பாவங்கள் செய்யப்படாத வண்ணம் போதிப்பதோடு, அதை தவிர்க்கக்கூடிய பலத்தையும் அளிக்கும் வல்லமை பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் உண்டு. ஆனால் போதனை அளிப்பதோடு மனசாட்சி நின்றுவிடும்.

    எனவேதான், உலகில் ஒருவன் பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், இயேசு காட்டியுள்ள வழியில் நடந்தால் மட்டுமே முடியும் என்று வேதம் போதிக்கிறது. இது உலகமக்கள் அனைவருக்கும் விடப்பட்டுள்ள அழைப்பு.

    மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், நீதிமான் சில நேர்வுகளில் தன்னையும் அறியாமல் சிறிய குற்றங்களை (திட்டமிட்ட கொலை, விபசாரம் போன்றவை தவிர்த்து) உணர்ச்சி வேகத்திலோ, உந்து தலுக்கு உட்பட்டோ செய்யும்போது, பரிசுத்த ஆவி அவனது மீறுதலை அவனது இதயத்துக்கு தெரியப்படுத்துகிறது.

    பின்னர் அவனை கண்டிக்கிறது. அதை அவன் உணர்ந்து, யாருக்கு எதிராக மீறுதலில் ஈடுபட்டானோ அவனிடம் சென்று, இயேசு வகுத்துள்ள வழியின்படி ஒப்புரவாகவும் பரிசுத்த ஆவி வழிநடத்துகிறது. அதற்கான காலசூழல்களும் இறைவனால் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அந்த வகையில், நீதிமானின் வாழ்க்கையில், பிதா (இறைவன்), குமாரன் (இயேசு), பரிசுத்த ஆவி என்ற முப்பரிமாணம் (திரித்துவம்) செயல்படுகிறது.

    ஆனால் இந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டு மீறுதலில் நீதிமான் தொடர்ந்து ஈடுபட்டால், அவனது ஆத்மா பட்டயத்துக்கு இரையாகும் என்று வேதம் எச்சரிக்கிறது (யோபு36:7-12).

    பொருளாதார ஆசையை நோக்கி வழிகளைத் திருப்பிக்கொண்ட பல இறைப்பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையில், தண்டனைகளையும், குறைச்சல்களையும் இறைவன் அனுமதித்ததையும், அதன் முடிவையும் நம்மில் பலர் கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் இருக்கிறோம்.

    இதை புரிந்துகொண்டு உடனடியாக நீதிமார்க்கத்துக்கு பக்தர்கள் திரும்ப வேண்டும். பொய்சொல்லி வாங்கியதை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, இறைப் பாதைக்கு மீண்டும் வந்தால் அவனது நாட்கள் முழுவதும் நன்மையால் சூழப்படும் என்றும் வேதம் வாழ்த்துகிறது. இதை நாம் அனைவரும் உணர்வோம், திருந்துவோம். 
    இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.
    நம்முடைய சமுதாயத்தின் அடிப்படை சக்தி நம்பிக்கை. இந்த சக்தியை எதன் மீது விரயம் செய்கிறோம் என்பதில் தான் நாம் செழிப்படைவதும், செல்லாக்காசாவதும் இருக்கிறது. எதன் மீது நம் நம்பிக்கை இருக்க வேண்டும்? யாரை சார்ந்து நம் வாழ்வு இருக்க வேண்டுமென்பதை இன்றைய எரோமியாவின் இறைவார்த்தைகள் புலப்படுத்துகின்றன. மனிதரில் நம்பிக்கை வைப்பதை தவிர்க்க வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் நீரோடை அருகில் நடப்பட்ட செழித்து கனி தரும் மரம் போலவும், மனிதரில் நம்பிக்கை வைப்போர் பாலை நிலத்தில் நடப்பட்ட உலர்ந்த மரம் போலவும் ஆவர் என்றும் தெரியப்படுத்துகிறார் இறைவன்.

    ஆகவே! நாம் பெற போகின்ற தீர்ப்பு, நமது செயல் சார்ந்தவையாக தான் இருக்கும். இறைவன் நம் உள்ளத்தை ஊடுருவி பார்ப்பவர். அவரிடம் மறைத்து, எதையும் நம்மால் செய்ய முடியாது. இதனால் தான் இறைவன் நம் இதயங்களை சோதித்தறிவது போல நாம் இத்தவக்காலத்தில் நம் இதயத்தை சோதித்தறிந்து இருளிலிருந்து ஒளிமயமான வாழ்விற்கு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

    இத்தகைய செயல் வடிவம் பெறுகின்ற இறைநம்பிக்கை எப்படி இருக்கும்? இருக்க வேண்டுமென்பதை லாசர், பணக்காரர் கதை வழியாக நமக்கு விளக்குகிறார். ஏழைகளுக்கு உதவுவது நம் எல்லோருடைய கடன் அல்லது கடமை என்பதை இந்த கதை உணர்த்துகின்றது. ஏசுவின் காலத்திற்கு மட்டும் பொருந்திய கதையல்ல, நம் லாசருடைய கதை. இன்று நாம் காணும் சமுதாயத்தின் அவல நிலையை சுட்டிக் காட்டும், நீதியின் அளவு கோலாகவும், இக்கதை நமக்கு பாடம் புகட்டுகின்றது.

    இன்றும் உணவின்றி, உடையின்றி நிற்கும் கூட்டம் ஒரு புறம். தேவைக்கு மிஞ்சியவற்றை குப்பையில் வீசும் கூட்டம் மறுபுறம். இந்த சவாலை சமாளிப்பதே இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த உதவும் சூழ்நிலை. இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.

    - கிருபாகரன், மறைப்பணி நிலையம், கும்பகோணம். 
    “கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கு மனிதராகி, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார்” என்பதே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை நம்பிக்கை.
    “கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கு மனிதராகி, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார்” என்பதே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை நம்பிக்கை.

    கடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.

    அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.

    ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.

    இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.

    கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.

    தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.

    இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.

    நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.

    மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.

    இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.

    இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).

    மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.

    மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

    இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.

    டே. ஆக்னல் ஜோஸ், சென்னை. 
    முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.
    உலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத்தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன்.

    அவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.

    முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

    “அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

    ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.

    இந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.

    எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.

    இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.

    இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.

    “இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.

    அந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.

    இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.

    பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.

    இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.

    உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.

    “இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.

    இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.

    இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.

    எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.

    நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.

    “வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.

    அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.
    இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர்.
    இறைவனுக்கு உகந்த மக்களாக, பிள்ளைகளாக வாழ் வதற்கு நம்மை தகுதியாக்கி கொள்ள இறைவன், மோசே வழியாக கொடுத்த சட்டங்களும், முறைகளும், நியமங்களும் தான் அடிப்படை தேவைகள். அன்றில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ சமூகம், இஸ்ரேல் மக்களை மாதிரியாக கொண்டே அதன் தலைவரை பின்பற்றுகின்றது.

    இறைவாக்கினர் கூற்று இறைவனின் கூற்று என்பதை அன்றைய திருச்சபையும், இன்றைய திருச்சபையும் உணர்ந்து உள்வாங்கி செயல்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் புதிய இனமாக, புதிய மக்களாக, இறைவனோடு வாழ, மோசேயின் சட்டங்கள் உதவி செய்தன. இப்்போது நமது திருச்சபையில் திருத்தந்தையின் அறிவுரைகளும், திருத்தங்களும், நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகை செய்கிறது.

    இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர். இஸ்ரேல் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும், பின்னி ஒன்றிணைந்து வாழ்ந்த இறைவன், இன்று நம்முடனும், நமது திருச்சபையுடனும் ஒன்றித்து வாழ்கிறார். இறைவன் நம் அருகில் உள்ளார் என்கிற தெய்வபயம,் நமக்கு அவரின் சட்டங்களை கடைப்பிடிக்க உதவி செய்யும்.

    இயேசு கிறிஸ்துவே! இந்த சட்டங்கள், நியமங்கள், அனைத்தின் முழுமை என்று நற்செய்தியில் சான்று அளிக்கிறார். அவரை பின்பற்றுவதே, சட்டம் அனைத்தையும் பின்பற்றுவது ஆகும். இந்த சட்டங்களையும், நியமங்களையும் நிறைவேற்ற, ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது. சுதந்திரம் என்பது விரும்பிய எதையும் செய்வதன்று.

    விரும்பியதெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. அது கட்டுப்பாடற்ற தன்மையாகும். சட்டங்கள் அனைத்தையும் உதறிதள்ளுவது உண்மையான சுதந்திரம் அல்ல. மாறாக சின்னஞ் சிறு கட்டளைகள் ஒவ்வொன்றையும,் இயேசுவின் பெயரால் கடைபிடித்து அன்போடு வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அன்பிற்காக சட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை.

    கிருபாகரன்,மறைப்பணி நிலையம், குடந்தை. 
    நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.
    பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான மன்னன் தாவீது. அவரது வம்சா வழியில் வந்தவர் தான் இறைமகன் இயேசு.

    ‘தாவீது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது.

    ஆனால் அவரது உயிரைப் பறிக்க சவுல் வீரமாய் முயன்றார். காரணம் சவுல் மன்னனை விட தாவீது அதிகம் புகழ் பெற்றது தான்.

    பொறாமை அவருக்குள் தீய எண்ணங்களை விதைத்தது.

    “...எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற ரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” (1 சாமுவேல் 19:5) என சவுலிடம் அறிவுரை கூறுகின்றனர்.

    புதிய ஏற்பாட்டில் அவரது வழியில் வந்த மீட்பர் இயேசு கிறிஸ்து குற்றமற்றவர். ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

    பிலாத்து அதிகாரம் பொருந்திய தலைவராக அங்கே நிற்கிறார். இயேசுவை விடுவிக்கவும், கொல்லவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

    ஆனால் அவரோ தனது ‘கைகளைக் கழுவி’, ‘எனக்கு இந்த ரத்தத்தோடு பங்கில்லை’ என கூறுகிறார். கை கழுவுவது மிக எளிது. ஆனால், ரத்தப்பழி அவர் மீது விழாமல் இருக்க முடியாது.

    தனது பதினாறாம் வயதில் அரசராய் அமர்ந்து, பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்திய தாவீதைக் கொல்ல இருபத்தோரு முயற்சிகள் நடந்தன. எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தன்னைக் காத்துக்கொள்ள அவர் அலைந்து திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    சூழ்ச்சி, ரத்தப்பழியைக் கொண்டு வரும்.

    வீழ்ச்சி, அதன் விளைவாக வரும்.

    சவுலின் வாழ்வில் இருந்த சூழ்ச்சி பொறாமை, சோதனை அனைவருக்கும் பொதுவானது. அதில் யாரும் தப்ப முடியாது. சவுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தாவீதின் வளர்ச்சி அவருக்குள் பொறாமையை விதைத்தது.

    தனது சாயலாய் படைக்கப்பட்ட முதல் மனிதனாலேயே சோதனையை தாண்ட முடியவில்லை. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றனர்.

    ஆபிரகாமும் லோத்தும் பயணித்த போது லோத்தின் முன்னால் நின்ற சோதனை நல்ல செழிப்பான நாட்டை நான் எடுத்துக் கொள்வதா? அல்லது அதை ஆபிரகாமுக்கு விட்டுக் கொடுப்பதா? என்பது. சோதனையில் லோத்து விழுந்து விட்டார்.

    யாக்கோபு, ஏசா வாழ்வில் பசி சோதனையாய் வருகிறது, அதில் வீழ்கிறார் ஏசா. உணவுக்காய் தலைமகன் உரிமையை இழக்கிறார்.

    சவுலும் விதிவிலக்கல்ல, அவரும் சோதனைக்குள் விழுந்து விடுகிறார்.

    கடவுள், சாத்தான் எனும் இரண்டு துருவங்களைப் பற்றிப் பார்க்கும் போது, சாத்தான் கடவுளை வெற்றி கொள்ள நினைக்கிறான். ஆதாம் ஏவாள் எனும் குற்றமற்ற தூய படைப்பு, குற்றமாய் மாறிப்போகிறது. சோதனையை அவர்கள் வெற்றி கொள்ளாததால் வீழ்ச்சியே விளைவாகிறது.

    சோதனையில் விழும்போது பல விளைவுகள் தோன்றுகின்றன.

    1. இறைவனுக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்கு எழுகின்ற வெட்கம். தகுதியற்ற நிலை.

    2. உள்ளுக்குள் எழுகின்ற பயம். ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிகின்றனர்.

    3. குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும். ஆதாம் ஏவாளைப் பழி சொல்ல, ஏவாள் பாம்பைப் பழி சொல்ல, எல்லோரும் அடுத்தடுத்து வழுக்குகின்றனர்.

    4. வேதனைகள். அந்த பாவத்தின் விளைவாக இறைவனை விட்டு விலக வேண்டிய சூழல். அது வேதனைகளை விளைவிக்கிறது.

    5. இறைவனால் வரமாய் கிடைத்தவை விலக்கப்பட, வியர்வையால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலை.

    6. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த அன்னியோன்யமான உறவு முறிகிறது. சக மனிதனோடு இருந்த உறவும் உடைகிறது.

    சோதனையிலிருந்து மனிதன் தப்ப முடியாது, ஆனால் எதிர்க்க முடியும். அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

    “நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை. நான் எதையும் ஏற்றுக்கொள்வேன்” என்று சொன்ன எலிசா சோதனையைத் தாண்டினார்.

    “உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்” என அன்பளிப்பை மறுத்த ஆபிரகாம் சோதனையைத் தாண்டினார்.

    “நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என சொன்ன யோபு சோதனையைத் தாண்டினார்.

    “திராட்சை ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது” என்று முடிவெடுத்த தானியேல் சோதனையைத் தாண்டினார்.

    சோதனைகள் என்பவை நிலையானவை அல்ல.

    இறைமகன் தரும் மீட்பே நிலையானது.

    அழகு, செல்வம், பெருமை, சுயநலம், பொறாமை என பல சோதனைகள் நம் வாழ்வில் வரலாம். சோதனைகள் நிலையற்றவை. நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.

    அருட்பணி,
    வெலிங்டன் ஜேசுதாஸ்
    நேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.
    நேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.

    கிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.

    “வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.

    இறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

    இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.

    இன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

    நாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.

    மோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.

    வாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.

    இவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.

    புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.

    எப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.

    காணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.

    கடவுளை மையமாக்கு

    நேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.

    பாவத்தை புலப்படுத்து

    காணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.

    மீட்பின் முறையை வெளிப்படுத்து

    மீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.

    சமூக ஐக்கியத்தை வெளிப்படுத்து

    வெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.

    பலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.

    தாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.

    இன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.

    1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.

    2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.

    3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    அருட்பணி. வெலிங்டன் ஜேசுதாஸ்

    “நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.
    அன்றொரு நாள் மாலைப்பொழுதில் ஆண்டவர் இயேசு படகில் இருந்து மக்களுக்குப் போதித் தார். போதித்து முடிந்தவுடன் தம்மை சூழ்ந் திருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தை அனுப்பி விட்டு, தம் சீடர்களோடு படகில் அக்கரைக்குப் புறப்படு கிறார். அவருடன் வேறு படகுகளும் சென்றன.

    களைப்பின் மிகுதியால் இயேசு படகின் பிற்பகுதியில் தலையணை வைத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெரும்புயல் அடிக்கவே, கொடூரமான அலைகள் படகின் மேல் மோதி படகை கடுமையாக அசைத்தது, படகுக்குள் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.

    பயணித்த சீடர்கள் மிகவும் அஞ்சி நிலைகுலைந் துப் போனார்கள். அவர்கள், ‘போதகரே, சாகப்போகி றோமே, உமக்கு கவலையில்லையா?’ என்று சொல்லி இயேசுவை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் கடலையும் அதட்டுகின்றார். காற்று அடங்கிட பெரும் கொந்தளிப்பு நீங்கி நிசப்தமான சூழல் நிலவுகின்றது.

    இயேசு தன் சீடர்களை நோக்கி, ‘ஏன் அஞ்சுகிறீர்கள்?, உங்களு க்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டார். அவர்கள் அவர் மீது பேரச்சம் கொண்டவர்களாய், ‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகிறதே’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

    இந்நிகழ்ச்சி தூய மாற்கு நற்செய்தியில் 4:35-41 வரையுள்ள திருமறைப் பகுதிகளில் காணப் படுகிறது. சிற்சில மாற்ற ங்களுடன் மத்தேயு, லூக்கா, ஆகிய இரு நற்செய்தி நூல்களிலும் காணப்ப டுகிறது.

    இந்நிகழ்ச்சி இயேசு கிறிஸ்து திருச்சபைக்கு மட்டுமல்ல, அனைத்து படைப்புக்கும் அவர் ஆண்டவர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

    இயேசு படகில் ஏறச் சீடரும் பின் சென்று ஏறினார்கள். படகு இறையரசாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதி. அதற்குள் இயேசு முந்தி செல்லுகின்றார். சீடரது பணி அவருக்குப் பின்செல்வதே என்ற கருத்துத் தொனிக்கின்றது.

    இயேசுவோடு இருந்த சீடர்கள்

    ‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்ற கேள்வியை இயேசு தம் சீடர்களைப் பார்த்து கேட்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உண்டு.

    மற்ற மக்களை விட இயேசுவின் சீடர்கள் பல சிறப்புத் தன்மைகளை பெற்றவர்கள்.

    முதலாவது, சீடர்கள் இயேசுவின் திருப்பணியில் இணைந்து செய்யும்படியாக, அவரின் பரமேறுதலுக்குப் பின் அவரின் திருப்பணியைத் தொடரும்படியாக அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.

    இரண்டாவது, ஆண்டவர் இயேசுவின் கருத்தாழமிக்க போதனைகளை மிக அருகில் அமர்ந்து, அதிக கவனமாய்க் கேட்டவர்கள்.

    மூன்றாவது, ஒரு நல்ல தோழனைப் போன்று, சகோதரனைப் போன்று, உறவினரைப் போன்று இயேசுவோடு உண்டு, உறங்கி, பயணித்து, அன்பு பாராட்டி இணைந்து வாழ்ந்தவர்கள். இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்கள்.

    நான்காவது, இயேசு செய்த மாட்சிமிகு அற்புதங்களை நேரில் கண்டவர்கள். ‘கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீயஆவி பிடித்தவரைக் குணப்படுத்தியதையும்’ (1:21-28), ‘சீமோன் பேதுரு வின் மாமியாரின் காய்ச்சலை குணமாக்கியதையும்’ (1:29-31), ‘கொடிய தொழுநோயாளியின் நல மடையச் செய்ததையும்’ (1:40-45), ‘கை சூம்பியவரை குணப்படுத்தியதையும்’ (3:1-5) கண்டவர்கள்.

    நம்பிக்கை குன்றிய சீடர்கள்

    ஆண்டவர் இயேசுவின் இத்தனை ஆற்றல்மிகு அற்புதங்களைக் கண்டபடியால் இயல்பாகவே அவர் மீது அளப்பரிய நம்பிக்கை வைக்க வேண்டியவர்கள், அதற்கு மாறாக நம்பிக்கை குன்றியவர்களாய் அஞ்சினார்கள். தீய ஆவியையும், கொடிய வியாதிகளையும், பிறவி குறைபாடுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை கண்டு கொண்டார்கள்.

    ஆனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவர்களால் நம்பமுடியாமற் போயிற்று. இதன் பிரதிபலிப் பாகத் தான் அவர்களின் ஆச்சரியத் தையும், பேரச்சத் தையும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின் றனவே! இவர் யாரோ?” என்ற கேள்வியையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

    ஆனால் ஆண்டவர் இயேசுவின் கருத்துப்படி இந்த ஆச்சரியமும், வினாவும் தேவையற்றது. ஏனெனில் இயற்கையின் சக்திகள் கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆளுமைக்கும் அடங்கியவையே. இதனால் தான் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு மலையையும் இடம் பெயர்ந்து அகலும்படிக் கட்டளையிடக்கூடியவர் என்கிறார் ஆண்டவர் (மத்தேயு 21:21).

    கடவுளிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்

    “நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.

    கடலின் கொந்தளிப்புகள் போல் வாழ்வில் எழும் போராட்டங்களை நினைத்து அச்சமடையாமலும், ஐயமுறாமலும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்ற துணிவுடன், “எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலிப்பியர் 4:13) என்ற தெளிவுடன் கடவுள் மீது முழுமையாய் நம்பிக்கைக் கொள்வோம்.

    நாம் நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்போம்.

    அருட்பணி.ம. பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை. 
    நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’. (மத்.8:8).
    நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’. (மத்.8:8).

    நூறு போர்ச்சேவகர்களுக்கு மேற்பட்ட அதிகாரியாக இருந்தவர், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்து ‘தனது வேலைக்காரன் திமிர்வாத நோயினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்றான்.

    இயேசு, ‘நான் உன் வீட்டிற்கு வந்து அவனை குணமாக்குவேன்’ என்றார்.

    அதற்கு நூற்றுக்கு அதிபதி ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’ என்றார்.

    இயேசு இதை கேட்டு ஆச்சரியப்பட்டு தமக்குப்பின் வந்தவர்களை நோக்கி ‘இஸ்ரவேலில் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை மெய்யாகவே காணவில்லை’ என்றார்.

    பின்பு நூற்றுக்கு அதிபதியை பார்த்து ‘நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது’ என்றார்.

    நூற்றுக்கு அதிபதி இறை இயேசுவின் சொல்லிற்கு இருக்கும் அதிகாரத்தின் மேல் நம்பிக்கை வைத்தான். அவர் சொல்லுக்கு கொடிய வியாதியிலிருந்து சுகம் உண்டாகும் என்று விசுவாசித்தான். தனது வேலைக்காரன் சரீரத்தின் கொடிய வியாதியை தீர்ப்பார் என்று தேடிச்சென் றான். அவர் சொன்ன உடனே வியாதி அவனை விட்டு நீங்கியது. வேலைக்காரன் துக்கம் சந்தோஷமாக மாறிற்று.

    பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப் போய் போஜனஞ்செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1 சாமு.1:18).

    எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.

    பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசந்து மிகவும் அழுது இறைவனிடம் விண்ணப்பம் செய்தாள்.

    ‘சேனைகளின் ஆண்டவரே, தேவரீர் அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று தன் இருதயத்தை ஊற்றி தேவனை தேடினாள்.

    சில நாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் துக்கம் சந்தோஷமாக மாறியது.

    என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு... (1 இரா.17:20).

    சாறிபாத் என்ற ஊரில் ஒரு விதவை இருந்தாள். எலியா என்ற தேவ மனிதன் தேவ சித்தத்தின்படி விதவை வீட்டிற்கு சென்றான். அந்த வீட்டின் மேல் அறையில் தங்கி இருந்தான்.

    சில நாட்கள் சென்ற பின்பு விதவையின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டே போனது.

    விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘தேவனுடைய மனுஷனே, என் குமாரனை சாகப்பண்ண வா என்னிடத்தில் வந்தீர்’ என்றாள்.

    எலியா, ‘உன் குமாரனை என்னிடத்தில் தா’ என்று சொல்லி தான் தங்கியிருந்த மேல் வீட்டில் கட்டிலின் மேல் படுக்கவைத்து அந்த பிள்ளையின் மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, ‘என் தேவனாகிய பிதாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தீரே’ என்று வருத்தப்பட்டு, ‘என் தேவனாகிய ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் ஆவி, ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று விண்ணப்பம் செய்தான்.

    இறைவன் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆவி, ஆத்மா அவனுள் திரும்பி வந்தது, அவன் பிழைத்தான்.

    பின்பு எலியா மேல் வீட்டிலிருந்து பிள்ளையை எடுத்து கீழ் வீட்டிற்குள் கொண்டுவந்து தாயினிடத்தில் கொடுத்து ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான்.

    அந்த விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘நீர் தேவனுடைய மனிதன். உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் தேவனின் வார்த்தை உண்மை என்று அறிந்திருக்கிறேன்’ என்றாள்.

    எலியா கர்த்தரை தேடினான். விதவை ஸ்திரீயின் துக்கம் சந்தோஷமாக மாறியது.

    கர்த்தர் அவளைப் பார்த்து அவள்மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி... (லூக்கா 7:13).

    இயேசு எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவருடைய சீடர்களும், திரளான ஜனங்களும் கூட சென்றார்கள். அவர் நாயீன் ஊரின் வாசலுக்குச் சமீபித்த போது மரித்துப்போன ஒரு வாலிப மகனை அடக்கம் பண்ணும்படி பாடையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ இளவயது பெண்ணாக இருந்தாள். அவள் அனாதையாகி விட்டதை இயேசு கண்டார்.

    தாய் அழுது புலம்பும் அவலக்குரல், திரள்கூட்ட ஜனங்கள் மனவேதனையுடன் அழுது புலம்புவது பார்த்து, அவள் மேல் மனதுருகி ‘அழாதே’, என்று சொல்லி பாடையைத் தொட்டார். அதை சுமந்தவர்கள் நின்றார்கள்.

    அவர், ‘வாலிபனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.

    மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை தாயினிடத்தில் ஒப்படைத்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப் படுத்தினார்கள்.

    அவளோ துக்கத்தோடு தன் மகனை அடக்கம் பண்ண தேடிச் சென்றாள். கர்த்தராகிய இயேசு அவள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார்.

    நாமும் அவரை தேடும்போது நமது துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறும், ஆமென்.

    சி. பூமணி, ‘ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம்’, சென்னை-50. 
    புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப்பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது.
    எகிப்தில் அடிமைத்தனத்தில் கிடந்த இஸ்ரவேல் மக்களை மோசேயின் மூலமாக கடவுள் மீட்கிறார். அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அவசர அவசரமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது கடவுள் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார்.

    “வீடுகளில் இருந்து புளிப்பானவற்றை அகற்றுங்கள். புளிப்பான எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். புளிப்பற்ற அப்பத்தை மட்டுமே ஏழு நாட்கள் உண்ணுங்கள்.”

    அப்படி இஸ்ரவேல் மக்கள் புளிப்பற்ற அப்பத்தையும், புளிக்காத திராட்சை ரசத்தையும் ஒரு வாரம் குடித்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். கடவுள் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான முதல் நிலையாக இந்த விழா அமைகிறது.

    புளிப்பற்ற அப்பத்தைத் தயாராக்கும் முறை வித்தியாசமானது. அப்பத்தின் மீது கோடுகளையும், துளைகளையும் போட்டு அதை சுடுவார்கள். இதனால் அப்பம் விரைவாக தயாராகி விடும். வரலாற்றுப் பதிவுகள் இந்த அப்பம் சுட 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்கின்றன.

    சுட்டு முடித்தபின் அதன் உடலெங்கும் சாட்டையால் அடித்தது போன்ற காயங்களும், துளைகளும் காணப்படும்.

    புளிப்பு என்பது பாவத்துக்கு ஒப்பீடாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இறைமகன் இயேசு தனது போதனைகளில் “புளிப்பு மாவை விலக்க வேண்டும் எனவும், புளிப்பு மாவு குறித்து கவனமாய் இருக்க வேண்டும் எனவும்” பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

    அதற்கு மாறாக, புளிப்பற்ற மாவு என்பது தூய்மையைக் குறிக்கிறது. இறை மகன் தருகின்ற புனித வாழ்வுக்கு அது ஒப்பீடு செய்யப்படுகிறது. புளிப்பை விலக்கி விட்டு புளிப்பற்ற அப்பத்தை எடுப்பது, பாவத்தை விலக்கி விட்டு புனிதத்தை அணிவது எனும் பொருளில் வருகிறது!

    புளிப்பற்ற அப்பத்தின் உடலில் உள்ள வரிகள், பாவமற்ற இயேசுவின் உடலில் சாட்டையால் கொண்ட தழும்புகளைக் குறிக்கின்றன. அப்பத்தின் துளைகள் இயேசுவின் உடலில் ஆணிகளாலும், ஈட்டியாலும் உருவான காயங்களைக் குறிக்கின்றன. திராட்சை ரசம் அவரது குருதியைக் குறிக்கிறது. “என் உடலை உண்டு, ரத்தத்தைக் குடியுங்கள்” என இயேசு சொன்னது அவரால் புனிதமாக வேண்டும் என்பதன் குறியீடே.

    “ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” 1 கொரி 5:8 எனும் விவிலிய வசனம் புளிப்பு என்பது பாவம் என்பதை தெளிவாக விளக்குகிறது.

    அதே போல புளிப்பு என்பது வெளி வேடம் என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார். “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்” என அவர் மிகத் தெளிவான போதனையை தருகிறார். பரிசேயர் சதுசேயர் ஆகியவர்களுடைய வெளிவேடமும், அவர்களுடைய போதனையும் புளிப்பு மாவைப் போன்றது. அதை விலக்க வேண்டும் என்பதே அவருடைய அறிவுறுத்தலாய் இருந்தது.

    அதேபோல ஏரோதியரின் புளித்த மாவு என உலகு சார்ந்த சிந்தனைகளை இயேசு குறிப்பிடுகிறார். உலகின் போக்கில் வாழ்வதையே வாழ்க்கை எனக் கொள்ளாமல் இறைவனின் வாக்கில் வாழ்வதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும் என்பது அவரது அறிவுரையாய் இருந்தது.

    இயேசு தன்னை அப்பம் என அழைத்தார். ஜீவ அப்பம் நானே என்றும் வாழ்வு தரும் உணவு நானே என்றும் அவர் தனது போதனைகளில் குறிப்பிட்டார்.

    இன்றைக்கு புளிப்பற்ற அப்பத் திருவிழா பழைய நாட்களைப் போல கொண்டாடப்படாமல் புதிய சிந்தனையின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்ற பாவங்களை முழுவதுமாய் அகற்றி விட்டு புனிதமான வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்பதே அந்த புதிய சிந்தனை.

    ஏழு என்பது விவிலியத்தில் முழுமையைக் குறிப்பிடும் சொல். ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும் என்பது வாழ்நாள் முழுதும் புனிதமாய் இருக்க வேண்டும் என்பதன் அடையாளம். கொஞ்சம் புளிப்பு மாவை நல்ல மாவோடு சேர்த்து வைத்தால் மொத்த மாவும் புளித்துப் போய்விடும். அதே போல கொஞ்சம் பாவம் தானே என நம்மோடு அதை சேர்த்துக் கொண்டால் அது நமது வாழ்க்கையை முழுவதுமாய் செல்லரித்துப் போகச் செய்து விடும்.

    புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப்பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது.
    ×