search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    பிரியமானவர்களே! தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள். தேவனின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாறுங்கள்.
    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். இம்மட்டும் வழிநடத்தின தேவன் இனிமேலும் ஒவ்வொரு நாளும் உங்களை ஆச்சரியமான பாதையிலே வழிநடத்துவாராக.

    நம்பிக்கையினால் வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம்பினால் நம்முடைய வாழ்விலே நாம் பெறும் ஆசீர்வாதம் என்ன?

    இயேசுவை விசுவாசி

    ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’. அப்போஸ்தலர் 16:31

    இயேசு கிறிஸ்துவே உண்மையான இரட்சகர். அவர் ஒருவரால் மாத்திரமே இந்த பாவம் நிறைந்த உலகிலே இரட்சிப்பைத் தர முடியும் என்பதை நாம் நம்பும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். அதே வேளையில், நாம் நம்பும்போது நம் குடும்பம் முழுவதையுமே இரட்சிக்க நம் தேவன் வல்லவராயிருக்கிறார்.

    நோவா மாத்திரம்தான் தேவனை நம்பி, அவரோடு நடந்து, அவருக்குக் கீழ்படிந்து வாழ்ந்து வந்தார். ஆனால் தேவன் அவருடைய குடும்பம் முழுவதையும் ஜலப்பிரளயத்திலே அழிந்து போகாதபடி இரட்சித்தார். முழுக்குடும்பமும் பேழையிலே காக்கப்பட்டதற்குக் காரணம் நோவாவின் நம்பிக்கையே.

    பிரியமானவர்களே, இந்த உலகத்தில் பாவத்திலே வாழ்ந்து அழிந்துவிடாதபடிக்கு உங்கள் குடும்பம் முழுவதும் கிறிஸ்துவாகிய பேழைக்குள் காக்கப்பட வேண்டுமானால் நீங்கள் முதலாவது இயேசுவை நம்புங்கள். நிச்சயமாகவே உங்கள் முழுக்குடும்பமும் காக்கப்படும்.

    அபிஷேகம்

    ‘வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்’. யோவான் 7:38,39

    இரண்டாவதாக, மேலே வாசித்த வசனத்தின்படி நாம் இயேசுவை நம்பும்போது பெறுகிற ஆசீர்வாதம் அபிஷேகம்.

    இந்த பாவம் நிறைந்த உலகத்திலே பரிசுத்தமாக வாழும்போது மாத்திரமே தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாற முடியும்.

    ஆனால் நாம் எப்படி பரிசுத்தமாக வாழ முடியும்?

    பரிசுத்த ஆவியானவரின் துணையோடு மாத்திரமே நாம் பரிசுத்தமாக வாழ முடியும்.

    வேதம் சொல்லுகிறது, ‘அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்’. யோவான் 16:8

    இந்த பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ள நமக்கு நம்பிக்கை அவசியம் தேவை. நம்பிக்கையோடு நாம் ஆண்டவரைப் பார்த்து ‘என்னை அபிஷேகியும்’ என்று கேட்கும்போது, கர்த்தர் தமது ஆவியானவரால் நம்மை அளவில்லாமல் அபிஷேகிப்பார்.

    பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும்போது, நாம் இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ முடியும்.

    தெய்வீக ஆரோக்கியம்

    ‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்’. யாக்கோபு 5:15

    அடுத்து, நம்பிக்கையின் மூலம் நாம் பெறக் கூடிய மற்றொரு ஆசீர்வாதம் ஆரோக்கியம்.

    பிரியமான சகோதரனே! சகோதரியே! நீங்கள் ஒருவேளை வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் இயேசுவை நம்பிக்கையோடு பாருங்கள். நிச்சயம் அவர் தம்முடைய தெய்வீக ஆரோக்கியத்தினால் உங்களை நிரப்புவார். வேதத்திலே அநேக வசனங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

    ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’. (யாத்திரகாமம் 15:26)

    ‘உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள், அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்’. (யாத்திரகாமம்.23:25)

    ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசாயா 53:5)

    ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’. (மத்தேயு.8:17)

    ‘என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.’ (II.கொரிந்தியர் 12:9)

    மேற்கண்ட வசனங்களை நம்பும்போது நமக்கு தெய்வீக சுகம் கிடைக்கும்.

    எனவே பிரியமானவர்களே! தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள். தேவனின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாறுங்கள்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54. 
    பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.
    தவக்காலத்தில் நம்மிடமிருந்து அகற்ற வேண்டிய மற்றுமொரு வேண்டாத குணம், குறைகாணுதல். இயேசுவை பின் தொடர்ந்த மக்களை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய சொல்லாலும், செயல்களாலும் கவரப்பட்டு அவருடைய போதனைக்காக அவரைத் தொடர்ந்த கூட்டம். மற்றொன்று அவருடைய போதனைகளிலும், புதுமைகளிலும் குறைகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பின்னால் சென்ற பரிசேயர் கூட்டம்.

    இவர்கள் தான் இயேசுவின் இறையாட்சி பணிக்கு தொடக்கம் முதலே ஒரு தடைக்கல்லாக இருந்தனர். அவரை எப்படி ஒழிக்கலாம் என்று வழிவகைகளைத் தேடி, அவருடைய போதனைகளில் குற்றம், குறைகளை, கண்டுபிடித்தனர். முடக்குவாதனை குணமாக்குதல் (மத்தேயு 9:1-8), ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல் (மத்தேயு 12:1-8), கைசூம்பியவர் குணமடைதல் (மத்தேயு 12:9-14), சீசருக்கு வரி செலுத்துதல் (மத்தேயு 22: 15-22) ஆகிய இடங்களில் இதை காணலாம்.

    தங்களை சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டுவது, கடவுள் வல்லமையால் என்றும், இயேசு பேய்களை பேய்களின் தலைவனைக் கொண்டு ஓட்டுகிறார் என்றும் சொல்லிய பரிசேயர்களின் இரட்டை நிலைப்பாட்டை இயேசு வெளிச்சமிட்டு காட்டுகிறார். இந்த மனநிலை நம்மிடம் இல்லையா? நல்ல காரியங்களை நான் செய்யும் போது என்னை நல்லவன் என அழைக்கிறேன். ஆனால் அதே நல்ல காரியங்களை பிறர் செய்யும் போது மற்றவர்களின் பாராட்டை பெறவே இவ்வாறு செய்கின்றனர் என சொல்வதில்லையா?

    பிறர் குறைகளை கண்டுபிடிக்கும் எனக்கு இறைவாக்கினர் பட்டம். அதையே பிறர் செய்யும் போது “சிடு மூஞ்சி, எப்பொழுதும் குறை கண்டுபிடிப்பவன்” என்ற பட்டம் கொடுப்பதில்லையா? நான் தினமும் ஆலயத்திற்கு வந்தால் நான் புனிதன், அதையே அடுத்தவன் செய்தால் அவன் “பெரும் நடிகன்”. உழைக்காமல் நான் உண்டால் அதற்கு பெயர் “சாமர்த்தியம்,” அதையே மற்றவர்கள் வாழ்ந்தால் “ஏமாற்றுக்காரன்”. பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய இளங்குரு மடம், கும்பகோணம்.
    ‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.
    தனது மக்கள் தனக்கு பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவனின் விருப்பமாக இருந்தது. இது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

    பலிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை விவிலியத்திலுள்ள லேவியர் எனும் நூல் விளக்குகிறது.

    ‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.

    பாவத்தின் நிவாரணமாக அமைவது ரத்தம். பாவ நிவாரணத்தின் எபிரேயச் சொல் ‘ஹட்டாத்’ என்பது. இது அறியாமையால் செய்யப்படுகின்ற பாவங்க ளுக்காய் செய்யப்படும் பலி.

    பாவத்தை மன்னிப்பது ஒன்று, பாவம் செய்தவனின் மனதிலிருந்து குற்ற உணர்வை மாற்றுவது இன்னொன்று. இவையெல்லாம் அறியாமல் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையே. பெரும்பாலும் அடுத்த நபரைப் பாதிக்காதவை எனலாம்.

    பாவ நிவாரண பலியில் பல பிரிவுகள் உண்டு. குருவுக்கு பழுது அற்ற இளம் காளை, சபையார் அனைவருக்கும் இளங்காளை, பிரபு நிறைவேற்றும் குற்றத்துக்கு பழுதற்ற வெள்ளாட்டுக்கடா, சாதாரண மனிதர் செய்யும் பாவத்துக்கு வெள்ளாட்டுப் பெண்குட்டி... இப்படித் தான் பலிப்பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் நிலைக்கு ஏற்ப இந்த பலி பொருட்கள் மாறுபடுகின்றன.

    இன்னொன்று குற்ற நிவாரண பலி. இதற்குரிய எபிரேய வார்த்தை ‘அஸோம்’ என்பது. பிறரது உரிமையின் மீது நடத்துகின்ற அத்துமீறல் இது. இது குற்றம். இந்த குற்றங்கள் இரண்டு வகைப்படும்.

    அதில் ஒன்று, தெய்வீகக் குற்றம். “ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித் தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாவை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக....” என தொடங்கி லேவியர் நூல் இதை (அதிகாரம் 5) விளக்குகிறது.

    இரண்டாவது, மனிதருக்கு எதிராய் செய்கின்ற குற்றங்கள். “... ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ...” (லேவியர் 6:2) என இத்தகைய குற்றங்களை விவிலியம் பட்டியலிடுகிறது.

    ஆள்மாறாட்டம் செய்வது, வலுக்கட்டாயமாய் பறித்துக் கொள்வது, அயலானுக்கு இடுக்கண் செய்வது, காணாமல் போனதை கண்டெடுத்தும் மறைப்பது... இவையெல்லாம் குற்றமாய் சொல்லப்படுகின்றன.

    பாவத்தை நம் வாழ்வில் போக்கிக்கொள்ள ஒரு நிவாரண பலி உண்டு. அதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. எப்படி பாவத்துக்கு நிவாரணமாக காளையின் ரத்தம், ஆட்டுக்கடாவின் ரத்தம் என விலங்குகள் குறிப்பிடப்படுகின்றனவோ, அதேபோல பாவத்தைச் சுட்டவும் விலங்குகள் பயன்படுத்தப்படு கின்றன.

    பாவம் என்பதை விஷமுடைய பாம்பு என சங்கீதம் சொல்கிறது. “அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே” என்கிறது சங்கீதம் 140:3.

    தானியேல் 7:5 பாவத்தை ஒரு கரடியாகக் காட்டுகிறது. “கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது” என்கிறது அது.

    “கடின நெஞ்சுடைய காட்டுக் கழுதையைப் போன்றது பாவம்” என யோபு நூல் சொல்கிறது. யோவேல் 5:25-ல் “பாவம் அழிக்கிற வெட்டுக்கிளியாய்” குறிப்பிடப்படுகிறது. “சூழ்ச்சிமிக்க நரி போன்றது பாவம்” என லூக்கா 13:32 குறிப்பிடுகிறது.

    இவை மட்டுமல்லாமல் ‘பயங்கரமான ஓநாய்’, கர்ஜிக்கிற சிங்கம்’, ‘அசுத்தமான பன்றி’... என்றெல்லாம் பாவங்கள் விலங்குகளாக விவிலியத்தில் சுட்டப்படுகின்றன.

    பாவத்தையும் குற்றங்களையும் செய்பவர்கள் தீர்ப்பிடப்படுகிறார்கள். ‘அவர்கள் குற்றத்தைச் சம்மதிக்க வேண்டும்’, ‘சுமத்தும் அபராதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்’, ‘பிழை செய்த காரியத்தில் அந்த விலையோடு ஐந்தில் ஒரு பாகத்தை சேர்த்து அபராதமாகச் செலுத்த வேண்டும்’.

    நம்முடைய வாழ்வில், சிலுவையின் நிழலில் இருக்கும் போது பாவங்கள் என்றோ, குற்றங்கள் என்றோ நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லாமே இறைமகன் இயேசுவின் ரத்தத்தால் சுத்தமாகிறது.

    இறைமகன் பலியானதே அதிகபட்ச பலி. இந்த பலி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பல்வேறு நிலை மக்களுக்கு, பல்வேறு வகையான பலி இனிமேல் தேவையில்லை என்பதே.

    முதலாவது, பழுதற்ற காளை, எஜமான னுக்காய் பொறுமையாய் உழைக்கும் பண்புடையது. தன் எஜமானை அது அறியும். மரணம் வரை அவருக்குக் கீழ்ப்படியும்.

    இரண்டாவது, பழுதற்ற செம்மறியாட்டு க்கடா. அது குறையில்லாத ஒன்று. எதிர்ப்பு தெரிவிக்காத பண்புடையது.

    மூன்றாவது, வெள்ளாட்டுக்கடா. அது தூய்மையின் சின்னம்.

    நான்காவது மற்றும் ஐந்தாவது இரண்டும் காட்டுப்புறா, புறாக்குஞ்சு. இவை புலம்பல், குற்றமில்லாமை, கபடமற்ற தன்மை போன்றவற்றின் அடையாளம்.

    இந்த பலி பொருட்கள் அனைத்தின் தன்மையும் இறைமகன் இயேசுவின் தன்மையோடு இணைந்து விடுகிறது. எனவே தான் இறைமகனின் பலி ஒட்டு மொத்த பாவங்களுக்கான தீர்வாக இருக்கிறது.

    நமது பாவங்கள் எதுவாக இருந்தாலும் இறைமகனின் ரத்தம் அதை நீக்கும் எனும் நம்பிக்கையே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

    அருட்பணி - வெலிங்டன் ஜேசுதாஸ்.
    ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார்.
    தவக்காலத்தில் இயேசுபிரான் 3 முதன்மையான போதனைகளை முன் நிறுத்துகிறார். 1. அதிக ஜெபம். 2. அதிக தவம். 3. அதிக தர்மம்.

    செல்வந்தர் ஒருவர் வழிபாட்டில் பங்கேற்று விட்டு, தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் மூதாட்டி ஒருவர் நாவல்பழம் விற்றுக்கொண்டு இருந்தார். செல்வந்தர் காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியிடம், நாவல் பழம் வாங்குவதற்காக பேரம் பேசினார். பின்னர் ஒரு படி பழத்தை வாங்கி கொண்டு காரில் புறப்பட்டார் அவர்.

    அப்போது மூதாட்டி, ஒரு பெரிய நாவல்பழத்தை கார் கண்ணாடி மீது வீசினார். அப்போது செல்வந்தர் நாவல் பழம் வாங்கியதற்காக ரூ.20-க்கு பதிலாக ரூ.2 ஆயிரத்தை தவறுதலாக கொடுத்து விட்டதை உணர்ந்தார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி சென்று ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, ரூ.20-யை மூதாட்டியிடம் கொடுத்தார்.

    மூதாட்டியை போல உழைத்து சம்பாதிப்பதில் உற்சாகம் வேண்டும். துன்புற்றாலும் பிறருடைய பொருளுக்கு எவ்வகையிலும் ஆசைபடக்கூடாது. நாம் துன்புற்றாலும், ஏழைகளுக்கு கொடுத்து உதவவேண்டும். இது தான் தர்மம். தர்மம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. கடவுள் பிரதிபலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் துன்புறும் நபர்களுக்கு, நாம் துன்புற்றாலும் எத்தகைய எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யும் போது தான் இறைவன் நம்மை ஆசிர்வதிக்கிறார்.

    வறியவருக்கு உதவுவது என்பது நாம் காட்டும் அனுதாபம் அல்ல. அது நம்முடைய கடமை என்பதை இயேசு பிரான் தெளிவுப்படுத்துகிறார். நாமே சம்பாதித்து இருந்தாலும், அதில் ஏழைகளுக்கும் உரிமையுண்டு என்பதையும் உணர்வது தான் ஒரு நல்ல மனிதருக்கு அடையாளம். வறண்ட நேரங்களில் வழங்குவதே வரவேற்கத்தக்கது.

    எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்பதல்ல. இருப்பதில் ஒரு சிறு பகுதியையாவது பகிர்ந்து கொள்ளுதலே சிறந்த ஞானம். ஏழைகள் எத்தனைபேருக்கு கொடுக்க முடியும்? என்று கொடுப்பதை நிறுத்திக் கொள்வதை விட, 100 ஏழைகளில் ஒருவருக்காவது செய்வதை கடவுள் வரவேற்கிறார். செய்வோமா?

    - குழந்தை, காணியிருப்பு.
    பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு.
    திருப்பாடல்களில் வரும் முதல் பாடல் நற்பேறு பெற்றவரின் குணாதிசயங்களை ‘பளிச்’ என விளக்குகிறது.

    நற்பேறு பெற்றவர் யார்?

    அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

    பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

    இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

    ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

    அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் (சங்கீதம் 1)

    முதல் திருப்பாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு.

    பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. திருப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது எனலாம்.

    சாலமோன் மன்னனுடைய நீதிமொழிகளின் சாயல் இந்த பாடலில் தொனிப்பதால், இதையும் சாலமோன் எழுதியிருக்கலாம் என கருதுவோர் உண்டு. எனினும், இதை எழுதியவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த பாடலுக்கு ஆசிரியர் அமைகிறார்.

    நல்லவர் எப்படி இருப்பார்?, பொல்லார் எப்படி இருப்பார்? என்பதை இந்த பாடல் விளக்குகிறது.

    நல்லவர்களின் குணாதிசயங்களாக மூன்று விஷயங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

    1. அவர்கள் பொல்லாரின் சொற்படி நடக்க மாட்டார்கள். வழி தவறுவதன் முதல் நிலை இது. யாருடைய அறிவுரைப்படி நாம் வாழ்கிறோம் என்பதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. பொல்லாரின் அறிவுரைகளை சிரமேற்கொள்ளும் போது நாம் பொல்லாதவர்களின் இலக்கையே சென்றடைவோம். அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

    2. இரண்டாவது நிலை, தீயவர்களின் பாவ வழியில் நிற்காமல் இருப்பது. பொல்லாரின் சொல்லைக்கேட்பது முதல் நிலை. பாவிகளுடைய வழியில் நிற்பது இரண்டாம் நிலை. இப்போது நின்று கேட்கக்கூடிய அளவுக்கு மனம் பாவத்தின் மீது விருப்பம் கொண்டு விடுகிறது. நின்று நிதானித்து பாவத்தின் வழியில் பயணிக்கிறது. அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

    3. மூன்றாவது நிலை, இகழ்வாரின் கூட்டத்தில் அமராமல் இருப்பது. முதலில் கேட்பது, பின் நிற்பது, மூன்றாவதாக ஆறஅமர அமர்ந்து இகழ்வாரோடு இணைந்திருப்பது, என பாவம் படிப்படியாய் வளர்கிறது. பிறரை இகழ்வதும், நல்ல செயல்கள் செய்பவர்களை இகழ்வதுமாய் பாவத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட நிலையை இது காட்டுகிறது.

    முதலில் வெறுமனே பொல்லாரின் அறிவுரைகள் கேட்பதில் நமது வாழ்க்கை பலவீனமடையத் தொடங்கு கிறது. அது சிற்றின்பத் தேடல்களாகவும் இருக்கலாம், இயேசுவின் போதனைகளைத் திரிப்பதாகவும் இருக்கலாம்.

    அது பழகிவிட்டால் பாவிகள் நடக்கின்ற பாதையில் நாமும் தென்படுவோம். அங்கே நின்று பாவத்தின் செயல்களைச் செய்வோம். நாமும் நாலுபேருக்கு தவறான அறிவுரைகள் சொல்வோம். அதுவும் பழகிவிட்டபின் நல்லவர்களை விமர்சிப்பதும், மனிதநேயமற்ற இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்வதுமாய் நமது வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.

    இப்படிப்பட்ட மூன்று நிலைகளையும் நல்லவர்கள் வெறுப்பார்கள். வெறுமனே வெறுத்தால் மட்டும் போதாது, ஒரு பாத்திரத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை வெளியேற்றுவதுடன் வேலை முடிவதில்லை. வெறுமையான பாத்திரம் யாருக்கும் உதவாது. அந்த பாத்திரத்தைக் கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றுவது தான் பயனுள்ள நிலை. நல்லவர்கள் தங்களை பொல்லாரின் வழியிலிருந்து விலக்கி, இறைவனின் அருகில் அமர்வார்கள்.

    இறைவனுடைய திருச்சட்டத்தில் மகிழ்ந்து, இரவும் பகலும் அவர்கள் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கின்ற செயல்களெல்லாம் வெற்றியாக முடிந்து விடுகிறது. நீரோடையில் அருகில் வேர்களை இறக்கி, பருவகாலத்தில் இனிய கனியைத் தரும் மரமாய் அவர்கள் மாறுகின்றனர்.

    ஒரு மரம் கனியைத்தர நீர், காற்று, சூரிய ஒளி மூன்றும் தேவை. காற்று என்பதை நமக்கு மூச்சுக்காற்றை அளித்த தந்தையாம் இறைவனோடும், ஒளியை ஒளியாம் இறைமகனோடும், நீரை தூய ஆவியானவரோடும் ஒப்பிடலாம். இவர்கள் மூவரும் நம்முள் இருக்கும் போது நாம் நீரோடை மரம் போல செழுமை வடிவும், இனிமைக் கனியுமாய் வாழ்வோம்.

    பொல்லாரின் வழியோ, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல நிலையில்லாமலும், பயனில்லாமலும் அழியும். அவர்களுக்கு வெற்றி என்பது இல்லை. அவர்களுக்கு மீட்பு என்பது இல்லை. அழிவு மட்டுமே அவர்களின் பரிசு.

    நமது வாழ்க்கை, தீமையின் வழியை விட்டு விலகி இறைவனைத் தேடும் வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்பதை இந்த திருப்பாடல் வலியுறுத்துகிறது.

    இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய இந்த மூன்று விஷயங்களையும் இதயத்தில் இருத்துவோம். பொல்லாரின் வழி செல்வதை இன்றே நிறுத்துவோம்.

    -சேவியர், சென்னை. 
    கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.
    உலகத்தில் எந்தவொரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் முதலில் கேட்கப்படுவது, தகுதி.

    கல்வித் தகுதி, உடல் தகுதி, அறிவாற்றல் ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்க வேண்டியதுள்ளது. தகுதிக் குறைபாடு ஒருவனை அலைக்கழிப்புக்கு ஆளாக்கிவிடுகிறது.

    அதுபோலவே ஆன்மிகத்திலும் இறைவனுடன் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளை இயேசு போதித்துள்ளார். அது உடல், அறிவு, கல்வி சம்பந்தப்பட்டதல்ல. அந்த அடிப்படைத் தகுதிகளில் முதன்மையான தகுதி, ‘ஒருவன் தன்னை பாவி’ என்று முழுமையாக ஒப்புக்கொள்வதுதான்.

    இதுபற்றி இயேசு கூறும்போது, “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என்று ஜெபித்த பாவிதான் நீதிமானாக்கப்பட்டான்” என்றார்.

    நாம் தினமும் செய்யும் குற்றங்கள், பாவங்களை, தனி ஜெபங்களில் இறைவனிடம் சொல்லி மன்னிப்புகேட்கிறோம். அதன் மூலம் நம்மை பாவி என்று நாம் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் என்று கேட்கலாம்.

    தினமும் பாவம் செய்வதும், மன்னிப்புக்காக ஜெபம் செய்வதும், ஒரு மனிதனை இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் செயலாக அமையாது. அது ஒருவன் தன்னை பாவி என்று முழுமையாக ஒப்புக்கொண்ட நிலை அல்ல. எனவே அதுபோன்ற ஜெபங்களால் நேரம்தான் வீணாகிறது. தினமும் வேலை செய்து அழுக்காவது, பின்னர் அழுக்கைப் போக்குவதற்கு குளிப்பது போன்ற இயல்பு நிலை ஆன்மிகத்தில் இல்லை.

    பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வது என்பது எப்படி? செய்த குற்றம்பாவத்தால் மனது அழுத்தப்பட்டோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலோ அல்லது பின்விளைவுகளை உணர்வதாலோ, இனி அந்த பாவங்களில் நீடிக்கமாட்டேன் என்று முடிவு செய்து இறைவனுடன் ஒப்புரவாதல் ஆவதுதான், பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகும். இதுதான் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் முதன்மையான தகுதி.

    அதாவது தன் குற்றங்களையும், பாவ செயல்பாடுகளையும் நியாயப் படுத்தாமல், அதை இறைவனிடம் ஒப்புக்கொள்ளுதலாகும். சூழ்நிலையின் நெருக்கடினால் பொய் பேசிவிட்டேன், திருடிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன், பழிதீர்த்துவிட்டேன் என்று தவறுகளை நியாயப்படுத்தும் எவரும், உண்மையான கிறிஸ்தவத்தின் ஆரம்பகட்ட தகுதியைக்கூடப் பெறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    இப்படிப்பட்டவர்களிடம் அநீதி, பொறாமை, பெருமை, வேறுபாடு பார்த்தல், பகை, பழிதீர்க்கும் மூர்க்கம் போன்ற ஜென்ம மற்றும் சரீர சுபாவத்திலான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் இவர்களிடம் ஜெபம், உபவாச ஜெபம், சபைகூடுதல், காணிக்கை செலுத்துதல், மன்னிப்பு கேட்குதல் (தேவைப்படுவோரிடம் மட்டும்), ஊழியங்களை தாங்குதல் என பல கண்ணுக்குத் தெரியும் நற்செயல்பாடுகளும் காணப்படும். ஆனால் இவைஎல்லாம் உண்மையான கிறிஸ்தவ நடத்தைக்கான செயல்பாடு அல்ல.

    கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியைப் பெறாமல், இந்த நற்செயல்கள் மூலம் இறைவனுடன் யாராலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது. எனவே இவை அனைத்துமே, ஆன்மிக பலன்களை (ஆத்தும ஆசீர்வாதங்களை) அடைவதற்கு உதவாத மற்றும் வீணான நற்செயல்களாகவே உள்ளன.

    பாவி என்று உணர்ந்து, தன்னை தாழ்த்தி குற்றங்களை ஒப்புக்கொண்டு, இனி பாவம் செய்யமாட்டேன் என்று இறைவனுடன் ஒப்புரவாகி மனந்திருந்தும் பாவிதான் கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகுதியைப் பெறுகிறான். அவனுக்குத்தான் ஆன்மிகத்தின் அடுத்த வழி திறக்கப் படுகிறது.

    மனந்திரும்பும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான மன்னிப்பை பெறவும் வேதம் வழிகாட்டுகிறது. யாருக்கு எதிராக குற்றம், அநீதி, அநியாயம் செய்தோமோ அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க இறைவனால் உள்ளம் தூண்டப்படுகிறது. இதில் மிகுந்த தயக்கம் ஏற்பட்டாலும், இறைஆவியின் மூலம் தைரியம் அளிக்கப்படு கிறது. ஆனால் இதில் பலர் சோர்ந்து, சில பாவங்களுக்கான மன்னிப்பை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.

    எனவே இறைவனுடனான மேலும் நெருக்கம் ஏற்படாமல் போய்விடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனுடனான தொடர்பை இழந்து பழைய பாவ நிலைக்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர். இறைவன் காட்டும் வழியை உணர்ந்து நடந்துகொள்ளாமல், மாறாகச் சென்றால் அதில் இறைவனின் பாதுகாப்பு கிடைக்காது.

    அடுத்ததாக, மனிதனுக்கு எதிரான குற்ற செய்கைகளுக்காக இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மனிதன் என்பவன் இறைவனின் படைப்பு. அந்த வகையில், அவரது படைப்பில் ஒன்றான மனிதனை துன்புறுத்தியதற்காக இறைவனிடமும் மன்னிப்பை பெற வேண்டும். இப்படிப்பட்ட இறைவனின் சித்தத்துக்கு உட்பட்ட வழிகாட்டுதலின் மூலமாகத்தான் படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முடியும்.

    பாவி என்ற நிலையில் இருந்துகொண்டு காணிக்கை கொடுப்பதாலோ அல்லது வேறு யாரிடமாவது சென்று ஜெபிப்பதாலோ ஆன்மிக நிலைப்பாட்டை அடைய முடியாது. ஆன்மிகம் என்பது, குறிப்பிட்ட மதத்தில் இருந்துகொண்டு எல்லாரையும்போல கோவிலுக்குச் சென்று வருவதல்ல. இறைவனை அடையும் தகுதிகளைப் பெற்று, அந்த வழியில் சென்று, அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஆன்மிகம். இதற்கு மதம் உதவாது.

    இயேசு காட்டியுள்ள இந்த ஆன்மிக வழியில், பகைத்தவருக்காக ஜெபித்தல், அடித்தவரையும் அரவணைத்தல், வேறுபாடு பார்க்காமல் உதவுதல், அனைவரின் முன்பாகவும் தாழ்மையாக நடந்துகொள்ளுதல், அநியாய செல்வங்களை தவிர்த்தல், பாவநெருக்கடிகளுக்குள் சாயாமல் இருத்தல் என்ற இறைத்தன்மைகள் வருகின்றன. இதுதான் தெய்வீக அன்பு.

    பக்தனின் வாழ்க்கையில் இவை குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். இந்த வழியில் ஒருவன் நடக்கிறான் என்றால் அவன் இயேசுவுடன் (கிறிஸ்தவ மதத்துடன் அல்ல) பிணைப்பில் இருக்கிறான் என்று அர்த்தம். இந்த வழிகளைக் கடந்துதான், அவனுக்கென்று இறைவன் வைத்துள்ள இலக்கை நோக்கிச் சென்றாக வேண்டும்.

    இயேசு கூறியுள்ள அந்த வழிகளில் நடந்து செல்வது, இயல்பு குணத்தில் நீடிக்கும் சாதாரண மனிதனால் முடியாது. கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.

    கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஒருவனை கிறிஸ்தவனாக வேதம் அங்கீகரித்துவிடவில்லை. இயேசு சொன்ன தெய்வீக அன்பின்படி நடந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் (மதத்தில் அல்ல) நீடித்து வாழ்வது எளிதானது அல்ல என்பதால்தான் அதை இடுக்கமான வழி என்று வேதம் கூறுகிறது. மதத்தில் உள்ள பெயர்ப்பட்டியல் பெரிதாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தவர்கள் குறைவுதான்(மத்.7:13, லூக்.13:24) என்பதே வேதத்தின் முடிவு. 
    பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது.
    எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரேல் மக்கள், மோசே எனும் தலைவரின் கீழ் விடுதலையாகி கானானை நோக்கி நடக்கின்றனர். பாலை நிலத்தில் அவர்கள் நடந்த போது மேகத்தூணாகவும், நெருப்பாகவும் இறைவன் அவர்களோடு கூட இருக்கிறார்.

    அதன்பின் அவர் மக்களோடு மக்களாக கூடாரத்தில் வசிக்க விரும்பினார். அதற்காக தன்னுடைய தூயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தனக்கான பலிபீடம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் மோசேயிடம் விளக்கினார்.

    பலிபீடத்துக்கு நான்கு முனைகள், ஐந்து முழம் அளவில் சதுர அமைப்பு போன்றவையெல்லாம் அவர் சொன்ன விதிகளில் சில.

    கடவுளுக்கு பலி செலுத்தவும், குருத்துவப் பணி செய்வதற்கும் ஆரோனும் அவனுடைய குடும்பமும் திருநிலைப்படுத்த வேண்டும். அதற்கான வழி முறைகளையும் இறைவன் கொடுக்கிறார்.

    “காளையின் ரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி ரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு” (யாத் 29:12) இது முதல் கட்டம்.

    “இரண்டாவது, செம்மறிக்கடாவை வெட்ட வேண்டும். அதன் ரத்தத்தை எடுத்து ஆரோன் மற்றும் புதல்வர்களின் வலக்காது நுனியிலும், வலக்கால் பெருவிரலிலும் வைக்க வேண்டும். பலி பீடத்தைச் சுற்றி ரத்தம் தெளிக்க வேண்டும். மிச்ச ரத்தத்தை ஆரோன், அவர் புதல்வர்கள் ஆகியோர் மீதும் அவர்களுடைய உடைகள் மீதும் தெளிக்க வேண்டும்” (விடுதலைப்பயணம் 29: 19-21)

    தனக்கான பலி எப்படி இருக்கவேண்டும், தனக்கு பலி கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக பழைய ஏற்பாட்டில் கடவுள் சொல்கிறார். அதே போல, உலகின் மீட்பு எப்படி இருக்க வேண்டும், யாரால் நிகழ வேண்டும், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் மிகத் துல்லியமாக இறைவன் திட்டமிட்டி ருந்தார்.

    அப்படி உலக பாவங்களைப் போக்க வந்தவர் தான் இயேசு. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே புதிய ஏற்பாட்டின் நிழல் உருவங்கள் என்கிறது விவிலியம். அப்படி, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பலிபீடம் கிறிஸ்துவின் நிழல் உருவம். “நமக்கு ஒரு பலிபீடம் உண்டு (எபிரேயர் 13:10) எனும் புதிய ஏற்பாட்டு வசனம் அதை எடுத்துக் காட்டுகிறது.

    பழைய ஏற்பாட்டில், பலிபீடத்தைத் தரிசித்த பின்பு தான் ஒருவர் இறைவனின் அருகில் செல்ல முடியும். புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மூலமாக மட்டுமே மீட்பை அடைய முடியும்.

    பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஒரு மாற்றத்தின் அடையாளம், அந்த மாற்றத்துக்குப் பின்பே நாம் தூயகத்துக்குச் செல்ல முடியும். இன்று நமது மனமாற்றத்தின் கருவியாக இருப்பவர் இயேசுவே.

    இந்த பலிபீடம் ‘நம்பிக்கை மிக்க அழைப்பு’ கொடுக்கப்படும் இடம். இந்த பலிபீடம் பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கிற ஒரு இடம்.

    பழைய ஏற்பாட்டு பலிபீடம் ஐந்து முழம் அளவு கொண்டது. ஐந்து என்பது இறை அருளின் எண். புதிய ஏற்பாட்டில் இறைவனின் அருள் இயேசுவின் வாழ்க்கை மூலம் வெளிப்படுகிறது.

    அந்த பலிபீடத்தின் நான்கு கொம்புகளும் இயேசுவின் வல்லமையின் அடையாளம். நான்கு எனும் எண் படைப்போடு தொடர்புடையது. நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் கிறிஸ்துவிடம் வரலாம், அவர்களுக்கு மீட்பு உண்டு என்பதை அந்த எண் உணர்த்துகிறது.

    இயேசுவின் வாழ்க்கையை விவிலியத்தில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். பலிபீடத்தின் நான்கு கொம்புகளும், இயேசுவின் வாழ்க்கையை நான்கு கோணத்தில் அணுகியிருக்கும் அந்த நான்கு நூல்களைக் குறிக்கின்றன.

    மத்தேயு இயேசுவை அரசராகவும், மார்க் அடிமையாகவும், லூக்கா மனிதராகவும், யோவான் கடவுளாகவும் அணுகுகின்றார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இயேசு மக்களின் மீட்பர் என்பது மட்டுமே மாறாத ஒன்று.

    பாலை நில வாழ்விலே பலிபீடம் மக்களால் சுமந்து செல்லப்பட்டது. எந்த ஒரு கிறிஸ்தவனும் சிலுவையை சுமப்பதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதன் அடையாளம் அது.

    மனிதன், கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவன். ஆனால் பாவத்தால் அழிவுக்கு உள்ளானான். பரிசுத்த ஆவியால் மீண்டும் அவன் பிறக்கிறான். கடைசியில் இறைமகன் இயேசுவுக்கு ஒப்பாக மாறுகிறான் எனும் படிப்படியான மாற்றத்தை பலிபீடம் கற்றுத் தருகிறது.

    பலிபீடம் பாவ மன்னிப்பைத் தருகிறது. பலிபீடம் ஆண்டவரோடு நாம் இணைக்கப்படும் மீட்பைத் தருகிறது. பலிபீடம் நமக்கு நிலையான வாழ்வைப் பெற்றுத் தருகிறது. பரம தந்தையின் அருகாமையைத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தருகிறது.

    இன்று சிலுவையே பலி பீடம். அதன் அடியில் நாம் நம்மை உணரவேண்டும். மனம் திரும்பவேண்டும். ஏழைகளுக்கு இரங்கும் மனம் கொண்டவர்களாக மாற வேண்டும். நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கும் மனிதர் களாக மாற வேண்டும்.

    பலிபீடம் சொல்லும் இந்த பாடங்களைக் கற்றுக் கொள்வோம். 
    நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான். தன் வழிகளில் தாறுமாறானவனே அவரை அலட்சியம் பண்ணுகிறான் (நீதி.14:2).
    நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான். தன் வழிகளில் தாறுமாறானவனே அவரை அலட்சியம் பண்ணுகிறான் (நீதி.14:2).

    மனிதன் வானத்தின் தோற்றத்தை நிதானித்து, செவ்வானம் மந்தாரமுமாயிருக்கிறது, காற்றும் மழையும் உண்டாகும் என்று அறிந்தவர்கள், வாழ்க்கையில் நிதானம் இல்லாமல் செயல்படுகிறார்கள். சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து அறிந்து உன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக ஜீவிக்க வேண்டும். இறைவன் ஜனங்களை நிதானமாய் நடத்துகிறார். அவர்கள் சந்தோஷத்தோடே மகிழ்ச்சியாய் ஜீவிக்கிறார்கள்.

    எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்படுகிறவன் வாழ்க்கை செழிக்கும். அவர்களுக்கு இடறல்கள் வருவது இல்லை. நிதானமாய் பேசினால் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவினிடத்தில் தவறு செய்து நிதானமாய் உத்தரவு சொன்னபோது அவன் பிழைத்தான்.

    நீ வழக்காடப் பதற்றமாய் போகாதே. முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்துவான். நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ சிந்தித்து செயல்பட்டுப்போய் நிதானமாய் பேசினால் வெற்றியை காண்பாய்.

    நன்மை-தீமை அறிந்து செயல்படு

    நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது (நீதி.17:13).

    ஒருவரிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தீமை செய்யக்கூடாது. தீமை செய்தால் பாவம் நமது வீட்டின் வாசற்படியில் வந்து படுத்துக்கொள்ளும். உண்மையாய் தேவனிடத்தில் அன்பு வைத்தவர்கள் யாருக்கும் தீமை செய்யமாட்டார்கள்.

    யாக்கோபின் மாமன் லாபான் யாக்கோபுக்கு தீமை செய்ய நினைத்த போது, கர்த்தர் சொப்பனத்தில் தோன்றி, ‘நீ யாக்கோபுக்கு நன்மையே அன்றித் தீமை ஒன்றும் செய்யாதே’ என்று எச்சாரித்தார்.

    நன்மை செய்ய தேடுகிறவன் தேவ கிருபையை பெறுவான். தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். மனிதன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான். தீமை செய்கிறவன் கொடுமையைப் புசிப்பான். பாவம் செய்தால் தீவினை தொடரும். தேவ நீதியின்படி ஜீவிக்கிறவர்களுக்கோ நன்மை இரட்டிப்பாக வரும்.

    மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையை கண்டடைவதில்லை. புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறு செய்கிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ தேவ மகிமை சூழ்ந்து கொள்ளும்.

    தீமையை விட்டு விலகி நன்மை செய்தால், நீதியின் சூரியனாய் ஜொலிக்கும் இயேசு உன்னோடு இருப்பார். நீ தேவ மகிமையை காண்பாய். உன் வீட்டில் சமாதானத்தின் ஆசீர்வாதம் பெருகும்.

    பொறுமையாய் செயல்படு

    அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள். உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும் (நீதி.5:10).

    மனிதன், ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதத்தை அவசரப்பட்டு இழந்து போகிறான். எப்படி ஆசீர்வாதத்தை பாதுகாக்கவேண்டும் என்று பொறுமையாக சிந்தித்து செயல்படாத காரணத்தால், ஆசீர்வாதத்தின் மேன்மையை பல தீய வழிகளில் சென்று அந்நியருக்கு கொடுக்கிறான். தன் ஆயுசின் காலத்தை கொடூரமான வழிகளில் செலவிடுகிறான். எல்லா தீமைக்கும் அடிமை ஆகிவிடுகிறான். முடிவிலே ஆசீர்வாதமும் சரீரமும் உருவழியும் போது துக்கப்பட்டு வேதனைப்படுகிறான்.

    ‘ஐயோ, தேவ போதகத்தை நான் கேளாமலும், பலர் உபதேசம் பண்ணியும் சிந்தித்து செயல்படாமல் போனேன். அவசரப்பட்டேன், பொறுமை இல்லையே’ என்று புலம்புகிறான்.

    உன் பிரயாசத்தின் ஆசீர்வாதம் திரும்பி வருவதில்லை. தேவ ஜனமே மோசம் போகாதீர்கள். மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறதை அறியாமல் போனார்கள். பொறுமையாய் செயல்படுகிறவர்கள் தேவ பலத்தின் மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் காணப்படுவார்கள் அவர்கள் தேவனோடு இருப்பார்கள்.

    சாந்த குணமாய் செயல்படு

    ‘மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுண முள்ளவனாயிருந்தான்’ (எண்.12:3).

    மோசே மிகுந்த கோபக்காரன். நியாய பிரமாணத்தை படித்தும் தேவ சத்தத்தை கேட்டும் பூமியில் சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன் ஆனான். தேவனே சாட்சி கொடுக்கிறார்.

    மோசே கர்த்தரிடத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், இஸ்ரவேல் ஜனத்தோடே பேசும் போதும் சாந்த குணமாய் பேசினான்.

    நாநூற்றி முப்பது வருடம் அடிமைத் தனத்திலிருந்து எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தில் வந்தபோது, பார்வோன் படைகள் பின்தொடர இஸ்ரவேல் ஜனங்கள் பிதாவை நோக்கி கூப்பிட்டார்கள். மோசேயினிடத்தில் மிகுந்த கோபம் கொண்டார்கள்.

    மோசே, தேவனோடு பேசினான். கர்த்தர் சமுத்திரத்தை பிளந்து சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையை உண்டு பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடந்து சமுத்திரத்தை கடந்தார்கள்.

    மோசே சாந்த குணத்தினால் சிந்தித்து செயல்பட்டான். தேவனின் கிரியை அற்புதமாக அதிசயமாக செயல்பட்டது. சகல ஜனங்களும் உயிர் தப்பினார்கள்.

    மோசேயின் சாந்த குணத்தால் ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல பேசினார். நாமும் சாந்த குணமாய் சிந்தித்து செயல்பட்டால் மோசேயோடு பேசிய தேவன் நம்மோடும் பேசுவார்.

    சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50. 
    என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம்.
    இறைவனிடம் 2 பேர் வணங்குகின்றனர். அதில் ஒருவர் நான் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஆதலால் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றார்.

    இரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    தான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.

    சமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே! கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.

    உடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.

    என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.

    - வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
    வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம்.
    இயேசுவை பற்றிய அறிவே இவ்வுலகச்செல்வங்களை விட மேலானது என்பது தூய பவுலடியாரின் ஆழமான நம்பிக்கை. இயேசுவை அறிதல் என்பது, அறிவு சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாது, அது அவரோடு இணைந்த அனுபவமாகவும் அமைய வேண்டும். அத்தகைய அனுபவத்தின் மூலமாகத்தான் துச்சமென அனைத்தையும் நாம் தூக்கி எறிய முடியும்.

    தூய பவுலடியார், இயேசு குறித்து கொண்டிருந்த அறிவு அனுபவப்பூர்வமானது. “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.ப. 9:5) என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தூய பவுலடியார் மனம் மாறினார். கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக பல்வேறு துன்பங்களை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்த போதும், சாட்டையால் அடிக்கப்பட்ட போதும், கல்லெறியப்பட்டபோதும், கப்பல் சிதைவில் சிக்கிய போதும், சொந்த மக்களாலும், பிற மக்களாலும் இடர்களுக்கு ஆளானபோதும் அவர் மனந்தளரவில்லை. மாறாக, தாம் பெற்றிருந்த அழைப்பில் உறுதியாக நின்று, இயேசுவின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்தார்.

    இயேசுவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு, இயேசுவின் தோழமையை, தாழ்ச்சியை, தன்னையே அர்ப்பணித்ததை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. ஆகவேதான், தான் பற்றிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் இழக்க முன் வருகிறார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள முயலும் போது ஏற்படும் எந்த இழப்பும், குப்பைக்கு சமமானதாக கருதினார் தூய பவுலடியார்.

    இந்த தவக்காலத்தில் உண்மையான செல்வமாகிய இயேசுவின் மீது நமது மனங்களை திருப்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நிலையற்றவைகளில் நமது பற்றினை களைந்து, நிலையானவற்றில் பற்று கொள்ள நம்மை தூண்டும் காலம் இது. புகழ், பதவி, பணம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் வரும் சிலுவைகளை சுமந்து கொண்டு, அவருக்கு உண்மையான சாட்சிகளாக வாழ முற்படுவோம்.

    இயேசுவோடு இணைந்திருந்து அவரின் உடனிருப்பை உணர்வோம். வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்தவக்காலம் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

    அருட்பணி. தா.சகாயராஜ், பங்குத்தந்தை, மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல். 
    நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.
    நீதி எனக்கு வேண்டாம்
    நீதியின் ஆண்டவர் வேண்டும்.
    நிலம் எனக்கு வேண்டாம்
    நிலத்தின் உரிமையாளர் வேண்டும்.
    இது தாவீது மன்னனின் வேட்கையாய் இருந்தது.

    நீதியின் ஆண்டவரும், நிலத்தின் உரிமையாளரும் கடவுளே என்பதை தாவீது அறிந்திருந்தார். கடவுள் தருவதில் அல்ல, கடவுளிடம் மட்டுமே மகிழ்ச்சியும், அமைதியும் உண்டு என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.

    ‘பிற தெய்வங்களின் பெயரைக் கூட நான் உச்சரிக்க மாட்டேன்’ என்கிறார் அவர். “அன்னிய தெய்வங்களின் பெயரை நீங்கள் சொல்லவேண்டாம்” எனும் கடவுளின் கட்டளையை அவர் பின்பற்றினார்.

    இறை பிரசன்னத்தில் வாழ்வதையும், இறை சித்தத்தை நிறைவேற்றுவதையுமே அவர் தனது வாழ்க்கையில் முதன்மையாய்க் கொண்டிருந்தார்.

    எல்லாவற்றையும் விட இறைவனே தனக்கு எல்லாம் என, இறைவனிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டுமெனில் நமக்கு இரண்டு அனுபவங்கள் தேவை.

    ஒன்று: இறை பிரசன்னம், இன்னொன்று: இறை சித்தம்.

    இறை பிரசன்னம் நம்மோடு இருக்கையில் நாம் இறை சித்தத்தை மட்டுமே செய்வோம்.

    இறை பிரசன்னம்

    ஏசாயா 6-ம் அதிகாரம் இறை பிரசன்னத்தின் அற்புதமான உதாரணம். அதை விடச்சிறந்த ஒரு பகுதியை நாம் பார்க்கவே முடியாது.

    ஏசாயா ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கிறார். அப்போது இறை பிரசன்னத்தை உணர்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததும் தன்னுடைய நிலையை அவர் உணர்கிறார். தன்னுடைய நிலை உணர்ந்த உடனே தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறார்.

    பாவங்களை அறிக்கை செய்ததால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார். பாவ மன்னிப்பு கிடைத்ததும், கடவுளுடைய அழைப்பு தன்னுடைய செவிகளில் ஒலிப்பதைக் கேட்கிறார். கடவுளுடைய அழைப்பைக் கேட்டதும் தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறார்... என படிப்படியாக இறை பிரசன்னத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.

    “(இறைவன்) ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது” (1 திமோத்தேயு 6:16) என்கிறது பைபிள்.

    இறை பிரசன்னத்தை யாரும் காணமுடியாது எனும் நிலையை மாற்றியவர் இறைமகன் இயேசு. அவரது சிலுவை நமக்கு மீட்புக்காய் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு தரப்படாவிட்டால் நாம் கடவுளோடு நெருங்கியிருக்க முடியாது. காண முடியாத அவரை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம்.

    இறைவனின் பிரசன்னத்தை உணர்கிற உணர்வை நமக்கு சிலுவை பெற்றுத்தருகிறது. அதுவே மிகப்பெரிய பாக்கியம்.

    ஒருவராலும் அவரை நெருங்கவும் முடியாது என்கிறது விவிலியம். மோசேயிடம் “நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்கிறார் கடவுள்.

    அப்படிப்பட்ட கடவுள் இன்று நமக்குள் வசிக்கிறார். அதெப்படி சாத்தியமானது? இறைமகன் இயேசுவின் சிலுவை மரணமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது.

    இறை சித்தம்

    இறை சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைத் தேவை.

    “நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ ..” (தீத்து 2 :12 )என விவிலியம் பேசுகிறது.

    இறை சித்தம் நமது வாழ்க்கையில் நிகழ வேண்டுமெனில் நாம் தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டும். தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டுமெனில் பாவ இச்சையை வெறுக்க வேண்டும்.

    “உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்” (1 யோவான் 2:17) என்கிறது விவிலியம்.

    இறை சித்தத்தை நிறைவேற்றுவது விருப்பு,

    பாவ இச்சையை அகற்றுவது மறுப்பு.

    திருத்தூதர் பவுல் இறை பிரசன்னத்தை உணர்ந்தவர், இறை சித்தத்தை நிறைவேற்றியவர். பழைய ஏற்பாட்டில் தாவீதைப் போல, புதிய ஏற்பாட்டில் பவுல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

    பவுல் கிறிஸ்தவர்களைக் கொல்லத்தேடியவர். எப்போது அவருக்கு இறைவனின் பிரசன்னம் கிடைத்ததோ, அப்போது இறை சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்தார். பின்னர், தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து இறைவனோடு பயணித்தார்.

    தொடர்ந்து தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் இறைவனின் சித்தம் என எடுத்துக் கொண்டவர் அவர். திருச்சபையினரைச் சந்திக்கச் செல்வதையும், சந்தித்து திரும்பியதையும், நற்செய்தி அறிவித்தலுக்கு எழுந்த தடைகளையும் அதன்பின் நடந்த எல்லாவற்றையும் இறை சித்தம் என்கிறார்.

    பழைய ஏற்பாட்டில் தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றினார் என்பதை புதிய ஏற்பாடும் பதிவு செய்கிறது. ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்’ என தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றியதை திருத்தூதர் பணிகள் நூல் பேசுகிறது.

    நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’. 
    இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
    “நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை” (சீராக் 6-15) என்பது மறைவாக்கு.

    ‘தம் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ என்பது இயேசுவின் இறைவாக்கு.

    நல்ல நண்பர்களை தமதாக்கிக் கொண்டு, நட்புறவை பரிமாறி வாழ்கின்ற இனிமையான வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

    முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்

    செல்வந்தரான மனிதர் ஒருவருக்கு வீட்டுப்பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட தலைவர், “உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப்பொறுப்பாளராய் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார்.

    “வீட்டுப்பொறுப்பில் இருந்து தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே, மண் வெட்ட என்னால் இயலாது. இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறதே” என்று அவர் வருந்தினார். வீட்டுப்பொறுப்பிலிருந்து இன்னும் சில நாட்களில் அவர் நீக்கப்படப் போகின்றபடியினால், தலைவர் நீக்கிவிடும் போது பிறர் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்மதியோடு ஒரு செயலை செய்கின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை வரவழைக்கிறார். அவரிடம் கடனைக் கேட்கிறார். ‘நூறு குடம் எண்ணெய்’ என்பதை ‘ஐம்பது குடம் எண்ணெய்’ என்று எழுதச்சொல்கிறார். இன்னொருவர், ‘நூறு மூட்டை கோதுமை’ என்றவுடன் ‘எண்பது மூட்டை கோதுமை’ என்று எழுதச்சொல்கிறார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியைக் கண்டு, கடன்பெற்றவர்கள் அவரைப் பாராட்டினர்.

    ேநர்மறைப் பார்வையுடன் புரிவதற்கும் விளக்குவதற்கும் இந்த உவமை சற்று முரண்பாடுடன் காணப்படுகின்றது. இது மறைநூல் அறிஞர்களுக்கோ, மக்களுக்கோ கூறப்பட்டதில்லை. மாறாக, இயேசு தமது சீடர்களுக்கே கூறியதாகும்.

    நீதியற்ற ஒரு பணியாளன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு தனக்கென்று நண்பர்களைத் தேடிக்கொள்ளுவதைப் பற்றிக் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர்

    பாலஸ்தீன நாட்டில் அநேக செல்வந்தர்கள் இருந்தார்கள். யூதர்கள் அனைவரும் செல்வந்தர்களைக் குறித்து நன்கு அறிந்திருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளை மேற்பார்வை செய்ய வீட்டுப்பொறுப்பாளர்களையும் நியமித்திருந்தனர். செல்வந்தர்கள் உடைமைகளை குறித்த அத்தனை விவரமும் அவர்களை விட வீட்டுப் பொறுப்பாளர்களுக்கே தெளிவாக தெரியும்.

    செல்வந்தர்களின் தொழில் செழிப்புறுவதும், நலிவடைவதும் இந்த வீட்டுப் பொறுப்பாளர்களின் கரத்தில் தான் உள்ளது. சொல் ஆளுமையும், அறிவும், திறமையும், முன்மதியும் நிறைந்த வீட்டுப்பொறுப்பாளர்கள் தான் செல்வந்தர்களின் பலம் ஆகும்.

    இங்கே குறிப்பிடப்படும் வீட்டுப்பொறுப்பாளர் ஒரு அடிமை தான். எனினும், தன் தலைவரின் உடைமைகளுக்கு பொறுப்பாளியும் இவர் தான். தன்னுடைய அதிகாரம், பொறுப்பு எடுபட்டுப் போகக்கூடிய ஒரு இக்கட்டான நிலைக்கு உட்படுகின்றார்.

    முன்மதியோடு செயல்படுதல்

    வீட்டுப்பொறுப்பாளர் இங்கே நீதியற்றவராய் முனைந்து செயல்படத் துணிகிறார். இவரைப் போல் கடனாளிகளும் அநீதியாளர்களாகவே மாறிப்போகின்றனர். தன்னுடையவற்றில் இருந்து வீட்டுப்பொறுப்பாளி கடன் கொடுக்கவில்லை என்றாலும், கடன் கணக்கு தன்னுடைய கையில் இருக்கும் வரை இதை மாற்றவோ திருத்தவோ அவரால் முடியும். ஏனெனில் கடன் பெற்றவர்கள் யார் யார் தன்னிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்பது தலைவருக்குத் தெரியாது.

    கடன் பெற்றவர்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தத்துடனேயே நிலத்தினை வாங்கியிருப்பார்கள். நிலத்திற்கூரிய கிரயத்தை பணமாக அல்லது பொருளாக செலுத்துவதே வழக்கம். இங்கும் பொருளாக செலுத்தவே உடன்பட்டிருக்கிறார்கள்.

    முதலாவது மனிதர் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டிருக் கிறார். நூறு குடம் எண்ணெய் ஏறக்குறைய 3,700 லிட்டருக்குச் சமம். இது ஒலிவ எண்ணெயாக இருக்கலாம்.

    இரண்டாவது கடன்காரர் கோதுமை கடன்பட்டவர். ஏறக்குறைய நூறு கலம். நூறு கலம் கோதுமையின் விலை ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய். இதை மாற்றி எண்பது கலம் என்று எழுதும்படி வீட்டுப்பொறுப்பாளர் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தன் விருப்பப்படி ஒருவருக்கு சரிபாதி கடனையும், மற்றவருக்கு ஐந்தில் ஒரு பங்கு கடனையும் குறைக்கின்றார்.

    இங்கே இவரின் செயலும் அநீதி, பொருளும் அநீதி. ஆனால் நேர்மையற்ற உலகப்பொருள் மூலம் தனக்கு அடைக்கலம் தருகின்ற, நேசிக்கின்ற, தனக்கு நன்றியுணர்வு காட்டுகின்ற இரு நண்பர்களை உருவாக்குகின்றார். இந்த முன்மதியையே தலைவரும் பாராட்டுகின்றார்.

    நண்பர்களைத் தேடுவோம்

    பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர். இந்த செல்வத்தையும், நல்வாழ்வையும், மேன்மையையும் கொடுக்கிறவர் கடவுள் (சஉ. 6:2).

    நம் வாழ்வில் அருளப்படுகின்ற செல்வங்கள் நம் சுய நலனுக்கானதல்ல. இது பிறர் வாழ்வுக்காகவும் பகிரப்பட வேண்டியதே. நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான் (நீதி 17:17).

    சமயம், இனம், மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயத்துடன் எல்லாருடனும் நட்புறவு கொள்ள நம் உலகப் பொருள்கள் உதவிடட்டும். குருவான இயேசு தம் சீடர்களை ‘தோழர்களே’ என்று நட்புறவுடன் அழைத்தார். அவர்களை இறுதிமட்டும் நேசித்தார்.

    சில விரற்கடை அளவாயுள்ள ஆயுட்காலத்தை கொண்ட இம்மானிட பிறப்பில் பல பண்பில் உயர்ந்த நல்ல நண்பர்களை நமதாக்கி கொண்டு, இறைவழியில் நட்புறவு கமழும் நிறைவாழ்வு வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், உண்ணாமலைக்கடை. 
    ×