search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.
    பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

    நம் தேவன் அற்புதர். உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்யும்படிக்கே மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் அற்புதமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேவன் உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    வேதம் சொல்லுகிறது, ‘ஆராய்ந்து முடியாத பெரிய காரியங் களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்’ (யோபு.9:10).

    அன்று கானாவூர் கல்யாண வீட்டிலே முதல் அற்புதத்தை செய்த ஆண்டவர் உங்கள் குடும்பத்திலும் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    இயேசுவுக்கு முதலிடம்

    ‘இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்’. (யோவான் 2:2)

    கானாவூரிலே திராட்சரசம் குறைவுபட்ட போது அந்த திருமண வீட்டிலே இயேசு அற்புதம் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? இயேசு அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களை செய்ய வேண்டுமானால், அவருக்கு முதலிடம் கொடுங்கள்.

    ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அவரோடு பேசுங்கள். அவர் வாசற்படியில் நின்று தட்டுகிறவர். அவருக்கு உங்கள் உள்ளக்கதவைத் திறந்தால் அவர் உங்களுக்குள் உலாவி உங்களோடு வாசம் பண்ணுவார். உங்கள் குடும்பத்தில் வருகிற எல்லா போராட்டங்களையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி உங்களுக்கு அற்புதம் செய்வார்.

    இயேசுவிடம் சொல்லுங்கள்

    ‘திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்’ (யோவான் 2:3).

    திருமண வீட்டில் ஒரு குறைவு ஏற்பட்ட போது இயேசுவின் தாயார் இயேசுவிடம் சொன்னார்கள். உடனே ஆண்டவர் குறைவுகளை நிறைவாக்கி ஒரு அற்புதம் செய்தார்.

    உங்கள் குடும்ப வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினையோ, போராட்டமோ, வியாதியோ, நஷ்டமோ ஏற்பட்டால் உடனே ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுங்கள்.

    இன்று அநேகர் மனுஷரைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என அவர்களையே நோக்குகிறார்கள்.

    ஆனால் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவரிடம் உங்கள் பிரச்சினைகளையும், குறைவுகளையும் சொல்வீர்களேயானால் நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    இயேசுவுக்கு கீழ்ப்படியுங்கள்

    “இயேசு வேலைக்காரரை நோக்கி: ‘ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்’ என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்” (யோவான் 2:7).

    கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் ஆண்டவர் என்ன சொன்னாரோ அதன்படி செய்ததால்தான் சாதாரண தண்ணீர் ருசியுள்ள திராட்சரசமானது.

    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.

    கர்த்தர் நல்லவர். நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்வில் கர்த்தர் பெரிய அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார். சிறிய காரியமோ, பெரிய காரியமோ தேவனுக்கு நீங்கள் கீழ்ப் படிந்தால் பெரிய பெரிய அற்புதங்களை தேவன் உங்கள் வாழ்வில் செய்வார்.

    இந்த மாதத்திலேயே கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    இயேசுவின் பின்னால் திரளான மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவின் பின்னால் சென்ற மக்கள் அவருடைய புதுமைகளினாலோ, போதனைகளினாலோ, அப்பங்களினாலோ ஈர்க்கப்பட்டவர்கள்.
    பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:

    என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.

    “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

    “வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

    அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

    இயேசு தனக்கு சீடராய் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களைப் பற்றி இங்கே பேசுகிறார்.

    இயேசுவின் பின்னால் திரளான மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவின் பின்னால் சென்ற மக்கள் அவருடைய புதுமைகளினாலோ, போதனைகளினாலோ, அப்பங்களினாலோ ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் உண்மையாய் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவர்களில் வெகு சிலரே.

    இயேசு அதை நன்கு அறிந்திருந்தார். அவர் எண்ணிக்கையில் விருப்பம் கொள்பவரல்ல. தரமான சீடர்கள் வேண்டும் என்பதே அவரது விருப்பம். எனவே இயேசு திரும்பிப் பார்த்து ஒரு செய்தியையும், அதைச் சார்ந்த இரண்டு உவமைகளையும் சொல்கிறார். இந்த விவிலியப் பகுதி சொல்லும் விஷயங்களில் முக்கியமானவை இவை எனக் கொள்ளலாம்.

    1. இயேசுவைப் பின்பற்ற வேண்டுமெனில் உறவுகளையும், உலகையும் வெறுக்க வேண்டும். அதாவது, அவை எல்லாவற்றையும் விட அதிகமாய் இயேசுவை நேசிக்க வேண்டும். உலகின் வசீகரங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவை பின்பற்ற தயாராய் இருக்க வேண்டும்.

    2. தன்னையே வெறுக்க தயாராய் இருக்க வேண்டும். தன் உயிரை விட அதிகமாய் இயேசுவை நேசிக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது என்பது போராட்டமானது. சவாலானது. சொந்த உயிரைக் கூட‌ இழக்க தயாராய் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

    3. இயேசுவைப் பின்பற்ற எல்லோருமே முதலில் ஆர்வமாய் களமிறங்குகின்றனர். ஆனால் கொஞ்ச காலத்திலேயே சோர்வடைந்து விடுகின்றனர். இயேசுவைப் பின்பற்றுவது என்பது சட்டென முடிந்து போகும் விஷயமல்ல. கடைசி வரை நிலைத்திருப்பதே முக்கியம். எனவே களமிறங்கும் முன் நிலைத்திருக்க முடியுமா என சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்பெல்லாம் ஒரு குருவிடம் மாணவர்கள் முழுமையாய் சரணடைந்து, அவர்களோடே தங்கி, அவர்களுக்குப் பணிவிடை செய்து கற்கும் குருகுல வழி இருந்தது. இன்று அப்படியில்லை. எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன அவசரமாகிவிட்டது. தயாராதல் அவசியம்.

    4. தாய் தந்தையை மதிக்கச் சொன்னவர் இயேசு. அதே இயேசு அவர்களை விட தன்னை அதிகமாய் அன்பு செய்யச் சொல்கிறார். பிள்ளைகள் கர்த்தரால் வரும் வரம் என்ற இறைவன் அவர்களை விட அதிகமாய் தன்னை நேசிக்கச் சொல்கிறார். திருமண பந்தத்தை உருவாக்கிய இறைவன் மனைவியை விட அதிகமாய் தன்னை நேசிக்கச் சொல்கிறார். சுருக்கமாக, தான் படைத்தவற்றை விட, படைத்த தன்னை அதிகமாய் நேசிக்க வேண்டும் என விரும்புகிறார். இறைவனை நேசிக்கும் போது மற்ற உறவுகளை நாம் முன்பை விட அதிகமாய், ஆழமாய் நேசிப்போம் என்பதே உண்மையாகும்.

    5. தன்னைப் பின்பற்ற விரும்புபவர், தான் மிக அதிகமாய் நேசிக்கும் அனைத்தையும் விட்டு விட தயாராய் இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். ஆபிரகாம் தனது ஒரே மகனான ஈசாக்கைப் பலியிட தயாரானார். மோசே தனது செல்வங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இறைவன் அழைப்பை ஏற்றார். அத்தகைய மனிதர்களே அழைப்புக்கு தகுதியானவர்கள் என்பதை இயேசு சொல்கிறார்.

    6. தனிமனிதனாக ஒரு கட்டிடம் கட்டுவதாய் இருந்தாலும் சரி, ஒரு மிகப்பெரிய படையோடு போரிடுவதாய் இருந்தாலும் சரி. திட்டமிடல் முக்கியம். நாம் இறைவனிடம் தனியாய் வந்தாலும், ஒரு குழுவாய் வந்தாலும் இயேசுவைக் கடைசி வரை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்.

    7. தனது சிலுவையை மனிதன் தானே சுமக்க வேண்டும், அப்போது தான் இயேசுவைப் பின்பற்ற முடியும். இதன் பொருள் என்ன ? இயேசுவைப் பின்பற்றும் போது ஏராளமான எதிர்ப்புகள் வரும். உலகமே நம்மை ஏளனமாய்ப் பார்க்கும். பொழைக்கத் தெரியாதவன் என ஏசும். என்ன நடந்தாலும் அத்தகைய அவமானங்கள் எனும் சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமக்கின்ற மனநிலை வேண்டும்.

    8. சிலுவை என்பது தனது விருப்பமும், இறைவிருப்பமும் மோதிக் கொள்ளும் இடம் என்பார் சகோ. சகரியா பூனன். அந்த இடத்தில் இறை விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர்களே இயேசுவின் சீடர்களாகத் தகுதியுடையவர்கள். மற்றவர்கள் பாதி வழியில் பாதை மாறுபவர்கள்.

    9. முதலில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் இறைவனைப் பின்பற்றும் உறுதி உடையவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த உறுதி உண்டு என்பதை உறுதிப்படுத்தினால் தயக்கமின்றி இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அந்த உறுதி இல்லையேல் அந்த உறுதியை முதலில் உருவாக்கிக் கொள்ள இறைவனை நாடவேண்டும்.

    10. எதுவும் இல்லாத நிலையில் இறைவனைப் பின்பற்றுவதிலல்ல பெருமை. எல்லாம் இருக்கும் போது அதையெல்லாம் இழந்து விட்டு இயேசுவைப் பின்பற்றும் மனம் வேண்டும். அதுவே வலிமையானது. உலகம் பல்வேறு வகைகளில் நம்மை பின்னுக்கு இழுக்கும். உறவுகள், செல்வங்கள், புகழ், சாத்தானின் சூழ்ச்சி இப்படி பல்வேறு சோதனைகள் அணிவகுக்கும். இவற்றையெல்லாம் தாண்டி இறைவனைத் தொடரவும், இறுதிவரை தொடரவும் உறுதி வேண்டும்.
    மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர்.
    லூக்கா 14 : 15..24

    இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது:

    “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

    முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.

    பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.

    தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”

    கதையின் பின்னணி இது தான் :

    இயேசுவை ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். அங்கே எல்லோரும் முதன்மை இடங்களுக்குப் போட்டி போடுகிறார்கள். இயேசு அவர்களிடம், எப்போதும் கடைசி இடங்களையே தேர்ந்து கொள்ளுங்கள். தாழ்மையை விரும்புவதே மேன்மையின் முதல்படி என்கிறார். பின் விருந்து ஏற்பாடு செய்திருந்தவரிடம், விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரை அழையுங்கள். அப்போதுதான் அவர்கள் உமக்கு கைமாறு செய்ய மாட்டார்கள். கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார் என்கிறார்.

    இந்த சூழலில் தான் பந்தியிலிருந்த ஒருவர் இந்த வாக்கியத்தைச் சொல்கிறார்.

    “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்”. மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர். எனவே தான் தாங்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் எனும் மெல்லிய கர்வத்தில் அவர் அதைச் சொல்கிறார்.

    இயேசு பதிலாகச் சொன்ன கதையோ அவர்களைக் குழப்பமும் கோபமும் அடையச் செய்திருக்க வேண்டும். இப்போது அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.
    நீங்கள் வேண்டி விரும்புகிற ஆசீர்வாதங்கள் எதுவானாலும் பெற்றுக்கொள்ள வீணாய் நேரத்தை கழித்து உலக மனிதர்களையோ சூழ்நிலையையோ சாராமல் கர்த்தருடைய செட்டைக்குள்ளே ஓடி வாருங்கள்.
    ‘உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்ல வருடைய நிழலில் தங்குவான். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்’. சங்கீதம் 91:14

    எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன். இப்பூமியிலே நீங்கள் பலவிதமான போராட்டங்களையும், உபத்திரவங்களையும் மற்றும் பாடுகளையும் அனுபவிக்கும்போது ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்.

    நம்முடைய அருமை ஆண்டவருடைய மறைவிடமும், சர்வ வல்லவருடைய நிழலும் உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்து போகாதீர்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு அடைக்கலமாக இருக்கிற ஆண்டவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அவருடைய சிறகுகளால் உங்களை மூடி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் தருவார்.

    ஆகவே, உலக மனிதர்களையோ, பணத்தையோ, ஞானத்தையோ நீங்கள் சார்ந்து கொள்ளாமல் உன்னதமானவருடைய மறைவுக்கு ஓடி வாருங்கள். அதனால் நீங்கள் பெறுகிற ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஜெபத்துடன் வாசித்து, தேவனைத் துதியுங்கள்.

    வழிநடத்துவார்

    ‘கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்து கொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை’. உபாகமம் 32:11,12

    எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளையே, நம் அருமை ஆண்ட வருடைய செட்டையின் நிழலுக்குள் நீங்கள் வரும்போது அவர் உங்களை ஆச்சரியமான விதத்தில் நடத்துவார். என்றைக்கு நீங்கள் உன்னதமானவருடைய மறைவுக்கும் அவருடைய நிழலுக்கும் ஒதுங்கி அடைக்கலத்திற்காக அவரிடத்தில் வருகிறீர்களோ ஆச்சரியமாக அவர் உங்களை நடத்துவார். அவருடைய நடத்துதல் உங்களுக்கே அதிசயமாய் இருக்கும்.

    கழுகு தன் செட்டைகளை விரித்து தன் குஞ்சுகளை சுமந்து கொண்டு போவதுபோல கர்த்தர் உங்களை சுமந்துகொண்டு வழிநடத்துவார்.

    வேதாகமத்தில் உள்ள தேவ பிள்ளைகளை, நம் அருமை ஆண்டவர் நடத்தி வந்த அனைத்துப் பாதைகளும் ஆச்சரியமானவைகள். அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் அருமை ஆண்டவர் நடத்தி வந்த விதத்தைக் குறித்து இவ்விதமாய் நாம் வாசிக்கிறோம்.

    ‘அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக் கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்னி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை’. யாத்திராகமம் 13:21,22

    ஆம், அன்றைக்கு தேவபிள்ளைகளை வழிநடத்தின கர்த்தர் உங்களையும் வழிநடத்த வல்லவராயிருக்கிறார். அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் கிருபையாக உங்களுக்காக திறப்பார். வனாந்தரத்தில் உங்களுக்காக வழியை உண்டாக்குவார். அவருடைய நடத்துதல் மிகவும் ஆசீர்வாதமானது. இன்றே அவருடைய செட்டையின் மறைவுக்குள் ஓடிவாருங்கள்.

    பலன் தருவார்

    ‘உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்’. ரூத் 2:12

    அருமையானவர்களே, உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய செட்டையின் கீழ் வருகிற ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைக்கும் அவர் கொடுக்கிற ஆசீர்வாதம் விலையேறப்பெற்றது.

    அன்றைக்கு ரூத்தைப் பார்த்து போவாஸ் கூறின வார்த்தைதான் இன்று நான் உங்களுக்காக குறிப்பிட்டிருக்கிறேன்.

    கர்த்தரை நம்பி அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலமாய் வருகிறவர்களுக்கு வேதம் கூறுகிறது, கர்த்தாலே நிறைவான பலன் கிடைக்கும்.

    நீங்கள் வேண்டி விரும்புகிற ஆசீர்வாதங்கள் எதுவானாலும் பெற்றுக்கொள்ள வீணாய் நேரத்தை கழித்து உலக மனிதர்களையோ சூழ்நிலையையோ சாராமல் கர்த்தருடைய செட்டைக்குள்ளே ஓடி வாருங்கள். நீங்கள் காண்பது நிறைவான பலன் ஆகும்.

    கடந்த நாட்களில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் நிறைவை காணாமல் எல்லாவிதத்திலும் குறைவை அனுபவித்து வந்தீர்கள் என்றால், உன்னதமானவருடைய மறைவுக்கு வந்து விடுங்கள். அவருடைய செட்டையின் நிழலுக்கு வந்து விடுங்கள். அந்த அடைக்கலத்திற்குள் நீங்கள் வரும்போது நீங்கள் எதிர்பார்த்த பலனைவிட மிகவும் அதிகமான நிறைவான பலனை நிச்சயம் காண்பீர்கள்.

    அவருடைய மறைவுக்குள், நிழலுக்குள் வருவது என்றால் அவரையே சார்ந்து கொள்வது ஆகும். நிச்சயம் நிறைவான பலனால் கர்த்தர் உங்களைத் திருப்தியாக்குவார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
    லூக்கா 14 : 7 முதல் 14 வரை

    விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை;

    “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.

    உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.

    அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

    பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

    மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

    இயேசுவின் இந்த போதனை, நேரடியான உவமையாக இல்லாமல் ஒரு அறிவுரை போல வந்திருக்கிறது. பந்திகளில் முதன்மையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என முண்டியடித்த மக்களைக் கண்ட இயேசு பொதுப்படையாக இந்த அறிவுரையைச் சொல்கிறார். அது ஆன்மீகச் செறிவான அறிவுரையாய் அமைந்திருக்கிறது.

    அந்தக் காலத்தில் யூதர்கள் விருந்துக்கு தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலையாட்கள், பெரிய மனிதர்கள் போன்றவர்களை அழைப்பதுண்டு. ஆங்கில யூ வடிவிலான மேஜையில் அவர்கள் வந்தமர்வார்கள். விருந்துக்கு அழைத்தவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருப்பது மிகப்பெரிய கவுரவமாய் பார்க்கப்பட்டது. கடைசி இடத்தில் இருப்பது, குறைவானதாகக் கருதப்பட்டது. இந்த சூழலில் தான் இயேசு இந்த அறிவுரையைச் சொல்கிறார்.
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பிரார்த்தனைகளை கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஆமென்.
    இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லல்பட்டு வேதனைப்படுகிறது உண்டு. அவர்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது உண்டு.

    எங்கள் துக்கங்களை யார் போக்குவார்?, எங்கள் கண்ணீரை யார் துடைப்பார்?, எங்களுக்கு யார் உதவி செய்வார்?, எங்கள் பிரச்சினைகளும் போராட்டங்களும் எப்பொழுதுதான் தீருமோ? என்று கலங்கி தவித்து புலம்புவது உண்டு.

    இப்படி மனுக்குலம் புலம்பி தவித்து வேதனைப்படுகிறதற்கு பலவித காரணங்கள் உண்டு. சிலருக்கு கடன்களின் நிமித்தம் வருகிற துக்கம், சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்கிற துக்கம், சிலருக்கு அவர்கள் மிகவும் நேசித்த நபர் இப்பூவுலகத்தை விட்டு கடந்து போனதினிமித்தம் ஏற்பட்ட துக்கம், சிலருக்கு தங்கள் கணவர், சம்பாதித்த பணத்தையெல்லாம் குடித்தே செலவு செய்கிறாரே என்கிற துக்கம்.

    சிலருக்கு தங்கள் பிள்ளைகள் நன்றாக ஒழுக்கத்தில் வளரவில்லையே என்கிற துக்கம், சிலருக்கு, நான் என்ன செய்தாலும் அதில் ஒரு முன்னேற்றம் இல்லையே, தொழில்கள், வியாபாரங்கள் முடங்கி விட்டதே என்கிற துக்கம், சிலருக்கு சரீரத்தில் உள்ள வியாதிகள், பலவீனத்தினால் ஏற்படுகிற சரீரப் பிரயாசமனிமித்தம் உள்ள துக்கம், தங்கள் பணம் எல்லாம் மருத்துவமனைக்கே செலவு செய்கிறோமே என்கிற துக்கம்... இப்படி துக்கங்களை குறித்து எழுதிக்கொண்டே போகலாம்.

    இப்படி துக்கத்தில் சிக்கி தவித்து கண்ணீரோடு வாழுகிற மனுக்குலத்தை இரட்சித்து காப்பாற்றவே இயேசு பிரான் பூமிக்கு மனு அவதாரம் எடுத்து வந்தார். ஆகவேதான் திருமறை கூறுகிறது அவர் உலக இரட்சகர் என்று.

    அவர் பூமியில் வாழ்ந்து, மனுக்குல மீட்பிற்காக அநேக சொற்பொழிவுகளை ஆற்றி அவர் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து சிலுவையில் தன் ஜீவனை விட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த தெய்வம்.

    அவர் தன் சொற்பொழிவுகளிலே இப்படி திருவுள்ளம் பற்றினார். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோவான் 16:20). மெய்யாகவே இதை வாசிக்கின்ற உங்களுடைய துக்கத்தை மாற்றும் சர்வ வல்ல தேவனவர்.

    பரிசுத்த வேதகாமத்திலே அன்னாள் என்கிற ஒரு சகோதரியின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த அன்னாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை என்கின்ற வேதனை கண்ணீர். குழந்தை பாக்கியம் இல்லையென்கிறத்தினிமித்தம் அவளை ‘மலடி’ என்கிற வார்த்தையினால் அவளுக்கு மலடி பட்டம் கட்டினர் ஜனங்கள்.

    இந்த துக்கம் தாங்காமல் வேதனையின் மிகுதியினால் அவள் தேவாலயத்திற்கு சென்று தன் இருதயத்திலுள்ள பாரங்களை, வேதனைகளை கண்ணீராக வடித்து ஊற்றினார். இறுதியாக அவள் இப்படி ஒரு பொருத்தனை செய்தாள் கடவுளிடம்.

    ‘என் ஆண்டவரே, நீர் எனக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுத்தால் அதை நான் உமக்கே திரும்ப கொடுக்கிறேன் என்று’. அதாவது கடவுளின் தொண்டு செய்வதற்கு கடவுளுடைய தேவாலயத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என்று.

    கடவுள் அவளுடைய ஜெபத்தை கேட்டார், அவளுடைய கண்ணீரை கண்டார், அவளுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையை கட்டளையிட்டார். அவளுடைய துக்கம் மாறி சந்தோஷம் அடைந்தாள்.

    இதை வாசிக்கின்ற எனக்கருமையானவர்களே, உங்களுடைய குறைவு என்ன? உங்களுடைய துக்கம் என்ன? இன்றே கடவுளிடம் தெரிவியுங்கள். அன்னாளைப் போல் தேவாலயத்தில் சென்று தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்கள் இருதயத்தில் உள்ள கவலைகளை, துக்கங்களை தெய்வத்திடம் தெரிவியுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு அற்புதம் செய்வார்.

    ஆம், உங்களுக்காக ஜீவனையே கொடுத்த தெய்வம் அல்லவா?. அவர் கூறினார்: ‘என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்’ என்று (யோவான் 14:14). ‘நிச்சயமாய் உங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கும், நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது’ (நீதி 23:18) என்று திருமறையில் எழுதப்பட்டுள்ளது.

    இந்த வார்த்தையின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பிரார்த்தனைகளை கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஆமென்.

    சகோ. சி. சதீஷ், வால்பாறை.
    எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு.
    லூக்கா 10 : 25..36

    திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

    அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

    அவர் மறுமொழியாக,
    ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’
    என்று எழுதியுள்ளது” என்றார்.

    இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

    அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

    “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை⁕ எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

    “கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

    இயேசுவிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அவரை எப்படியாவது மாட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் தான் கேள்விகளைக் கேட்டார்கள். அதிலும் குறிப்பாக, மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பரிசேயர்கள், குருக்கள் போன்றவர்களுடைய கேள்விகள் இரண்டு சிந்தனைகளை உள்ளடக்கியனவாகவே இருந்தன.

    1. தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம்.

    2. இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை.

    இந்த கேள்வியும் அப்படிப்பட்ட‌ ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந்தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.

    யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டுமெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக அவன் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக்கிறான்.

    சட்ட வல்லுநருக்கு இயேசு சட்டத்தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது ?”

    கேள்வி கேட்டவனுக்கு குஷி. இந்த ஏரியாவில் அவன் எக்ஸ்பர்ட். சட்டென சொல்லி விடுகிறான் பதிலை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்டத்தின் சாரம்சம் என்றான்.

    சரியாகச் சொன்னாய். அப்படியே செய், உனக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றார் இயேசு.

    எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. இறைவனின் கட்டளைகள் மனிதனை அன்புசெய்வதில் தான் நிறைவு பெறுகின்றன.

    கேள்வி கேட்டவனுக்கு அத்துடன் திருப்தி வரவில்லை. தான் எல்லாமே பக்காவாக செய்து வருவதாக அவனுக்கு ஒரு தற்பெருமை. கேள்வி கேட்டவன் ஒரு யூதனாய் இருக்கலாம். அவன் தன்னுடைய நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும் நோக்கில் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

    “யார் எனக்கு அடுத்திருப்பவன்”, எனது அயலான் யார் ? யார் எனக்கு பிறன் ?

    அப்போது தான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

    வழியிலேயே கள்வர்களால் குற்றுயிராக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார் ஒரு மனிதர். ஒரு குரு, குருவுக்கு உதவி செய்யும் லேவியர் இருவரும் தற்செயலாய் அந்த வழியாய் வருகின்றனர். ஆனால் அவனைக் கண்டதும் விலகிச் சென்றனர். அவனுக்கு உதவ மத மனங்கள் முன்வரவில்லை. அப்போது அங்கே பயணமாய் வருகிறான் சமாரியன் ஒருவன். யூதர்களின் ஜென்ம விரோதி.

    அவன் அடிபட்டவனை நெருங்கி, முதலுதவி செய்து, விலங்கின் மீது ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டு சென்று, பணம் கொடுத்து, மீண்டும் தேவைப்பட்டால் தருவதாக உத்தரவாதமும் கொடுத்து கிளம்பிச் செல்கிறான்.

    இப்போது இயேசு கேள்வியை திருப்பிக் கேட்கிறார். அடிபட்டவனுக்கு யார் அயலான் ? “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்கிறான் திருச்சட்ட வல்லுநர். அவனுடைய வாயில் அந்த ‘சமாரியன்’ எனும் வார்த்தையே வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அவனுக்குள் இருந்தது.

    இயேசு சொன்னார், “நீயும் போய் அவ்வாறே செய்”

    தேவையில் இருக்கும் நபருக்கு உதவுபவனே அடுத்திருப்பவன். அதாவது இதயங்களால் அடுத்திருக்க வேண்டும், உடலாலோ, நில எல்லைகளாலோ அடுத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. மனித நேயத்தை மறுதலிக்கும் விஷயங்களில் இறைவன் இருப்பதில்லை.

    இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.
    “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

    உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.

    எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்றார் இயேசு (Luke 11 5-8 )

    இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.

    “இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார் ( லூக்கா 11 : 1 )

    அப்போது இயேசு அவர்களுக்கு பிரபலமான அந்த ஜெபத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். அது கர்த்தர் கர்ப்பித்த ஜெபம் என அழைக்கப்படுகிறது. அந்த செபம் இது தான்.

    ‘தந்தையே, உமது பெயர்
    தூயதெனப் போற்றப்பெறுக!
    உமது ஆட்சி வருக!
    எங்கள் அன்றாட உணவை
    நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
    எங்களுக்கு எதிராகக் குற்றம்
    செய்வோர் அனைவரையும்
    நாங்கள் மன்னிப்பதால் எங்கள்
    பாவங்களையும் மன்னியும்.
    எங்களைச் சோதனைக்கு
    உட்படுத்தாதேயும்.
    தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்”

    அதைச் சொல்லி முடித்ததும் இயேசு இந்த உவமையையும் சொல்கிறார். தனக்காக செபிக்கும் செபமாக கர்த்தர் கர்ப்பித்த செபத்தைச் சொன்ன இயேசு, பிறருக்காக எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக அந்த உவமையைச் சொல்கிறார்.

    இந்த உவமையும், நிகழ்வும் பல பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றன.

    1. இயேசு செபிப்பதை கவனிக்கும் சீடர்கள் தாங்களும் அதே போல செபிக்க ஆர்வம் கொள்கின்றனர். அதற்காக இயேசுவை அணுகுகின்றனர். செபம் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் செயல்பாடுகளைக் கவனித்து, அதே போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக செபத்தின் தேவையை உணரவேண்டும்.

    2. நள்ளிரவில் வீட்டுக்கு வருகின்ற நண்பரின் “உடனடித் தேவை” என்ன என்பதை சக நண்பர் கண்டு கொள்கிறார். நண்பர் கேட்பதற்கு முன்பாகவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய முயல்கிறார். நாமும் நமது சக நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள், நம்மை அணுகுபவர்கள் இவர்களின் தேவைகளை “அவர்கள் சொல்லாமலேயே” புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்யும் மனநிலையில் நாம் இருக்க வேண்டும்.

    3. தன்னிடம் எதுவும் இல்லாத சூழலில் இறைவனை தேடி ஓடுகிறார் அவர். இறைவன் நம்மிடம் தந்திருப்பவை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே. நம்மிடம் பகிர்தலுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது முதலில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, “உனக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்பது போலித்தனம். எதுவும் இல்லாத சூழலில் நாம் இறைவனையே நாடவேண்டும்.

    4. நாம் ஒன்றுமற்ற நிலையில் இருக்கும் போது நள்ளிரவின் இருளிலும், மிரட்டும் சூழலிலும் இறைவனை தேடிப் போக தயங்காத மனம் வேண்டும். பிறருக்காக நாம் இறைவனை நாடிச் செல்வதை இறைவன் விரும்புகிறார். பிறருக்காக வேண்டுகின்ற செபங்கள் கேட்கப்படும் என்பதை பைபிள் நமக்கு பல இடங்களில் தெளிவாக்குகிறது.

    5. கதவைத் தட்டும் மனம் வேண்டும். தயக்கத்தின் படிகளைத் தாண்டி, ‘சுயத்தை’ அழித்து இறைவனின் கதவைத் தட்டி உதவி தேடும் மனம் ரொம்ப முக்கியம். கதவு அடைக்கப்பட்டிருந்தாலும் அது திறக்கும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

    6. “மூன்று அப்பங்கள் வேண்டும்” என்கிறார் நண்பர். நாம் இறைவனிடம் வேண்டும்போது அந்த சூழலுக்கு, அந்த நபருக்கு என்ன தேவையோ அதை கேட்டுப் பெறுவதே சரியானது. அதிகமாகவோ, குறைவாகவோ கேட்பது சரியானதல்ல. இறைவன் ஆசைகளை நிவர்த்தி செய்பவரல்ல, தேவைகளை நிவர்த்தி செய்கிறவர்.

    7. நண்பருக்காய் இறைவனிடம் வேண்டுவதை தன்மேல் விழும் “கடனாகக்” கேட்கும் மனநிலை உயர்வானது. அது சக நண்பரை தமது பாகமாகப் பார்க்கும் உயரிய மனநிலை. என்னைப் போல அயலானை நேசிக்கும் மனநிலை. அந்த மனநிலையோடு இறைவனிடம் கேட்கவேண்டும். நமக்காகக் கேட்கும் போது எப்படி உருக்கமாக, நெருக்கமாக, ஆழமாக கேட்கிறோமோ அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலாகவே நாம் நண்பர்களுக்காகக் கேட்கவேண்டும்.

    8. தொடர்ந்து கேட்கும் மனநிலை வேண்டும். நண்பரின் நிராகரிப்புக் குரல் கேட்டாலும், அவர் தருவார் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வெற்றி தரும். இறைவனும் பல வேளைகளில் நமக்கான வரங்களை தாமதப்படுத்துவார். அது நமது விசுவாசத்தை பலப்படுத்துவதாகவோ, நாம் சரியான நேரத்தில் கேட்காத காரணத்தாலோ இருக்கலாம். ஆனால் கேட்பது பயனுள்ள விஷயமென இறைவன் கண்டால் அதைத் தராமல் இருப்பதில்லை.

    9. பிறருக்காக அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை வேண்டும். நள்ளிரவு நேரம், இருளான சூழல் என்றாலும் கூட கை விரிக்காமல் நண்பனின் தேவையை நிவர்த்தி செய்ய புறப்படும் மனம் வேண்டும். அவமானங்கள், நிராகரிப்புகளைத் தாண்டி நண்பனுக்காய் நிற்கும் நெஞ்சுரம் வேண்டும்.

    10. இறைவனோடு ஆழமான நட்புறவு கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் சென்று அறிமுகம் செய்து கொண்டு உதவி கேட்பது சரியான வழிமுறை அல்ல. இறைவனோடு ஆழமான நட்பு கொண்டு தினமும் அவர் வழியில் நடக்க வேண்டும். அப்போது தான் நள்ளிரவிலும் கதவைத் தட்டும் அன்னியோன்யம் உருவாகும். போ என்றாலும் கூட விடாப்பிடியாய் தட்டும் உரிமை உருவாகும்.

    இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
    கண்ணீரின் பாதையில் நடந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே, சகோதரியே, இந்தக் கண்ணீரின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. களிப்பான நீரூற்றாய் மாற்ற முடியும்.
    கிறிஸ்துவுக்குள் அன்பான உங்கள் ஒவ்வொருவரையும் இணையற்ற இயேசுவின் நல் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.

    நிலையில்லா இவ்வுலகில் நிம்மதியிழந்து வேதனையோடு ஆறுதலைத் தேடி அநேகர் வாழ்கிற இந்நாட்களில், நம்மை ஆறுதல்படுத்தி அரவணைக்கக் கூடியவர் ஒருவர் உண்டு என்பதைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அன்பான சகோதரனே, சகோதரியே, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அநேக பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு, என்னை யார் தேற்றுவார்? யார் என்னை ஆறுதல் படுத்துவார்? என்று வேதனை யோடு காணப்படுகிறீர்களா?

    நம் அருமை ஆண்டவராகிய இயேசு சொல்கிறார், ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்’ (ஏசா.51:12). இந்த வார்த்தை நம்மை எவ்வளவு சந்தோஷப்படுத்துகிறது.

    எப்படி கர்த்தர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்?

    ஜெபிக்கும்போது ஆறுதல்

    இவ்வுலக மனிதர்களிடம் நாம் நம் கவலைகளைச் சொன்னால், அந்த வேளையில் ஏதோ ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நம்மைத் தேற்றக் கூடும். ஆனால் அந்த ஆறுதல் நிரந்தரமானதல்ல. அதே வேளையில் நாம் ஆண்டவரிடம் போய் அவரிடம் நம் மனவேதனைகளைக் கொட்டினால் நமக்கு நிரந்தரமான ஆறுதல் கிடைப்பது நிச்சயம்.

    வேதத்திலே அன்னாளுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. அவளது உறவுப் பெண்மனி அவளை மிகவும் நிந்தித்து, அவமானப்படுத்தி வேதனைப்படுத்தினாள். அவளுடைய புருஷன் எவ்வளவு தான் அவளை ஆறுதல் படுத்தினாலும் அவளால் ஆறுதலடையவே முடியவில்லை.

    அவள் செய்த ஒரு காரியம் என்ன தெரியுமா? தேவனுடைய ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய சன்னிதியில் தன் இருதயத்தில் இருந்த வேதனையை கொட்டினாள். அவள் நிரந்தரமான ஆறுதலை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.

    பிரியமானவர்களே, வேதனை நம்மைத் தாக்கும்போது, மனிதர்களிடம் ஓடி ஆறுதலைத் தேடாதீர்கள். தேவ சந்நிதியில் உங்கள் இதய பாரத்தை வைத்து விடுங்கள். கர்த்தர் நிச்சயம் உங் களைத் தேற்றி, அரவணைத்து, ஆசீர்வதிப்பார்.

    வேத வசனங்கள் மூலம் ஆறுதல்

    இரண்டாவதாக நம் இருதயம் துக்கத்தால் வேதனைப்படும் போது கர்த்தர் கொடுத்த வேதத்தை நாம் வாசிக்கும் போது, அந்த வேத வசனங்கள் மூலமாக கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார்.

    ‘தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதி யிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’. (ரோமர் 15:4)

    மேற்கண்ட வசனத்தை நாம் வாசித்துப் பார்த்தால் வேத வசனங்களை வாசிக்கும் போது ஆறுதல் உண்டாகிறது என்பது தெளிவாகிறதல்லவா? பிரியமானவர்களே, நாம் நம்முடைய வேதத்தை தியானிக்க, தியானிக்க அந்த வசனங்களினால் நம் தேவன் நம்மோடே பேசி நம்மை ஆறுதல் படுத்துகிறார்.

    என்னுடைய வாழ்க்கையிலும் என் மனதில் வேதனை துக்கம் வாட்டும் போது, நான் வேதத்தை எடுத்து வாசிப்பதுண்டு, அந்நேரங்களில் எல்லாம் நம் அருமை தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களால் என்னை ஆறுதல்படுத்தி என் வேதனைகளை எல்லாம் மாற்றுவார். என்னை ஆறுதல்படுத்தி வருகிற அதே தேவன் உங்களையும் தம் வசனத்தின் மூலம் ஆறுதல்படுத்த வல்லவராயிருக்கிறார்.

    பரிசுத்த ஆவியால் உண்டாகும் ஆறுதல்

    ‘பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்’. (ஏசா.28:11,12)

    பிரியமானவர்களே, வேதனை பாரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையிலே தேவனைத் துதிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஆவியில் நிரம்ப, நிரம்ப பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவார். அளவில்லாத தேவ பிரசன்னம் உங்களை மூடும். ஆவியானவர் உங்கள் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் வேதனைகளை மாற்றுவார். உங்களை அணைத்துக் கொள்ளுவார். ஆனந்த தைலத்தினால் உங்களை அபிஷேகிப்பார்.

    கண்ணீரின் பாதையில் நடந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே, சகோதரியே, இந்தக் கண்ணீரின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. களிப்பான நீரூற்றாய் மாற்ற முடியும். துக்கம் உங்களை வாட்டும்போது மனிதர்களிடம் ஓடாதீர்கள். தேவ சமூகத்தில் உங்கள் கண்ணீரை ஓடவிடுங்கள். ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசி ஜெபிக்கத் தொடங்குங்கள்.

    சகல ஆறுதல்களின் தேவன் தாமே உங்களை ஆறுதல்படுத்துவது உறுதி. கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பான நீரூற்றாய் மாறுவது உறுதி. உங்கள் கண்ணீர் ஆனந்த கண்ணீராய் மாறுவது உறுதி. உங்கள் துக்க நாட்கள் முடிந்து போவது உறுதி.

    சகோதரி. கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    எவரிடம் பாவமில்லை. மனிதர்கள் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.
    இயேசு பிரான் இவ்வுலகில் போதித்த காலத்தில், வரி வாங்குவோரும், பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தார்கள். இதைக் கவனித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இவர் பாவிகளை வரவேற்கிறார்; அவர்களோடு உணவருந்துகிறார். இது எப்படி? என்று தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர்.

    அப்பொழுது அவர் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:

    ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மகன்களில் இளையவர், தன் தந்தையிடம், 'அப்பா! சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்' என்று கேட்டார். இதனால் தந்தை சொத்தைப் பகிர்ந்து அளித்தார். எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு தொலைதூரத்திற்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். அங்கு தாறுமாறாக வாழ்ந்து, வாங்கிச் சென்ற சொத்துகளைப் பாழாக்கினார். எல்லாவற்றையும் செலவு செய்தார்.

    பின்பு அவர் சென்ற நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அவர் வறுமையில் வாடினார். வேறு வழி தெரியவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்ப்பதற்குத் தன் வயலுக்கு அனுப்பினார். அவர் பன்றிகளுக்கு வைக்கப்படும் தவிடுகளைத் தின்று, தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள விரும்பினார். அதை அவருக்குக் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லை. பிறகு அவருக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டது.

    என் தந்தை வீட்டில் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கும். நான் இங்கு பசியால் செத்துக் கொண்டிருக்கிறேனே! நான் உடனே புறப்பட்டு என் தந்தையிடம் சென்று, என்னை கூலியாளாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.

    உடனே தந்தையிடம் சென்றார். தொலைதூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்த தந்தை அவர் மேல் இரக்கம் கொண்டு ஓடிப்போய், ஆரத்தழுவி மகனை முத்தமிட்டார். மகனோ அவரிடம், அப்பா! இறைவனுக்கும் உமக்கும் எதிராகப் பாவம் செய்தேன். நான் இனிமேல் உங்கள் மகனாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்றார்.

    தந்தை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தம் பணியாளரிடம், முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். மகிழ்ந்து விருந்து வைப்போம். ஏனென்றால் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போன மகன் திரும்பவும் கிடைத்துள்ளான் என்றார். மகிழ்ச்சியுடன் அனைவரும் விருந்துண்ண தொடங்கினார்கள்.

    வயலில் இருந்து மூத்த மகன் வீட்டை நெருங்கி வரும்போது ஆடல் பாடல்களைக் கேட்டார். பணியாளர்களில் ஒருவரை அழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று கேட்டார்.

    உம் தம்பி வந்திருக்கிறார். அவர் நம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார் என்றார்.
    கோபம் கொண்ட மூத்த மகன், உள்ளே செல்ல மனம் இல்லாமல், அங்கேயே நின்றார். அவருடைய தந்தை வெளியே வந்து, உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டார்.

    அதற்கு அவர், 'இத்தனை ஆண்டுகளாக, அடிமை போன்று உங்களுக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை என்றுமே மீறியதில்லை. இருப்பினும் என் நண்பர்களோடு நான் மகிழ்ந்து கொண்டாட, ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட, எனக்குத் தந்ததில்லை. ஆனால் உம் சொத்துகளை எல்லாம் அழித்து விட்டு வந்த உம் மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்து விருந்துண்ணுகிறீரே?' என்று கேட்டார்.

    அதற்குத் தந்தையார், மூத்த மகனை நோக்கி, மகனே! நீ எப்போதும் என்னிடம் இருக்கிறாய். என்னுடையது அனைத்தும் உன்னுடையதே! இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். உன் தம்பி இறந்து போனவன் மீண்டும் வந்துள்ளான். காணாமல் போனவன் கிடைத்துள்ளான் என்றார்.
    இயேசு சொன்ன இந்தச் சம்பவத்தைப் படிப்போர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பாவிகளோடு விருந்துண்ணுகிறாரே என்று கேட்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இச்சம்பவத்தைச் சொல்லி விளக்குகிறார். பாவிகள் திருந்த வேண்டும்; திருந்தி தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதைத்தான் இயேசு பிரான், நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தியம்புகிறார். இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றியதே, பாவிகளைத் திருத்தி நல்வழியில் சேர்க்கத்தான்.

    எவரிடம் பாவமில்லை. மனிதர்கள் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.

    இதை நன்கு உணர்ந்து கொண்டால், யாரையும் யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். புனித லூக்கா எழுதிய நற்செய்தியின் உட்கருத்தை உணர்வோம். உணர்ந்து பின்பற்றுவோம்.
    (தொடரும்)

    செம்பை சேவியர்
    அன்பு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள். ஏசுகிறிஸ்து நமது ஆண்டவர், நம் ரட்சகர் அவருக்கு ஏன் தாகம்? எதின் மீது தாகம்? என்று பார்ப்போம்.
    அன்பு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள். இந்த தபசுக்காலத்தில் தவக்கால செய்தியாக ஏசுகிறிஸ்துவின் தாகத்தை தியானிப்போம். ஏசுகிறிஸ்து நமது ஆண்டவர், நம் ரட்சகர் அவருக்கு ஏன் தாகம்? எதின் மீது தாகம்? என்று பார்ப்போம்.

    ஆண்டவரின் தாகம் அவருடைய சரீரத்தில் ஏற்பட்டது என்பதுபோல தோன்றினாலும் அவர் நம்மேல், அவர் படைத்த ஆத்மாக்கள் மேல் அதிகமாக இருந்தது. யோவான் 19:28-ல் தாகமாயிருக்கிறேன் என்றார். அப்பொழுது காடி நிறைந்த பாத்தி ரத்தில் கடற் காளானை தோய்த்து ஈசோப்புத்தண்டில் மாட்டி அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். கசப்பு நிறைந்த காடியை அவருக்கு குடிக்க கொடுத்தார்கள். எவ்வளவு கொடுமை! நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள் என்று போதித்த நீதியின் சுடர் ஏசுவின் தாகத்திற்கு கசப்பு கலந்த காடியா? ஏசு எப்பொழுதும் தேவனோடு உறவாடிக்கொண்டிருந்தார்.

    சங்கீதம் 42:2-ல் என் ஆத்மா தேவன் மேலேயே தாகமாயி ருக்கிறது என்றார். பாவிகளை கண்டபோது அவர் மனதுருகி அவர்களை தம்மிடம் சேர்த்து அவர்கள் பாவங்களை அவர்களை விட்டு துரத்துவதில் தாகமாயிருந்தார். யோவான்:4:4-30 வசனங்களில் சமாரியா என்னும் நாட்டில் சீசார் என்னும் ஊர்ப்பெண் ஒருத்தியிடம் தாகத்துக்குத்தா என்று கேட்டார்.

    யூதர்கள் சமாரியர்களுடன் சம்பந்தங்கலவாத வர்கள் என்ற போதும் அப்பெண்ணிடம் ஏசு பேசுகிறார். அவளைக்குறித்த உண்மைகளை ஏசு சொன்னபோது அவள் அவரை தீர்க்கதரிசி என்றும் கிறிஸ்து என்றும், மேசியா என்றும் அறிந்து தன் ஊரார் அனைவருக்கும் போய்ச்சொல்லி வந்து பாருங்கள் அவர் கிறிஸ்துதானோ? மேசியாவோ? என்கிறாள். அந்த ஊரார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.

    அன்புச்சகோதர, சகோதரிகளே இன்று என் தாகம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? பணம், பதவி, பொருள், வீடு, ஆஸ்தி என உலகத்தைச்சார்ந்து இருக்கிறதா? அல்லது இச்சைகள், உலக சிற்றின்ப மோகங்கள் இப்படி இருக்கிறதா? இன்று மனந்திரும்பி அழிந்து போகிற ஆன்மாக்களைத்தேடி ஏசுவைபோல் தாகம் கொள்வாயா? அவர் தாகம் அநேக ஜனங்களின் பாவம் போக்குவதாயிருந்தது. உன் தாகம் அவருடைய தாகத்தைப்போல் மாறட்டும் என்று வாழ்த்துகிறேன். ஒரேமுறை பிறப்பு இன்னொரு ஜென்மம் இல்லை. எனவே இக்காலத்திலே மனந்திரும்பு. ஏசுவே உன் ரட்சகர் ஆமென்.

    - பாஸ்டர். ஆனந்த்சாத்ராக்.

    கடவுள், அரவணைப்பவராக, இரக்கமே வடிவானவராக உள்ளார். இதனை நம்பி பிறரிடத்திலும் இறைவனின் இரக்கத்தை பதிவு செய்து வாழும் மக்களே இயேசுவின் தாகத்தை தணித்த மக்கள்.
    கடவுள், அரவணைப்பவராக, இரக்கமே வடிவானவராக உள்ளார். இதனை நம்பி பிறரிடத்திலும் இறைவனின் இரக்கத்தை பதிவு செய்து வாழும் மக்களே இயேசுவின் தாகத்தை தணித்த மக்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்தது நல்லவர்களை மீட்பதற்காக அல்ல. மாறாக, பாவிகளை அன்பு செய்து மீட்பதற்காகவே வந்தார்.

    சமாரிய பெண்ணுடனான உரையாடல் வழியாக தான் யூதர்களை மட்டுமல்ல, உலகத்தவர் அனைவரையும் அன்பு செய்யும் ஒப்பற்ற இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, காணாமல் போன ஆட்டினை தேடியலைந்து கண்டு மகிழும் ஆயனாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மத்தேயு 18:12-13) ஆம், இறைவன் பாவிகளை மட்டுமல்ல, பாவத்தையே வெறுப்பவராக உள்ளார்.

    இயேசு தன் மந்தையை, அரவணைப்பை விட்டு தவிக்கும் ஆட்டினை தேடியலைந்து மீட்டெடுத்தார். அவ்வாறு மீட்டெடுத்த ஆட்டினை தண்டிக்காமல் அதனை தன் தோள் மேல் போட்டுக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பிறரையும் தன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள அழைத்தார். ஆம். ஒரு பாவி மனம் திரும்புதலை குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15:7)

    இந்த புரிதல் இன்று நேற்று எழுந்தது இல்லை. மாறாக இறைவனின் அழைப்பிற்கு செவி சாய்த்து தன் ஊர், உறவை விட்டு, நிச்சயமற்ற நிலையில் அழைத்தவரின் மீது நம்பிக்கை கொண்டு அன்று தொடங்கிய ஆபிரகாமின் பயணத்தில் எழுந்தது. இயேசுவின் உயிர்ப்பில் உறுதிகொண்ட நம் விசுவாச பயணம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இறைவனை பற்றிய புரிதல் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

    நம் வானக தந்தையாக, இரக்கத்தின் தேவனாக, நண்பனுக்காக உயிர் தரும் நண்பனாக நம்மிடையே அறிமுகம் செய்து, அந்த இறைவனின் மகனாக தந்தையின் இரக்கத்தை எடுத்து கூறிய தன்னையே கையளித்த இறைவன்தான் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம், வானக தந்தையின் இரக்கத்தின் முகமாக நம்மோடு வாழ்ந்தவர் தான் இயேசு. அவர், இறை தந்தையின் இரக்கத்தை வாழ்ந்து காண்பித்தார். இன்று நம்மையும் இறை இரக்கத்தின் சாட்சியாக வாழ அழைக்கின்றார். இரக்கத்தின் திருமுகமான இயேசுவை போன்று பாவிகளை அல்ல, பாவத்தை வெறுத்து பிறரை ஏற்று அன்பு செய்து வாழ்வோம்.

    அருட்சகோதரர். செபஸ்டின் அருண் சிமியோன், சலேசியன் சபை, சவேரியார் பாளையம் பங்கு.
    ×