என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snow"

    • சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.
    • பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் ஏற்காட்டில் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதும்.

    இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனி மூட்டமும் ஏற்காட்டில் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் தொடர் பனி மூட்டத்தால் சற்று தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    மேலும் ஏற்காட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஏற்காடு பஸ் நிலையத்தில் குடைகள் பிடித்த படி காத்து நின்று பஸ்களில் ஏறி சென்றனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஏற்காட்டில் கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல டேனீஸ்பேட்டை, கரியகோவில், ஆத்தூர், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் இன்று காலை மழை தூறிய படியே இருந்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்த படியே சாலைகளில் சென்றனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 0.8, ஆனைமடுவு 5, ஆத்தூர் 4.4, கரியகோவில் 7, மேட்டூர் 4.6, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45.4 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    • சவுதி அரேபியாவில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கிறது.
    • அரபி கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம்

    சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

    அரபி கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது. 

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து அங்கு கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும்.
    • கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் பனிக் காலம் நிலவும். இந்த சீசனில் கொடைக்கானலுக்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் நிலவுவதால் காஷ்மீரில் இருப்பது போன்று பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும். இது போன்ற சீதோஷ்ணத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.

    இதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனியையும் பொருட்படுத்தாது அனைத்து சுற்றுலா தலங்களிலும் தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வந்தனர்.

    நேற்று இரவு முதல் கொடைக்கானலில் மீண்டும் உறை பனி தொடங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காணப்பட்டது. செடிகள் மீதும் உறை பனி படர்ந்து இருந்ததால் பச்சை நிறம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. உறை பனியால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்து வந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரத்தில் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. வரும் நாட்களில் இது மேலும் 0 டிகிரியாக குறையலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பகல் பொழுதில் வெளியே வர முடியாமல் மதிய நேரத்துக்கு பிறகே வெளியே வருகின்றனர்.

    மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவி எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடும் உறை பனி, பனி மூட்டத்தால் பள்ளிக்கு செல்லும மாணவ-மாணவிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    • பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
    • கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்ததால் குளிரின் தாக்கம் சற்று குறைந்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடாமாடுகின்றனர்.

    இந்த குளிர் காலை 11 மணி வரை நீடிப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிர்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் நேற்று குளிரின் தாக்கம் சற்று அதிகரித்தது. இன்று மேலும் பனிப்பொழிவு அதிகரிப்பால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது.

    இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்திய படியே பொது மக்கள் தூங்கும் நிலை ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் 9 மணி வரை குளிரின் தாக்கம் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கும் நிலையே நீடித்தது.

    • சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது.
    • இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.

    சீனாவில் உள்ள சுற்றுலாதளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.

    சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது. இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.

    ஆனால், அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள் சுமார் 2½ கி.மீ சுமந்து சென்று காப்பாற்றினர். #Pregnantwoman #Snowfall
    ஜம்மு:

    கா‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு கா‌ஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

    இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.

    பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
    காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD
    புதுடெல்லி:

    காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது.

    இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை மேற்கு இமயமலை பகுதிகளான காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீரில் இன்றும், நாளையும் பனிப்பொழிவு மிக கடுமையாக இருக்கும் என்றும் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    துருவப் பகுதியில் இருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் குளிர் காற்று வீசும்.

    டெல்லி, ஒடிசாவில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தற்போது நிலவும் குளிர் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.

    வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது. #Kashmir #Snowfall
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நீடித்து வருகிறது.

    டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகாலையில் பயங்கர குளிர் காற்று வீசுகிறது. இதனால் போக்குவரத்துகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்றும், இன்றும் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்பட்டது.

    இதனால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் பனிக் கட்டியாக மாறி வருகிறது. புகழ்பெற்ற டால்ஏரி முற்றிலும் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.

    அதிகாலையில் குளிர் காற்று வீசுகிறது. வாட்டி வதைக்கும் அந்த குளிர் காற்றை எதிர்கொண்டு செல்ல முடியாததால் பகல் 11 மணி வரை வாகன போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி மிக குறைவான மைனர் 8 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. தற்போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் காஷ்மீருக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கார்கில் பகுதியில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

    குளிர் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு உள்பட உடல்நலக்குறைவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காஷ்மீர் மாநில டாக்டர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது. #Kashmir #Snowfall
    ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, தத்தனூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

     மேலும் திருச்சி-சிதம்பரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையிலும், கும்பகோணம் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும்  கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் விபத்துகளை தவிர்க்க டிரைவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து சென்றனர். 8 மணிஅளவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பனி மெதுவாக விலகி சென்றது.

    இந்த பனிப்பொழிவால் நெற்பயிருக்கோ, பூக்கள் செடிக்கோ பாதிப்பு ஏற்ப டுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  பனிப்பொழிவு காணப்பட்டது.
    கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஓரிரு மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். மழை காலங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி மகசூல் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 மாதங்களாக பெய்தது. இதனால் கோத்தகிரி பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். மழை ஓய்ந்த நிலையில் தற்போது கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளது. நீர்பனியில் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    வருடந்தோறும் செப்டம்பர் இறுதி வாரத்தில் தான் நீர்பனி விழும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாக நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீர்பனியால் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குளிரும் அதிகரித்துள்ளது. அதிகாலையில் குளிரின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. குளிரின் காரணமாக ஸ்வெட்டர், சால்வை மற்றும் ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
    ×