search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunanda Pushkar's death"

    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்த டெல்லி கோர்ட் சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
    புதுடெல்லி:

    மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

    ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.



    இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

    இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

    சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் தன்னிடம் அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் சசி தரூர் முறையிட்டிருந்தார். மேலும் இவ்வழக்கில் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ள சில மின்னணு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சமர் விஷால் மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkardeath
    ×