search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu-election2024"

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

    விழுப்புரம்:

    தமிழகம்-புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி தேர்தல் பரப்புரைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வர உள்ளார். அவர் பேசுகிற பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட வந்திருந்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.என்கிற கட்சி 5, 6 ஆக உடைந்து போய் உள்ளது. இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

    விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    கோவை:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.

    இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த பட்டியலை மத்திய தேர்தல் குழு பரிசீலிக்கும். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    • விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
    • 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.

    மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.

    திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்

    நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.

    மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்

    திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.

    உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.

    இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

    பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.
    • 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.

    இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

    கரூர் தொகுதி ஜோதிமணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.

    திருச்சி தொகுதியை ம.தி.மு.க. விற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.

    தி.மு.க. தரப்பில் இருந்து தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் மேலிட தலைவர்களிடம் இருந்து இசைவு வராததால் செல்வப்பெருந்தகை பேச்சு வார்த்தைக்கு போகாமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நாளை மும்பையில் நடக்கும் காங்கிரஸ் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் செல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திங்கட் கிழமை இறுதி செய்யப்பட உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்து இடுகிறார்.

    கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2 தொகுதிகள் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது.

    எனவே 18-ந்தேதி காங்கிரஸ், ம.தி.மு.க.விற்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

    ×