search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tricy"

    கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிபிறக்கும் என்று திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #CauveryIssue #KarnatakaElection2018
    திருச்சி:

    திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் குறிப்பாக காவிரி படுகை பகுதி விவசாயிகளின் உரிமைகளை மீட்க பா.ஜ.க. சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நாளை முதல் 24 நாட்கள், 24 சட்டமன்ற தொகுதிகளில் சைக்கிள் யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த யாத்திரை தமிழகத்தில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் கட்சிகளின் சுய ரூபத்தை தோலுரிக்கும். அதே நேரத்தில் உண்மையான உரிமையை மீட்கும் யாத்திரையாகவும் இருக்கும்.

    காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு வேடிக்கை பார்க்கும் குழுவாக இருக்கக்கூடாது. செயல்படுத்தும் குழுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மத்திய அரசும், இதைத்தான் செயல்படுத்துகிறது.

    அலங்கார வார்த்தைகளாக இல்லாமல் அவசியமானதாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இப்போது அமைக்கப்பட்டுள்ள குழுவில் நான்கு மாநில பிரதிநிதிகள் உள்ளனர். அதற்கு இணையாக மத்திய அரசு பிரதிநிதிகளும் உள்ளனர்.

    இருப்பினும் இந்த குழு எடுக்கும் முடிவை ஒரு வேளை கர்நாடகா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? எனவே நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும் இதில் அதிகாரம் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடவேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்தால் ஏற்கமுடியாது. இப்போதுள்ள மத்திய மோடி அரசு இதில் உறுதியாக இருக்கும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என்றால் அதற்கு வாரியம் என்றும், ஆணையம் என்றும், குழு என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


    காவிரி பிரச்சனை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை அரவணைக்கும் கட்சிகளை தேடிச்சென்று அழைப்பு விடுத்துள்ளார். காவிரி பிரச்சனை தொடர்பாக யார் கூட்டம் நடத்தினாலும் அதில் பேசப்படும் வி‌ஷயம் முக்கியம். கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை பார்த்து பா.ஜனதா பங்கேற்பது குறித்து அழைப்பு விடுத்தால் முடிவு செய்யும்.

    தமிழகத்தில் விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 78 இடங்களில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க பாலம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இந்தியாவில் உள்ள 50 லட்சம் கி.மீ. சாலைகளில் ஒரு லட்சம் கி.மீ. சாலைகள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன. இது வெறும் 2 சதவீதம் தான். எனவே தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறோம்.

    அதேபோன்று திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ரிங் ரோடு திட்டங்களையம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் ஒரு சிலர்எதற்கெடுத்தாலும் எந்த திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது என கூறுகிறார்கள்.

    தமிழக பா.ஜ.க.வில் பலர் கருத்து கூறுவதால் பிரச்சனை என்று கூறுவதை ஏற்கமுடியாது. பிரச்சனையில்லாத கட்சி எதுவும் உள்ளதா? காங்கிரசில் கூட 4 செயல் தலைவர்களை நியமிக்க போவதாக கூறுகிறார்கள்.

    திருச்சியில் என்னை நாளைய முதல்வரே என்று வரவேற்று பேனர்கள் வைத்துள்ளதால் நான் நாளைய முதல்வர் என்று அர்த்தமில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது தான் எங்கள் நோக்கம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்.

    மலேசியாவில் அந்நாட்டு பிரதமர் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரியை ரத்து செய்துள்ளார் என்பதற்காக இந்தியாவில் ரத்து செய்யப்படுமா? என்று கேட்பது சரியல்ல. மலேசியா ஒரு சிறிய நாடு. நாம் வளரும் நாடு. இந்தியாவில் இன்னும் ஏராளமான சாலைகள் தேவைப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

    எனவே மலேசியாவை இந்தியாவோடு ஒப்பிடக்கூடாது. பா.ஜ.க. அரசு விளம்பரத்திற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியதற்கு எதிர்க்கட்சிகள் குறை கூறியிருப்பது நியாயமல்ல. அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல, விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

    கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்திற்கு இன்று மாலையே காவிரி தண்ணீரை கொண்டு வருமா? என்பதை உடனே கூற முடியாது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிபிறக்கும். அதே போன்று அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரூ.150 கோடி பணம் கைப்பற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்கவேண்டும். கர்நாடக தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியானதாக கூறுவதை ஏற்கமுடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு செய்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #CauveryIssue #KarnatakaElection2018
    ×