search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victory of regional front"

    சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறினர். #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.

    இதற்காக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    அவர் தனது சமூக ஊடக பதிவில், “ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவை வாழ்த்துகிறேன். தேவே கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். இது பிராந்திய முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று குறிப்பட்டு உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்பட்டது. கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. எடியூரப்பாவின் பதவி விலகல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். இப்போது இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பு முறையை பா.ஜனதா சீரழித்துவிட்டது. அதே முயற்சியை கர்நாடகாவிலும் கையாண்டது. முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பா.ஜனதாவின் திட்டம் நிறைவேறி இருந்தால் அடுத்து ஆந்திராவைத்தான் குறி வைத்திருப்பார்கள்” என்றும் சாடினார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், “கர்நாடகாவில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜனதா தோல்வியைத் தழுவி உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அதிகார வெறி இதில் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் இதிலிருந்து பா.ஜனதா எந்த பாடத்தையாவது கற்றுக் கொள்ளுமா?... ”என்று கூறி உள்ளார்.

    எடியூரப்பாவின் பதவி விலகல் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அக்கட்சிக்கு இப்போதுதான் சரிவு தொடங்கி இருக்கிறது. ஒருங்கிணைந்து நின்றால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் கர்நாடக அரசியல் பாடம் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    ×