search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பழனி வரலாறு-சுரங்கப்பாதைக்குள் போகர்
    X

    பழனி வரலாறு-சுரங்கப்பாதைக்குள் போகர்

    • இப்பவும் அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.
    • அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது. பழனி மலையைச் சிவகிரி என்றும் இடும்பன் மலையைச் சக்தி கிரி என்றும் அழைப்பர்.

    தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.

    "பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டனர்.

    இதன் காரணமாகச் சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.

    அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?" என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட பழம் நீ என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

    பழனி மலை பற்றிய புராண வரலாறு ஒன்றும் உண்டு.

    ஒரு சமயம் கையிலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.

    இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.

    தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பம் கொண்டு சென்றான்.

    இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பம் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.

    முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.

    மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.

    இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார். பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.

    இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான். குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.

    முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான். தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.

    உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.

    அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும் இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோவிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவலச் சற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம். இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்ற உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை.

    இப்பவும் அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார். அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×