மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆடி மாத ராசிபலன்

Published On 2024-07-17 03:05 GMT   |   Update On 2024-07-17 03:07 GMT

உதவும் குணத்தால் பிறரின் நன்மதிப்பை பெறும் மகர ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியை பார்க்கிறார். அதே நேரம் ராசிநாதன் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். தடைகளும், தடுமாற்றமும் வந்துசேரும். என்றாலும் குரு பார்வையால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். சுப விரயங்கள் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இம்மாதத்தில் முடிவடையும். உத்தியோகத்தில் கேட்ட மாறுதல்கள் கிடைக்கலாம்.

குரு - செவ்வாய் சேர்க்கை

மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு - செவ்வாய் சேர்க்கை நன்மைதான் என்றாலும், குரு விரயாதிபதியாக இருப்பதால் விரயங்கள் அதிகமாகத்தான் இருக்கும். வீடு, இடம் வாங்குவதற்காகவும், வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்காகவும் செலவிடுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வரலாம். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் பாகப்பிரிவினைக்கு சம்மதிப்பார்கள்.

புதன்-வக்ரம்

கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம்தான். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். கூடுதல் பொறுப்பும், அதிக சம்பளமும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். 'ரண சிகிச்சை செய்ய வேண்டும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப் பொழுது சாதாரண சிகிச்சையிலேயே நோயை குணமாக்கிவிடுவர். அதே நேரம் புதன் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாகவும் விளங்குவதால், ஒருசில சமயங்களில் மனக்குழப்பத்தால் அவதிப்படுவீர்கள்.

சிம்ம - சுக்ரன்

ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகும். அவர்களை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களால் சில விரயங்கள் ஏற்படும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்பு களுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கை அமையும். இறை வழிபாடும், தன்னம்பிக்கையும் தான் இக்காலத்தில் கைகொடுக்கும். தொழிலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்க நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்கள், சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வது நல்லது. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பெண்கள், முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. கடன் சுமை குறையும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 17, 18, 24, 25, 28, 29, ஆகஸ்டு: 8, 9, 13, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News