மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆனி மாத ராசிபலன்

Published On 2024-06-13 02:53 GMT   |   Update On 2024-06-13 02:54 GMT

வரவை அறிந்து செலவு செய்ய வேண்டுமென்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் மாதத் தொடக்கத்தில் வக்ர கதியிலும் இயங்கப் போகிறார். எனவே இம் மாதம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரெனப் பிரச்சினைகள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்குப் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்குக் கூட பிரச்சினைகள் வரலாம். பொறுமையும், நிதானமும் அதிகம் தேவைப்படும் மாதம் இது.

சனி வக்ரம்

ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நிலையில் அடிக்கடி தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினை அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றம் மனக் கலக்கத்தை உருவாக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். உறவினர் பகையும், உடன்பிறந்தோர் பகையும் உருவாகும் நேரம் இது. சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். மனக்குழப்பம் அகலவும், தடைகள் விலகவும் சனிக் கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.

கடக - புதன்

ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் நன்மைகள் ஏற்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோக முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான 6-ம் இடத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், கடன்சுமை குறைய வழிபிறக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கடக - சுக்ரன்

ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ல் சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். மன அமைதிக் குறைவு ஏற்படும். எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்காமல் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம்.

ரிஷப - செவ்வாய்

ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு பொன்னான நேரமாகும். நினைத்தது நிறைவேறும் விதத்தில் 'குரு மங்கள யோகம்' ஏற் படுகிறது. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். கடன்சுமை பாதிக்குமேல் குறையும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், ஆதாயம் குறைவாகவே இருக்கும். மாணவ - மாணவிகள் அக்கறையோடு படித்தால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு தொழிலில் குறுக்கீடுகளும், வருமானக் குறைவும் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூன்: 15, 16, 19, 20, 27, 28, ஜூலை: 12, 13, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News