ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா 2-ந்தேதி நடக்கிறது

Published On 2019-07-30 06:02 GMT   |   Update On 2019-07-30 06:02 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த பூச்சொரிதல் விழாவையொட்டி 1-ந் தேதி (வியாழக் கிழமை) தஞ்சை பெரிய கோவிலில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் வேத மந்திர கோஷங்கள் முழங்க மங்கள இசையுடன் புறப்படுகிறது.

இந்த ரதங்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் முன்னிலையில் போலீஸ் ஐ.ஜி.ஸ்ரீதர், தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த ரதங்கள் தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடைகிறது. 2-ந் தேதி காலை கோவிலில் தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மூலஸ்தானத்தை அடைகிறது.

பின்னர் அம்பாளுக்கு பல்வேறு நறுமண பூக்களைக்கொண்டு பூச்சொரிதல் விழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் ஸ்ரீ சுக்ரவார வழிபாட்டு குழுவினர், அன்னதான அறக்கட்டளை குழுவினர் செய்து வருகிறார்கள்.

Similar News