வழிபாடு

திருவல்லிக்கேணி ஸ்ரீ ரங்கநாதருக்கு இன்று முதல் 3 நாட்கள் வசந்த உற்சவம்

Published On 2024-06-27 02:19 GMT   |   Update On 2024-06-27 02:19 GMT
  • ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
  • மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

"இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

இன்பன், நற்புவி தனக்கு இறைவன்

தன்துணை ஆயர் பாவை நப்பின்னை

தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்

வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி

வாயுரை தூது சென்று இயங்கும்

என்துணை எந்தை தந்தை தம்மானை''

திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம்.

என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.

Tags:    

Similar News