திருச்செந்தூர் கோவிலில் இன்று மாலை சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
- 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் நடைபெற்று அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை. 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
இதற்கிடையே மாசித்திருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கள்கிழமை) தேரோட்டம் நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது.
அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம் அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.
12-ம் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.