வழிபாடு

பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

Published On 2023-11-17 03:43 GMT   |   Update On 2023-11-17 03:43 GMT
  • சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
  • 35 பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.

திருமலை:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை நடந்த சூரிய பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த சந்திர பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காலையில் நடந்த சூரிய பிரபை, இரவு நடந்த சந்திர பிரபை வாகனச் சேவைகளுக்கு முன்னால் கலாசாரக் குழுவினர் நடனம் மற்றும் சங்கீர்த்தனங்களை வழங்கி பக்தர்களை கவர்ந்தனர். அதில் சூரியகாந்தி பூக்கள் போல வேடமிட்டும், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் துணைவியார்களுடன் சூரிய நாராயணமூர்த்தி எழுந்தருளி இருப்பதுபோல் வேடமிட்ட ராஜமுந்திரியைச் சேர்ந்த ௩௫ பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.

அதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், அன்னமாச்சாரியார் கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரிணி பகுதியில் நடந்த பக்தி இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்கள், பக்தர்களை கவர்ந்தன.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

Similar News