வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-02-25 00:13 GMT   |   Update On 2023-02-25 07:17 GMT
  • இந்த விழா இன்று தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
  • தேரோட்டம் மார்ச் 6-ம்தேதி நடக்கிறது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது.

இரவு 7மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவனுடன் தந்தப் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலாவந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

2-ம் திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

3-ம் திருவிழாவான 27-ந்தேதி மாலை 6.30மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

4-ம் திருவிழா 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

5-ம் திருவிழா வருகிற 1-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும் அம்பாளும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

6-ம் திருவிழா 2-ந்தேதி இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

7-ம் திருவிழாவான 3-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

8-ம் திருவிழாவான 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலாவும், 11.30மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 5-ந்தேதி இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ந்தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வருதல், இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார், ஏரல் சேர்மன் சாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், பழக்கடை திருப்பதி திருவாடுதுறை ஆதினம் திருச்சிற்றம்பழம் தம்பிரான் சுவாமிகள், இந்து முன்னணி மாநில மாநில துணைதலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News