வழிபாடு

அழகர்மலை நூபுர கங்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2022-11-18 06:58 GMT   |   Update On 2022-11-18 06:58 GMT
  • நூபுர கங்கை தீர்த்தம் பழமையும் பெருமையும் நிறைந்ததாகும்.
  • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

பிரசித்தி பெற்ற அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தம் வற்றாத நீரூற்றாக எப்போதும் வழிந்து கொண்டிருக்கும் பழமையும் பெருமையும் நிறைந்ததாகும். இங்கு நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கியதையொட்டி அதிகாலையில் இருந்து மாலைவரை ஏராளமான பக்தர்கள் வந்திருந்து புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

தொடர்ந்து முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில், அங்கு நீராடி வந்த பக்தர்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வித்தக விநாயகர், வேல்சன்னதியிலும், சாமி கும்பிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேலும் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில்களிலும் பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகம் முழுவதும் முருகன், ஐயப்பன் கோவிலுக்கு மாலைகள் அணிந்த பக்தர்கள், காவி, மஞ்சள், பச்சை மற்றும் கருப்பு உடைகளுடன் ஆங்காங்கே குவிந்து காணப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் மாலைகள் அணிந்து விரதம் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறப்பட்டது.மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்பட வெளி மாவட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி அழகர்கோவில் முழுவதும் காலையில் இருந்து மாலைவரை கூட்டம் காணப்பட்டது.

Tags:    

Similar News