வழிபாடு

நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-01-12 05:58 GMT   |   Update On 2023-01-12 05:58 GMT
  • நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர் திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது.
  • இன்று இரவு இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங் கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதி பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான கடந்த 8-ந்தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ம் நாளான நேற்று நம்பெருமாள் கோவிலில் உள்ள சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம் மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம் மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படுமாறு சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர்.

பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம் மமாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.

இதையடுத்து நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்தாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர் திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் காலை 8 மணி முதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை (13-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News