வழிபாடு

ஸ்ரீரங்கத்தில் தெப்ப உற்சவம் கண்டருளிய நம்பெருமாள்: இன்று பந்தக்காட்சி நடக்கிறது

Published On 2023-03-03 05:32 GMT   |   Update On 2023-03-03 05:32 GMT
  • பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
  • இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர், இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளி மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

9-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News