திருப்பதி ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் அதிகாரி நேரில் ஆய்வு
- 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
- இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று காலை கோவிலின் நான்கு மாடவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஏற்பாடு செய்யப்படும் கேலரிகளில் பக்தர்கள் உள்ளே செல்லும் பாதைகள், வெளியேறும் பாதைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.
அக்டோபர் மாதம் 1-ந்தேதி நடக்கும் கருட சேவை மற்றும் அனைத்து வகையான வாகனச் சேவைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழாவை தனிமையில் நடத்தினோம்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவையொட்டி நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவையை காண வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை, மாவட்ட கலெக்டர், போலீசார், பொறியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நான்கு மாட வீதிகள் மற்றும் கேலரிகளில் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் திருமலைக்கு வர வாய்ப்புள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.