திருவண்ணாமலை கிரிவலப்பாதை அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க சிறப்பு பூஜை
- கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்டலிங்க கோவில்களில் வழிபாடு செய்வார்கள்.
- இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மலை சுற்றும் பாதையில் இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்க கோவில்களும் மற்றும் சூரியன், சந்திர லிங்கம் கோவில்களும் உள்ளன.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் அந்த கோவில்களில் வழிபாடு செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதைதொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் சாமி சன்னதியை சுற்றி வந்தனர்.
பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பணியை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து அஷ்ட லிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற உள்ளது.