வழிபாடு

திருவிழாவில் பன்றியை பூசாரி வதம் செய்யும் காட்சியை படத்தில் காணலாம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் வேட்டைக்காரசாமி கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-05-18 08:01 GMT   |   Update On 2023-05-18 08:01 GMT
  • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
  • பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் ஸ்ரீ வேட்ைடக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னார், சங்கர், தங்காள், செல்லாண்டியம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பொன்னர் சங்கர் தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேள தாளம் முழுங்க பறை சாற்றி வருதல், தங்காள் செல்லாண்டியம் மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான கிடாய்கள் வெட்டப்பட்டன.

இதையடுத்து சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News