அழகுக் குறிப்புகள்
null

பேன் தொல்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க!

Published On 2024-08-02 09:31 GMT   |   Update On 2024-08-03 05:06 GMT
  • பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது வளரக்கூடியவை.
  • பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

* பேன்கள் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் சிறகில்லாத ஆறுகால் பூச்சிகள்.

* மனிதரின் தலை, உடல், மேகனம் (பாலுறுப்பில் ரோமங்கள் வளரும் இடம்) ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம்.

* தலையில் வசிக்கும் பேனும், உடற்பேனும் ஒன்றுபோல இருக்கின்றன. ஆனால் மேகனப்பேன் சிறியது.

* இவற்றின் கால்களில் உள்ள உகிர்களால் இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. இதனால் பேன்கள் தலை மயிர்களையும், உடைகளின் துணிகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன.

* பேன்களின் உறிஞ்சு குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது.

* தலையிலிருக்கும் பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது செழித்தோங்கி வளரக்கூடியவை.

* தட்டையாகவும், வெண்பழுப்பு நிறமுள்ள தலைப் பேன்கள் தோலைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சும். அப்போது ஒரு நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் கடித்த இடத்தில் ரத்தம் உறையாத படியும் எரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்கும். அவ்விடத்தில் சிவந்து நீர்க்கசிவு ஏற்பட்டு சீழ்பிடித்து கழுத்தின் பிற்பகுதியில் நெறிகட்டும். உடலின் மேற்பகுதியில் காணாக்கடியும் உண்டாகும்.

* பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

* பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை.

* ஒரு மாதத்திற்கு 300 முதல் 1000, 2000 என முட்டைகளை இடுகின்றது.

* பேனின் முட்டையே ஈரு என்று சொல்லப்படும்.

* முட்டைகளை தலைமயிரில் ஒட்ட வைத்து விடுகின்றன.

* எட்டு தினங்களுக்குப் பிறகு குஞ்சு உண்டாகும். இது மறு எட்டு தினத்திற்குள் வளர்ந்து விடும்.

* பேன் முட்டைகள் முக்கியமாக காதின் பின் பக்கம், கழுத்தின் பின்பக்கம் அதிகமாக காணப்படுகிறது

* பேன்கள் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கின்றது. 15 முதல் 20 சதவிகிதம் பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பாதிக்கின்றது.

* தோலில் உள்ள குருதியை உறிஞ்சி வாழும்.

* இவை மனிதனின் உடைகளின் மடிப்புகளில் வசிப்பதுடன் அங்கேயே தங்கள் முட்டைகளை வைத்துவிடுகின்றன.

* முட்டைகளில் இருந்து வரும் லார்வாக்கள் முதிர்ந்த தலைப் பேன்களைப் போல் இருக்கின்றன.

* வயதானவர்களிடம், கும்பலாகக் கூடி வசிக்கின்றவர்களிடமும், நீண்ட நாட்களாக உடை மாற்றாதவர்களிடமும், அதிக உடைகளை அணிகின்ற குளிர் நாட்டு வாசிகளிடமும், ராணுவத்தினரிடமும் அதிகம் காணப்படும்.

* உடல் முற்றும் அல்லது சிறப்பாகத் தோள் பட்டை, மார்பு, பிட்டம் முதலிய இடங்களிலும் அரிப்பு ஏற்படும்.

* சொறிந்த இடங்களில் நகக்காயங்களும், ரத்தக் கசிவும், பக்கு கட்டுதலும் ஏற்படும். மேகனப்பேன் அல்லது அடிவயிற்றுப்பேன்:

* மேகனத்தில் இருக்கும் சுருண்ட ரோமங்களிடையே காணப்படும்.

* இப்பேன்கள் ரோமம் உள்ள கண் இமைகளிலும் அக்குள் ரோமங்களிலும், நெஞ்சு முடிகளிலும் பரவும்.

* இவை ஒரு நாளைக்கு 10 செமீ அளவு ஊர்ந்துசெல்லும். இதனுடைய எடையை காட்டிலும் பலமடங்கு ரத்தத்தை உறிஞ்சக்கூடியது,

* இவை உடலுறவின் மூலம் ஆணுக்கும் பரவி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை வெகு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியது.

* மேகனத்தில் அரிப்பு, சொறிவதால் புண்கள் உண்டாகும்.

* அடிவயிறு, தொடை, நெஞ்சு, கைகளில் கரு நிறமுள்ள சிறு தடிப்புகள் ஏற்படும்.

பேன்கள் பரவும் விதம்:

* தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றும்.

* குழந்தைகளுக்கு ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு தங்களுடைய பொருட்களை பகிர்வதால் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

* மாணவியர் விடுதிகளிலும், ஒருவருடைய சீப்பினை மற்றொருவர் எடுத்து உபயோகிக்கும் பொழுதும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சீப்பினை பயன்படுத்தும் பொழுதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பேன் பரவுகிறது.

* மேலும் பேன் உள்ளவர் பயன்படுத்திய ஆடை மூலமாகவும், தலையணை உறை, போர்வை ஆகியவற்றின் மூலமாகவும் பரவுகிறது.

* நீண்ட தலைமுடி, சுத்தக்குறைவினாலும் பேன் பரவுகின்றது.

* முக்கியமாக உடல் மற்றும் மேகன பகுதியில் வரும் பேன்கள் ஒழுங்கான சுகாதார முறைகளை பின்பற்றாமல் இருப்பதால் தோன்றும்.

மருத்துவம்:

* குழந்தைகளுக்கு பேன்கள் பற்றிய ஒரு அறிவையும் பேன் எப்படி பரவுகிறது என்பதனையும், பேன்களால் ஏற்பட கூடிய பிரச்சனைகளை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

* பேன்களை நீக்கும் பொழுது ஆண்பேன், பெண்பேன், பேன் முட்டை முதலிய அனைத்தையும் முற்றிலுமாக நீக்க வேண்டும்.

* உடலைச் சுத்தமாக வைத்திருப்பது போல துணிகளையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பேன்கள் குறையும்.

* ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பேன் தொற்றுவதைத் தவிர்க்க தலையணை உறைகள், போர்வைகள், ஆடைகள் ஆகியவற்றை கொதிக்கும் வெந்நீரில் இட்டு உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.

* தலைப்பேனை ஒழிக்க மொட்டையடித்து ரோமத்தை அறவே நீக்குதல் வேண்டும். இல்லையேல் முடியை ஒட்ட வெட்டிவிடுதல் வேண்டும். அதேபோல் மேகனப்பேனை ஒழித்திட மேகன பாகத்திலுள்ள ரோமத்தை அகற்ற வேண்டும்.

* குடும்பத்தில் அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அந்த சீப்புகளை அடிக்கடி கழுவி அழுக்குகளை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

புறமருந்து:

* தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ தலையில் உள்ள பேன்கள் நீங்கும்.

* தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் வேப்பிலைச் சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிக்க பேன் நீங்கும்.

* வேப்பம்பூவினை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தினம் பயன்படுத்த பேன்கள் வருவது குறையும்.

* மரத்தினால் ஆன பேன் சீப்புகளைக் கொண்டு அடிக்கடி தலையினை சீவி தலையில் உள்ள பேன்களை நீக்க வேண்டும்.

* தேங்காய் எண்ணையில் ஒரு டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணெய் கலந்து தலை முழுவதும் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து குளிக்க பேன் நீங்கும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்

* கிராம்பு பொடி செய்து வேப்ப எண்ணைய்யில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிக்க பேன்கள் நீங்கும். வாரத்திற்கு இருமுறை செய்யலாம்.

* துளசி மற்றும் வேப்பிலை இரண்டையும் தனித் தனியாகக் காயவைத்து, பொடி செய்து இவற்றை சமமான அளவுகளில், எடுத்து, அதைக் கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் கலக்கி தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சுத்தமாக அலசிவிடவும்.

* நன்றாகப் பொடி செய்த காக்கை கொல்லிப் பருப்பை நீர்விட்டு அரைத்துத் தலையில் தேய்க்கப் பேன்கள் சாகும்.

* துளசியைத் தலையணைக்கு அடியில் வைத்தும் தூங்கலாம். ஆனால், இதில் பலன் கிடைப்பதற்குக் கொஞ்சம் காலம் ஆகும்.

* தேவையான அளவு கடுகு எண்ணைய்யை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு, சீயக்காய்த்தூள் போட்டு தலைக்குக் குளிக்க வைக்க பேன் தொல்லை நீங்கும்.

* பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதைத் தேங்காய் எண்ணைய்யுடன் கலந்து தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசிவிடவும்.

* ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலைகளை எடுத்து, மிக்சியில் போட்டு பேஸ்ட்போல அரைத்து, இதைத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க பேன்கள் சாகும்.

* தேயிலை எண்ணையை தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளிக்க பேன் நீங்கும்.

Tags:    

Similar News