பெண்கள் உலகம்

தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லையா? இதை செய்யுங்கள்....

Published On 2024-06-30 11:59 GMT   |   Update On 2024-06-30 11:59 GMT
  • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
  • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

Tags:    

Similar News