செய்திகள்

இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும் ஜாவா மோட்டார்சைக்கிள்

Published On 2018-10-28 12:01 GMT   |   Update On 2018-10-28 12:01 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. #jawamotorcycles



இந்தியாவில் 1970-களின் பிற்பாதியில் மோட்டார் சந்தையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளாக இருந்தவை என்பீல்டு நிறுவனத்தின் புல்லட், மற்றொன்று ஜாவா. புல்லட் அதிக எடையோடு இருந்ததால் கொஞ்சம் வலிமை உள்ளவர்கள் மட்டுமே அதை வாங்கி பயன்படுத்தினர். தட்டினால் சீறிப் பாயும், மெல்லியதான தோற்றத்துடன் இருந்தது ஜாவா மாடல்கள் தான். 

இதனாலேயே இது நடுத்தர பிரிவினரின் ஏகோபித்த வாகனமாக இருந்தது. புல்லட் சத்தம் டப்..டப்..டப்.. என ஒரே சீராக இருக்கும். ஆனால் ஜாவா மோட்டார் சைக்கிளோ இரட்டை சைலன்ஸருடன் விர்ரென்ற சத்தத்துடன் சீறிப்பாயும். ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது, அதன் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

இப்போது மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் 15-ம் தேதி ஜாவா மோட்டார் சைக்கிளை மீண்டும் களம் இறக்கப் போவதாக அறிவித்துள்ளது.



புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் 293 சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் இது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது. புதிய ஜாவா மாடலில் லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக 27 பி.ஹெச்.பி. திறன் 28 என்.எம். டார்கியூ செயல்திறன் வெளிப்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்படுகிறது. 

இதில் பியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட உள்ளது. இது ‘பாரத்-6’ புகை விதிகளுக்குப் பொருந்தும் வகையிலான மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்டதாகும். புதிய மோட்டார்சைக்கிளின் 293சிசி என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. அந்தக் கால ஜாவா மோட்டார் சைக்கிளில் கிக்கர் மற்றும் கியர் சேஞ்ச் லீவர் எல்லாமே ஒன்றுதான். புதிய வடிவமைப்பில் இது எத்தகைய மாற்றம் கொண்டிருக்கிறது என்பது விற்பனைக்கு வந்தால்தான் தெரியும். 

மேலும், புதிய மாடலில் செல்ப் ஸ்டார்ட்டர் வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இரட்டை சைலன்ஸருடன் இது வெளி வர உள்ளது ஜாவா பிரியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும். இதன் விலையும் நவம்பர் 15-ம் தேதி அறிவிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
Tags:    

Similar News