உள்ளூர் செய்திகள்

உஷார்... போலி வங்கி கணக்கு தொடங்கி ஏமாற்ற முயற்சி: சென்னையில் அரங்கேறும் புது வகை மோசடி

Published On 2024-09-20 06:00 GMT   |   Update On 2024-09-20 06:00 GMT
  • ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.
  • போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை:

ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு ஆன்லைன் மோசடிகளும் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.

உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. "நாங்கள் சொல்வது போன்று கேட்காவிட்டால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும்" என்று எச்சரிக்கும் மோசடி பேர் வழிகள் தங்களை சைபர் கிரைம் போலீசார் என்று மிரட்டி அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுவது ஒரு பக்கம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

இதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீசார் பல்வேறு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருப்பினும் ஆன்லைன் மோசடி நபர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை நாடு முழுவதுமே வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடிக் கும்பல் போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.


அந்த வகையில் தமிழக வாலிபர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி ஒன்றை வெளிநாட்டு கும்பல் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக இந்த மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

திருவொற்றியூர், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும், சென்னை மாநகரிலும் இந்த மோசடி அரங்கேறி இருக்கிறது.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மூளைச் சலவை செய்து போலியாக வங்கிக் கணக்கை தொடங்க செய்யும் மோசடிக் கும்பலின் ஏஜெண்டுகள் இதற்காக ரூ.20 ஆயிரம் வரையில் பணம் கொடுத்து ஆசை காட்டுகிறார்கள்.

இப்படி தொடங்கப்படும் போலி கணக்குகளுக்காக போலியான கம்பெனி முகவரியுடன் கூடிய அலுவலகங்களையும் தயார் செய்து மோசடி பேர் வழிகள் ஆட்களை பிடித்து வருகிறார்கள்.

இந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட பின்னர் அதில் லட்சக்கணக்கில் மோசடி பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் மோசடிக் கும்பல் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறது.

இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டது உள்ளூர் வாலிபர்களுக்கு தெரிய வருகிறது. அவர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் மட்டும் 250 வழக்குகள் பதிவாகி உள்ளன.

புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. எனவே புதிய கணக்கு தொடங்குங்கள் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று யாராவது நாடினால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யென்றால் நீங்கள் சிக்கலில் மாட்டி சிறை செல்ல நேரிடும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News