உள்ளூர் செய்திகள் (District)

பாலக்கோடு அருகே 6 கிலோ கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2024-08-25 07:06 GMT   |   Update On 2024-08-25 07:06 GMT
  • போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
  • போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீசார் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தருமபுரி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடித்து போலீஸ் நிலைய ஆய்வாளர் கலையரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, எஸ் எஸ் ஐ முருகன், தலைமை போலீசார் கபில்தேவ், பாரதி, சிவகுரு, விஜயகுமார், உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட் பின்புறம் சென்று சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கெட்டுகொட்டாய் பகுதியில் கஞ்சா இருக்கும் இடம் தெரிய வரவே போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்ததில் வீட்டிற்கு பின்புறம் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் (25) என்பதும் மற்றும் பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி கடத்தி வரப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சில்லரையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் நேற்று முன்தினம் அரூர் அரசு மருத்துவமனை பகுதியில் கஞ்சா பதுக்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் கஞ்சா கடத்தல் செய்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News