ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வரதட்சணை வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் வருண்குமார் என்பவருக்கு எதிராக பிரிதர்ஷினி என்ற இளம் பெண், போலீசில் வரதட்சணை புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்த வருண்குமார், ஐ.பி.எஸ். அதிகாரியானதும் திருமணம் செய்ய பெரும் தொகையை வரதட்சணையாக கேட்பதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து, வரதட்சணை தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வருண்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர், வருண்குமார் மீதான வரதட்சணை வழக்கை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தார். #HighCourt