உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உறவை துண்டிக்குமாறு காங்கிரசில் `திடீர்' போர்க்கொடி: மூத்த தலைவர்கள் அதிர்ச்சி

Published On 2024-09-20 06:32 GMT   |   Update On 2024-09-20 06:32 GMT
  • மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.
  • காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி.

சென்னை:

தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மேல் மட்டத்தில் தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலும் கீழ் மட்டத்தில் அந்த அளவு ஒருங்கிணைப்பு இல்லை என்பது தேர்தல் கால கட்டங்களில் வெளிப்படும்.

அந்த வகையில் இப்போது அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது.

காலையில் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. மாலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் நிலை மற்றும் மக்கள் மனநிலை பற்றி பேசும்படி மாவட்ட தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது பல மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே உறவு சரியில்லை. காங்கிரசாரை மதிப்பது கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார்கள்.

கட்சி கீழ் மட்டத்தில் இருந்து வளர உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம். உள்ளாட்சி தேர்தலில் கூடுதலான இடங்களை தலைவர்கள் கேட்டுப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தகுதி, செல்வாக்குக்கு ஏற்ப போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றார்கள்.

நெல்லை மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் பேசும் போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் 4½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்தது தவறு. இதனால் தி.மு.க.வுக்கு அனுசரணையாக போவது போல் கட்சியினர் பேசுகிறார்கள்.

இதே போல் தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் தொகுதியை நமக்கு விட்டு தருவார்களா?

ராகுல் நெல்லைக்கு பிரசாரத்துக்கு வந்தபோது மேடையில் காமராஜர் படம், காங்கிரஸ் கொடி கூட இடம் பெறாத நிலை இருந்தது. காங்கிரஸ்காரர்களை மேடை பக்கம் கூட அனுமதிக்கவில்லை.

அதன்பிறகு மாநில தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொடிகள் கட்டப்பட்டன.

கடந்த தேர்தலில் தி.மு.க. வென்றது வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான். அதற்கு காரணம் ராகுலின் நடைபயணத்தால் உருவான எழுச்சிதான் என்றார்.

சில மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் திமு.க.வினரின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. காங்கிரசார் முன்னெடுக்கும் பணிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் எப்படி வளரும் என்று ஆவேசமாக பேசினார்கள்.

கவுரவ பதவிகளை கூட காங்கிரசுக்கு தர மறுக்கிறார்கள். சம்பாதிப்பதற்கு பதவி கேட்கவில்லை. எங்கள் பகுதியில் நீண்ட காலம் கட்சியில் இருக்கிறோம். கோவில்களில் நியமிக்கப்படும் கவுரவ பதவியான அறங்காவலர்கள் பதவியை கூட வழங்குவதில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

கூட்டணி மேல் மட்டத்தில் திருப்தியாக இருந்தாலும் கீழ் மட்டத்தில் திருப்தியாக இல்லை என்பதை தங்கள் பேச்சில் வெளிப்படுத்தினார்கள்.

மாவட்ட தலைவர்களின் பேச்சுக்களை மாநில தலைவர்களும், மேலிட பொறுப்பாளர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீழ் மட்டத்தில் தொடரும் அதிருப்தியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பின்னர் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது, "உங்கள் பிரச்சினை களை நான் அறிவேன். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கட்சி தலைமை காரணம் அல்ல. மாவட்ட அளவில் செய்யும் தவறுகள்தான்.

எனது தொகுதியான ஸ்ரீ பெரும்புதூரில் கூட உள் ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்கடிக் கப்பட்ட சம்பவம் நடந்தது.

இந்த மாதிரி நடக்கும் பிரச்சினைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என்றார்.

மாவட்ட அளவில் பேசும் போது, தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேரம் பேசி சீட் வாங்க முடிவதில்லை. குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுத் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள்.

Tags:    

Similar News