செய்திகள்

கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை

Published On 2018-08-27 13:08 GMT   |   Update On 2018-08-27 13:08 GMT
திமுக தலைவரும், மிக மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதிக்கான புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக நிதின் கட்கரி மற்றும் முரளிதர் ராவ்-வும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Karunanidhi
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7–ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கூட்டம் நடைபெற்று வருகிறது. நிறைவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 30–ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் 30–ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என தகவல் வெளியானது. இந்த தகவல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அமித் ஷாவிற்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும் எழுந்தது.
 
இந்நிலையில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “தி.மு.க கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது,” என்று குறிப்பிட்டார். இருப்பினும் அமித்ஷா கலந்துக்கொள்வார் எனவே தகவல்கள் பரவி வந்தது.

இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் நிலையில், பா.ஜ.க தரப்பில் இருந்து மத்திய போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரியும், தேசிய செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும், அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Karunanidhi
Tags:    

Similar News