உள்ளூர் செய்திகள் (District)

கோபாலபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: முதல்-அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

Published On 2024-10-06 06:55 GMT   |   Update On 2024-10-06 06:55 GMT
  • சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகு படுத்துகின்றன.
  • நாளை மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னை:

சென்னை. கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட சட்டப்போராட் டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக் கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.8.2023 அன்று சுதந்திர தினவிழா உரையில் 'சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்' என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.2.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.


இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம்.

தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப்பாதை. 2600 சதுர அடியில் அமைக் கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை.


அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.

இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://Inhorticulture.in/kcpetickets விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர் அபூர்வா பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News