தமிழ்நாடு (Tamil Nadu)

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி

Published On 2024-10-06 08:16 GMT   |   Update On 2024-10-06 08:16 GMT
  • ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
  • விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது20). இவர் வேலம்பட்டியை சேர்ந்த பாலாஜி (19) மற்றும் ஒரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோபால்பட்டியை அடுத்த ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்தும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Tags:    

Similar News