விமான சாகச நிகழ்ச்சி.. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு
- சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை:
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர். மேலும் பலர் அரசு பேருந்து மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வண்ணாரப்பேட்டை - DMS மெட்ரோ இடையே, 3.5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.