உள்ளூர் செய்திகள்

சென்னை, ஆவடி, தாம்பரம் பகுதிகளில் 2500 விநாயகர் சிலைகள் கரைப்பு

Published On 2024-09-15 05:02 GMT   |   Update On 2024-09-15 05:02 GMT
  • சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
  • கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

சென்னை:

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 11-ந் தேதி அன்று 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

சென்னை மாநகர் முழு வதும் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இதுவரை கரைத்தது போக 1,300 சிலைகள் இன்று 17 வழித் தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறை முகம் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. இதேபோன்று தாம்பரம் சுற்று வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த 600 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது.

சென்னை மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்தார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மேற் பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

ஊர்வல பாதைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து ஊர்வலத்தை கண்காணிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பிற்பகலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளுமே கடைசி நாளான இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

பாரத் இந்து முன்னணி சார்பில் புளியந்தோப்பு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி. பிரபு ஜி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோன்று அனைத்து இந்து இயக்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் விநாய கர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் ஊர் வலம் மற்றும் சிலை கரைப்பை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News