உள்ளூர் செய்திகள்

267 கிலோ தங்கம் கடத்தல்: அடுத்தடுத்து சிக்கும் விமான நிலைய அதிகாரிகள்

Published On 2024-07-04 08:34 GMT   |   Update On 2024-07-04 08:34 GMT
  • யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.

இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News