தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்நாட்டின் தலைநகரத்தை கொலை நகரமாக மாற்றியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்- ஓபிஎஸ்

Published On 2024-07-06 09:32 GMT   |   Update On 2024-07-06 09:32 GMT
  • எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சி ஓடிய காலம் மாறி, ரவுடிகள் ராஜ்யமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. துணைபோய்க் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது சமூகவிரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூர், வேணுகோபால சுவாமி தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு இரவு சுமார் 7.00 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கொலைவெறித் தாக்குதலின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியை, ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னையின் பிரதான இடத்தில் வெட்டி சாய்க்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பது துளிகூட இல்லை என்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும் கொலைகள் நடைபெறும்போது, தனிப்படை அமைப்பதும், ஒரு சிலரை பிடித்து கைது செய்வதும், வாடிக்கையாக இருக்கிறதே தவிர, சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு போல பல வழக்குகள் பல ஆண்டுகளாக சீரியல் போல ஒடிக் கொண்டிருக்கின்றனவே தவிர, கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்தே தி.மு.க எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News