உள்ளூர் செய்திகள் (District)

சுற்றுலா பயன்பாட்டுக்கு 5 புதிய நவீன சொகுசு பஸ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2024-07-01 07:06 GMT   |   Update On 2024-07-01 07:06 GMT
  • மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்-மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும்.

8 நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்போது சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய்எ மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பஸ்கள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பஸ் என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பஸ்களில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜி.பி.எஸ்.கருவி, ஒய்பை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் மணிவாசன், மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News