உள்ளூர் செய்திகள் (District)

உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் சுற்றித்திரிந்த வங்கதேச நாட்டினர் 6 பேர் கைது

Published On 2024-09-25 15:28 GMT   |   Update On 2024-09-25 15:28 GMT
  • 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.
  • சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்:

வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன தரப்பில் இருந்து அவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

இதைத்தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்தது தெரியவந்தது. அவர்கள் வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (வயது 39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News