உள்ளூர் செய்திகள் (District)

மகன் இறந்ததை கூறாமல் உடலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்- பெற்றோர் குற்றச்சாட்டு

Published On 2023-03-31 10:49 GMT   |   Update On 2023-03-31 10:49 GMT
  • மாலை 3 மணி அளவில் கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக பிரத்தீஸ்வரனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • மாணவன் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பிரத்தீஸ்வரன்(வயது13) . பொன்னேரி கொக்கு மேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பிரத்தீஸ்வரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை 3 மணி அளவில் கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக பிரத்தீஸ்வரனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவன் பிரத்தீஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர். மாணவன் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

நேற்று இரவு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் திடீர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சியை கைப்பற்றினர். அதில் மாலை 3 மணியளவில் மாணவர் பிரத்தீஸ்வரன் கழிவறைக்கு செல்வதும் சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து பதட்டத்துடன் வெளியே வருவதும் பதிவாகி இருந்தது.

மாணவர் பிரத்தீஸ்வரன் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மாணவர் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் மகன் பிரத்தீஸ்வரன் மாலை 3 மணிக்கு பள்ளியில் இறந்து உள்ளான். ஆனால் இதுபற்றி எங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. மற்ற மாணவர்கள் கூறிய பின்னரே மாலை 4 மணிக்கு எங்களுக்கு தெரிந்தது. பிரத்தீஸ்வரன் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று ஆரணி அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் பிரத்தீஸ்வரன் மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News