உள்ளூர் செய்திகள்

துப்பறியும் நாய் லீமாவுக்கு நடந்த பணி நிறைவு விழா

Published On 2024-07-26 08:02 GMT   |   Update On 2024-07-26 08:02 GMT
  • குற்ற வழக்குகளில் மோப்ப நாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • லீமா என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது.

திண்டுக்கல்:

சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் போலீ சாரின் விசாரணையை கடந்து பலரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடை பெறும்போது தற்போது சி.சி.டி.வி. காட்சிகளை முதன்மையாக கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்படும்.

இதனையடுத்து மோப்பநாய் சோதனை நடைபெறும். போலீசார் மூலம் நன்கு பயிற்சி பெற்ற துப்பறியும் நாய் குற்ற சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து குற்றவாளிகள் தப்பி சென்ற வழித்தடத்தை சுட்டிக்காட்டும்.

மேலும் அவர்கள் ஏதேனும் பொருட்களை விட்டு சென்றிருந்தாலும் அதனையும் அடையாளம் காட்டும். அந்த வகையில் குற்ற வழக்குகளில் மோப்ப நாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் துப்பறியும் பிரிவில் லீமா என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது. பிறந்து 45 நாட்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட லீமா கடந்த 8 ஆண்டுகளாக வெடிகுண்டு கண்டுபிடிப்பதிலும், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்தது. இந்நிலையில் இன்றுடன் லீமா பணி ஓய்வு பெற்றது.

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் லீமாவுக்கு பணி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற லீமாவுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், டி.எஸ்.பிக்கள் ஜோசப் நிக்சன், சிவக்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், துப்பறியும் நாய் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் லீமாவுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து கண்ணீர் மல்க விைட கொடுத்தனர்.

காவல்துறையில் ஒரு அதிகாரி பணி நிறைவு பெற்றுச் செல்வதுபோல லீமாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்றும் தமிழகத்திலேயே இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக நடத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News