உள்ளூர் செய்திகள்

ஆவணி மாத அமாவாசை: மேல்மலையனூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2024-09-03 06:46 GMT   |   Update On 2024-09-03 06:46 GMT
  • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது.
  • கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

இக் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது. இதையடுத்து இரவு 11.30 மணிக்கு உற்சவர் அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News