உள்ளூர் செய்திகள் (District)

விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த புஸ்சி ஆனந்த்

Published On 2024-08-29 04:44 GMT   |   Update On 2024-08-29 04:44 GMT
  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
  • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

Similar News