உள்ளூர் செய்திகள் (District)

தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசு வாங்குகிறீர்களா? உஷாராக இருங்க...

Published On 2024-10-08 07:57 GMT   |   Update On 2024-10-08 07:57 GMT
  • போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன.
  • பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அனைத்து பொருட்களுமே தற்போது ஆன்லைனில் கிடைக்கும் நிலையில் பட்டாசுகளையும் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே வாங்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறார்கள்.

அதற்கேற்ப பல்வேறு பட்டாசு விற்பனை நிறுவனங்களும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று விற்பனையில் ஈடுபடத் தொடங்கி உள்ளன.

அதில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறைந்த வகையில் பட்டாசுகளை வாங்குவதற்கு போட்டி போட்டு ஆன்லைனில் பணத்தை செலுத்தி விட்டு பட்டாசு பார்சல்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் வலை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரிகளை தொடங்கி ஆன்லைனில் பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை அனுப்பாமல் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் சில்லரை விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் அதையெல்லாம் மீறியே ஆன்லைனில் பட்டாசு விற்பனை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.


இதனை பயன்படுத்தித் தான் ஆன்லைனில் மோசடி கும்பல் ஏமாற்றுவதற்கு திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பணத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் பட்டாசு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News