உள்ளூர் செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தாம்பரத்தில் போலீசார் சிறப்பு ஏற்பாடு

Published On 2024-08-02 05:10 GMT   |   Update On 2024-08-02 05:10 GMT
  • நாளை முதல் 14-ந் தேதி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.
  • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு.

சென்னை:

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 14-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி இடையிலான ரெயில் சேவையினை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட் டுள்ள நேரங்களில் ரெயில் போக்குவரத்து சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும் மற்றும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையில் மட்டுமே இயக்கப்படும்.

எனவே 14-ந் தேதி வரை சென்னை மாநகர பேருந்து போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்துகள் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும் மீண்டும் செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்பட உள்ளது.

பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம் இரும்புலியூர் பேருந்து நிலையம், இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பல்லாவரம், குரோம் பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம் பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News