உள்ளூர் செய்திகள் (District)

டானா புயல்: புதுச்சேரியில் திடீரென கடல் உள்வாங்கியது

Published On 2024-10-23 06:45 GMT   |   Update On 2024-10-23 06:45 GMT
  • கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது.
  • ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.

புதுச்சேரி:

புதுவை கடலில் கடந்த 19-ந் தேதி இரவில் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டது.

மறுநாள் முதல் கடல் அலை பச்சை நிறத்தில் மாறியது. இது 2 நாட்கள் நீடித்தது. அப்போது லேசான துர்நாற்றமும் வீசியது. கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது. ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.

இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

கடல்நீர் பச்சையாக மாற மைக்ரோ ஆல்கா நாட்டிலுக்கா என்ற கடல்பாசிதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் கடல் பழைய நிலைக்கு திரும்பியது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடினர். ஆனால் மாலையில் திடீரென சுமார் 30 அடி தூரத்துக்கு கடல் உள் வாங்கியது.

நீலம், பச்சை நிறத்தில் கடல் அலை நிறம் மாறியதும், கடல் உள் வாங்கியதும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் நீர் உள்வாங்கியது குறித்து நிபுணர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் பருவகால மாற்றத்தின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

புயல் உருவாகும்போது ஒரு பகுதியில் கடல் உள் வாங்கியும், மற்றொரு பகுதியில் அதிக சீற்றத்துடனும் காணப்படும். வங்க கடலில் டானா புயல் உருவாகியுள்ளதால் புதுவையில் கடல் உள்வாங்கியிருக்கலாம். புயல் கரையை கடந்தவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News