உள்ளூர் செய்திகள் (District)

போதை ஒழிப்பு பேரணி: கவர்னர் ஆர்.என்.ரவி 6-ந்தேதி சங்கரன்கோவில் வருகை

Published On 2024-10-03 07:25 GMT   |   Update On 2024-10-03 07:25 GMT
  • தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது.
  • போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் வருகிற 6-ந்தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2 கிலோ மீட்டர் தூரம் போதையில்லா தென்காசியை உருவாக்கும் வகையில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது.


இந்த பேரணியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் ஷோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. அதிக அளவிலான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாபெரும் பேரணியை நடத்துகிறோம் என்றார்.

பின்னர் அவரிடம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளாரே? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், மது விற்பனை தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மத்திய அரசு எடுத்தால் சட்டம் ஒழுங்கு, காவல் துறையையும் மத்திய அரசு எடுத்தால் மாநில அரசுகள் சம்மதிக்குமா என கூறினார்.

மதுவிலக்கு கொண்டுவர மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். பழியை மத்திய அரசு மீது சுமத்த கூடாது என்றார்.

காந்தி மண்டபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக கவர்னர் ரவி சுத்தம் செய்த போது மது பாட்டில் கிடந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

கவர்னர் அரசியல் செய்வதாக பலர் கூறுகின்றனர். இதனை அரசியல் செய்யக்கூடாது. இதே கொள்கையை தான் தேசப்பிதா காந்தியும் அறிவுறுத்தினார். அதற்காக அவர் அரசியல் செய்தார் என கூற முடியுமா? எனவும் கூறினார். 

Tags:    

Similar News